மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





பன்னிரெண்டு ராசிகளில் கடைசியாக வருவது மீனம். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் குருவே அதிபதியாகும். இப்படி ராசிநாதனே உத்யோக ஸ்தானாதிபதியான பத்தாம் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார். அதாவது தனுசு குருதான் உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிக்கிறார். எனவே, தன் வீட்டு வேலையாக நினைத்து பொறுப்பாக அலுவலகத்தில் வேலை பார்ப்பீர்கள். ‘‘எங்களைப் போல சீனியர்மோஸ்ட் பலபேர் இருக்கும்போது, வந்து ஆறே மாசம் ஆன அவர்கிட்ட போய் இவ்ளோ பெரிய பொறுப்பை ஒப்படைக்கறீங்களே. இது நியாயமா’’ என்று மூத்த அதிகாரிகள் முணுமுணுத்தாலும், அதையும் தாண்டி நிர்வாகம் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்கும். வீட்டிலிருக்கும்போது கூட அலுவலக வேலையைப் பார்ப்பதுதான் உங்கள் சுபாவம்.

அலுவலக ரகசியங்களைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு இணை வேறு யாரும் இல்லை. அதேசமயம் போட்டி நிறுவனங்களில் ஒற்றராக இருந்து கம்பெனிக்கு விஷயங்களை சேர்த்துக் கொண்டு வருவதிலும் கில்லாடியாக இருப்பீர்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் கன கச்சிதமாக காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். ஆனால், எதிர்ப்புகளை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

ஒரே மாதிரி வேலை செய்வது பிடிக்காது. உங்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ஏதேனும் ஒரு வேலை எப்போதும் இருக்க வேண்டும். இதனாலேயே, உங்களில் பலர் கடல் கடந்து கஷ்டப்பட்டெல்லாம் வேலை பார்ப்பீர்கள். எப்போதுமே உறவினர்கள், நண்பர்களை வளர்த்து விடுவீர்கள். பிறகு அவர்களாலேயே அவமானப்பட்டும் ஒதுங்குவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களிடம் நைச்சியமாகப் பேசி அடிமைப்படுத்துவார்கள். நீங்களும் அதை நம்பி ஏமாறுவீர்கள். உங்களில் பலர் வெகு தூரம் பயணம் செய்து, வேலைக்கு வருவீர்கள். உங்களில் பலர் தந்தையாரை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறுவீர்கள். அப்பாவை பின்பற்றுபவராக இருந்தாலும், வித்தியாசப்பட வேண்டுமென்று முயற்சிப்பீர்கள். உங்களில் நிறைய பேர் சுயதொழில் செய்வீர்கள். நீதித்துறை, தணிக்கைத்துறை, வங்கி அதிகாரி, பதிப்பகம் போன்ற துறைகள் உங்களுக்கு பொதுவாகவே நற்பெயர் வாங்கித் தரும். எத்தனை வந்தாலும் சேமிக்க முடியாத அளவுக்கு செலவுகளும் மிகுந்து வரும்.

பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சகல விஷயங்களையும் காத்திருந்து காத்திருந்துதான் அடைவீர்கள். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். அலுவலகத்தில் எத்தனை பெரிய ரகசியங்கள் இருந்தாலும், தனது இருக்கைக்கு அந்த விஷயம் வரும்வரை பொறுமை காப்பீர்கள். அதனாலேயே உங்களிடம் எல்லோரும் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். சட்ட நுணுக்கம் தெரிந்தவர்களாகவும், எதிராளிகளை பேசவிட்டு ஆழம் பார்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். எங்கு தவறு நடந்தாலும் உடனடியாக தட்டிக் கேட்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கறாராக இருப்பீர்கள். உங்களுக்கு எதிரான விஷயங்களையெல்லாம் சமயோசித புத்தியால் வென்று விடுவீர்கள். சட்டம், ஆடிட்டிங், வங்கி, பத்திரிகைத் துறை, சிட் பண்டு, கோயில் பூஜை செய்பவர், குடிநீர் வாரியம், பால் பண்ணை என்று வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில் ஐஸ்க்ரீம் கடை, ஜூஸ் கடை, ஒப்பனைப் பொருட்கள் விற்பனை, தண்ணீர் ஊற்று கண்டு பிடித்தல், உபன்யாசகர், பரம்பரையாக நடத்தி வந்த நெல், அரிசி மண்டி என்று ஈடுபடும்போது நல்ல லாபம் கிட்டும்.



உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்த நீங்கள், விழுந்தாலும் வேகமாக எழுந்து விடுவீர்கள். வைராக்கியம் மிக்கவர்களாக விளங்குவீர்கள். எப்போதுமே பெரிய இலக்கை வைத்துக் கொண்டு ஓடியபடி இருப்பீர்கள். பணி செய்யும் இடத்தை வழிபாட்டுத் தலமாக மதிப்பீர்கள். மரியாதை கொஞ்சம் குறைந்தாலும் வேலையைத் துறப்பீர்கள். யாராவது ஏதாவது சொன்னால் அதையே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் கனவுகளில் கூட அது எதிரொலிக்கும். அந்த அளவுக்கு ஆழமாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதுமே அரசாங்கத்தைவிட தனியார் வேலைதான் சரியாக வரும். வேலைக்குச் செல்வதை விட சொந்தத் தொழில் செய்வதைத்தான் மிகவும் விரும்புவீர்கள். சமயப் பிரசாரகர், நர்ஸ், அஞ்சல் துறை, வானொலி - தொலைக்காட்சி நிலையம், சினிமாவில் படைப்புத்துறை, அட்வகேட், கெமிக்கல் எஞ்சினியர், இதய அறுவை சிகிச்சை நிபுணர், புற்றுநோய் நிபுணர், அணுமின் நிலையம் என்று பணியாற்றுவீர்கள். பில்டிங் கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், ஆர்க்கிடெக்ட், காய்கறிக்கடை, கார் சர்வீஸ் சென்டர், தெய்வீகப் பொருட்கள் மற்றும் நூல்கள் விற்பனை, தெய்வச் சிலைகள் செய்தல், சில கலைத்துறை தொடர்பான வியாபாரங்களை மேற்கொள்வீர்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் நாசூக்காக வேலை பார்ப்பீர்கள். பத்திரிகையாளர், விமர்சகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வானொலி-தொலைக்காட்சி நிலையம், பங்குச் சந்தை அலுவலகம், தபால் துறை, மக்கள் தொடர்பு அதிகாரி, உளவியல் நிபுணர் என்று வேலை அமையும். வியாபாரமெனில் பதிப்பகம், நூலகம், ஏ.சி, சர்வீஸ், எலெட்ரானிக்ஸ் கடை, இசை, ஓவியம், நடனம், யோகா பயிற்சிக்கூடங்கள் என்று சில குறிப்பிட்ட துறைகளில் முத்திரை பதித்து சாதிப்பீர்கள்.

மூன்றாம் பாதத்தில் பிறந்த நீங்கள் சினிமாவில் டைரக்ஷன், எடிட்டிங், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சவுண்ட் எஞ்சினியர், சாப்ட்வேர் அலுவலத்தில் டீம் லீடர், இரும்பு உருக்காலை, சிமென்ட் தொழிற்சாலை என்று வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில் பியூட்டி பார்லர், தியேட்டர், கல்யாண மண்டபம் நடத்துதல், கேட்டரிங் கான்ட்ராக்டர், பூக்கடை, டிராவல்ஸ், டூரிஸ்ட் கைடு, போர்டிங் லாட்ஜிங் என்று சிறந்து விளங்குவீர்கள்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் சித்த மருத்துவம், ரயில்வே, காவல்துறை, வருவாய்த் துறை, நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், மதுபானத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்க் என்று பல இடங்களில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில் செங்கல் சூளை, கட்டிடம் கட்டுவதற்கான உபகரணங்கள் விற்பனை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஸ்கேன் சென்டர், ரத்தப் பரிசோதனை நிலையம் என்று சிலவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கலகலப்பாகப் பேசு பவர்களாக இருப்பீர்கள். பேசுவதை வைத்து உங்களை புத்திசாலி என்று முடிவெடுக்கலாமே தவிர, எழுதச் சொன்னால் திணறுவீர்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருப்பீர்கள். அதாவது, பல வேலைகளை பார்த்துத்தான் ஒரு வேலையில் திடமாக அமர்வீர்கள். பத்தோடு பதினொன்றாக எதிலேயும் இருக்கப் பிடிக்காது. ‘‘உன்னை நம்பித்தான் கம்பெனியே இருக்கு’’ என்று சொல்லிச் சொல்லியே உங்களிடம் வேலை வாங்குவார்கள். இப்படி உழைத்துக் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது நொந்து கொள்வீர்கள்.

ரேவதி முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் மேடைப் பேச்சாளர், சட்ட வல்லுனர், ஆசிரியர், கிரிக்கெட் கோச், தாவரவியல் ஆராய்ச்சியாளர், காசநோய் மருத்துவர், வீணை வித்வான், தவில் வாசிப்பவர், வங்கித் துறை, சர்வேயர், வனத்துறை, வன விலங்கு காப்பகம், ராணுவம், சிபிஐ என்று சில துறைகளில் வேலை பார்ப்பீர்கள். அதுவே சொந்தத் தொழில் அல்லது வியாபாரமெனில் பள்ளி, கல்லூரி வைத்து நடத்துதல், கம்ப்யூட்டர் அகாடமி, இன்சூரன்ஸ், மெடிக்கல் ஷாப், டிடெக்டிவ் ஏஜென்சி, மணமக்கள் தகவல் மையம் என்று தொடங்கி நல்ல முன்னேற்றங்கள் காண்பீர்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்த நீங்கள் கண்ணாடித் தொழிற்சாலை, ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், சினிமா எடிட்டிங், ரேஷன் கடை, பால் பண்ணை, வங்கி மேனேஜர், பத்திரிகை அலுவலகங்களில் பிழை திருத்துனர் என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். அதுவே வியாபாரமெனில், ஜிம், ரெஸ்டாரென்ட், வட்டிக்கடை, மசாலா சாமான்கள் தயாரித்தல், அரிசி மண்டி, எண்ணெய்க் கடை, தேங்காய் வியாபாரம், போட்டோ ஸ்டூடியோ, எக்ஸ்ரே-ஸ்கேன் சென்டர், குளிர்பானக் கடை, இனிப்பகம் என்று பல்வேறு விதங்களில் சம்பாதிப்பீர்கள்.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாசனைத் திரவிய நிறுவனம், நிலக்கரிச் சுரங்கம், பொழுது போக்குப் பூங்கா, பத்திரிகை அலுவலகம், வனத்துறை, அஞ்சல்துறை, தனியார் கூரியர், காகித ஆலை, பெட்ரோல் பங்க், இரும்பு உருக்காலை, கோழிப் பண்ணை, கல்லூரி விரிவுரையாளர் என்று வேலைகளில் அமர்வீர்கள். அதுவே வியாபாரமெனில் விறகுக் கடை, மருத்துவமனை உபகரணங்கள் தயாரிப்பு, கார் வாங்கி விற்றல், இரு சக்கர வாகனம் சர்வீஸ் சென்டர், லாட்ஜ், ஹோட்டல், பைனான்ஸ், பீங்கான் பொருட்கள் தயாரித்தல், மசாலா தூள், நகைக் கடை வைத்தல் என்று குறிப்பிட்ட துறைகளில் நல்ல நிலைக்கு வந்து விடலாம்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பட்ஜெட் குழுவில் அங்கம் வகித்தல், அரசு ஆணைகள் அச்சடிக்கும் இடம், நாசிக் போன்ற பணம் அச்சடிக்கும் இடங்களில் வேலை, இமிகிரேஷன், பாஸ்போர்ட் அலுவலகம், வருமான வரி, சுங்க வரி, மின்வாரி யம், போக்குவரத்து அலுவலகம், சினிமாவில் கதை-வசனம் எழுதுதல், பத்திர எழுத்தாளர், வேத பாடசாலை, கோயில் அதிகாரி, ஓதுவார், நடிகர், வசனகர்த்தா, நகைச்சுவை பேச்சாளர், மிமிக்ரி செய்தல் என்று பல விதத்திலும் திறமையோடு இருப்பீர்கள். வியாபாரமெனில் அயல்நாட்டுப் பணிக்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் ஏஜென்ட், தங்க நகை வேலை செய்தல், வறுகடலை நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் என்று பல்வேறு துறைகளில் சம்பாதிப்பீர்கள்.
மீன ராசியில் பிறந்த உங்களின் வேலை ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். எனவே ஆயுதம் ஏந்திய பெருமாளை வணங்குவது நல்லது. சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாரை வணங்குவது மிகுந்த நலம் பயக்கும். திருமாலின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையும், ஆதியந்தம் இல்லாததும் பெருமாளை விட்டுப் பிரியாததும் சுதர்சனமே ஆகும். முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி தரும் இந்த திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.  

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் எனும் திவ்யதேசத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை தரிசித்தால், உங்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய குழப்பங்கள் எளிதாகத் தீரும். இத்தலம் மதுரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. (தீர்வுகளைத் தேடுவோம்...)