கவிதைக்காரர்கள் வீதி




திரும்பத் திரும்ப...
ஒட்டி நின்றிருந்த லாரியின்
சக்கரத்தை விட
ஓரடி உயரம் குறைவான,
பள்ளி சீருடை
பாதி கசங்கிய நிலையில்
காலணிகள் ஏதுமின்றி,
சாலையைக் கடக்க
காத்திருந்த சிறுவன்,
கடந்து கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிக்னலிலும்.

அப்படியே
இருப்பதுதான்...

என்றைக்காவது பார்த்தால்
கேட்பதற்கென்று
சில கேள்விகள்
என் வசம்.
என்றைக்காவது பார்த்தால்
கேட்கப்படாமல்
அவை அப்படியே
இருப்பதுதான் அழகு.

இன்னொரு...

ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு பறவை
இன்னொரு சந்தர்ப்பம்
தரப்படுமெனில்
இப்போது போலவே
இருக்கும்
இன்னொரு வாழ்வும்.

தீர்ப்பு

நம்மைப் பற்றியதே
நம் ஒவ்வொரு  தீர்ப்பும்.

செல்வராஜ் ஜெகதீசன்