காதலில் ஜெயித்த அமலாபால்



கல்யாண சீக்ரெட்ஸ்

சிம்புவும் ஹன்சிகாவும் ‘சுமுகமாக’ பிரிந்தார்கள் என்ற செய்தி, அந்த வெகு சுவாரஸ்ய காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க... இப்போது கிளம்பியிருப்பது டைரக்டர் விஜய்-அமலா பால் திருமணம் என்ற புதுக்கதை... ‘இருக்கிற எலெக்ஷன் டென்ஷன்ல எங்களுக்கு இதெல்லாம் தேவையா’ என சிலர் கேட்க, ‘அப்படியா செய்தி... என்ன விஷயம்? எப்படி? நிஜமா?’ எனக் கேள்வி களோடு பரபரக்கிறது வெகுஜனம். ஆமாம் மகாஜனங்களே...

ஜூன் 16 அல்லது 18ம் தேதி சென்னையில் திருமணம்.
அடடா, கொஞ்சம் பூர்வாசிரம காதல் கதை தெரிஞ்சுக்கலாமா...
இதோ...

‘தெய்வத்திருமகள்’ படத்தில்தான் விஜய் டைரக்ஷனில் நடிக்க வந்தார் அமலாபால். அதற்குமுன் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு பெரிய ப்ரேக் கொடுத்தது இந்தப் படம்தான். விக்ரம், விஜய் என அடுத்தடுத்த காம்பினேஷனோடு சினிமாவில் அதிக சௌகர்யமான இடம் கிடைத்தது அமலாவுக்கு. பிறகென்ன..? இரண்டு பேரும் ஒவ்வொருவரின் தேவைகளில் அக்கறைப்பட்டார்கள். அமலா ஏர்போர்ட் போய், அங்கிருந்து சொந்த ஊர் போய் சேர்கிற வரைக்கும் கவலைப்பட்டார் விஜய். ‘அடுத்து நடிக்கிற படம் என்ன கதை? அது சரியா வருமா?’ என்றெல்லாம் அமலாவிற்கு அட்வைஸ் பாசம் காட்டினார். அப்போதே கிளம்பியது காதல் புரளி.

ஆனால், அப்பாவிச் சிரிப்பு தான் விஜய்யின் அடையாளம். இந்தப் பூனையும் ‘பால்’ குடிக்குமா என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அமலாவின் இதயத்தில் புகுந்தார் ரொம்பவும் இயல்பாக. ஒரு லுக், ஒரு ஹலோ, ஒரு ஸ்மைல்... அத்தனை ஹார்மோன்களும் கூடி கும்மியடிக்க அப்போதே காதலை முடிவு செய்துவிட்டார்கள். முதலில் விருப்பம் தெரிவித்தது அமலாதான்.
அரசல்புரசலாக விஜய் வீட்டிற்குத் தெரிய, அப்பா ஆரம்பத்திலேயே பச்சைக் கொடி காட்டிவிட்டார். அம்மாவின் கண்ணீருக்குத்தான் விஜய் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது. அப்பா, அம்மாவின் செல்லப்பிள்ளை என்பதால் மாறுபட்டு எந்த முடிவையும் எடுக்கத் துணியவில்லை. ‘நீங்களும் வேண்டும், அமலாவும் வேணும்’ என இரண்டு கண்ணும் முக்கியம்தான் என்று முடிவாய் நின்றதில், உணர வைத்ததில் அம்மாவை எதிர்ப்பிலிருந்து இறங்கி வர வைத்தார் விஜய்.

விஜய் வீட்டில் எட்டு மாதத்திற்கு முன்பே கேரளாவிற்குப் போய் அமலாபால் உறவுகளைப் பார்த்து வந்தார்கள். மிலிட்டரியில் இருக்கிற தம்பி, அமலா ஒரு பெண் என சின்னக்குடும்பம். அமலாபாலின் குடும்பத்தினரும் விஜய்யின் பெற்றோருடைய அறுபதாம் கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தார்கள். இப்படி இரு குடும்பங்களும் இணங்கிவிட்டாலும், தங்கள் தரப்பு சொந்தங்களை சமாதானம் செய்ய விஜய் குடும்பம் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது.

இதற்கிடையே நண்பர்கள், ‘வெளியே சொல்லி விடலாமே’ எனக் கேட்டபோதும் இரண்டு பேரும் மௌனம் சாதித்தார்கள். ‘‘சூர்யாவும் ஜோவும் எத்தனை வருஷம் லவ் பண்ணினாங்க... ஊர்ல அவங்க காதல் தெரியாதவங்க யாராவது உண்டா? ஆனா அவங்களால் ‘ஆமா... காதலிக்கிறோம், கல்யாணம் செய்துக்கப் போறோம்’னு சொல்ல முடிஞ்சுதா? அப்படி ஒரு நிலையிலதான் நாங்க இருக்கோம்’’ என்று சொல்லத் தலைப்பட்டார்கள்.

‘சைவம்’ பாடல் வெளியீட்டில் பார்த்திபன் வேடிக்கையாய் திரி கிள்ளிப் போட, சரண்யா பொன்வண்ணன் ஒன்றுமே அறியாத அப்பாவியாய், ‘‘இந்தப் பையன் விஜய்க்கு அருமையான நல்ல பொண்ணா அமையணும். அதுவும் இந்த வருஷத்திற்குள்ள’’ எனக் கடவுளை வேண்ட, இருவரும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார்கள்.

எல்லாம் நிறைவாய் அமைந்து முடிந்ததில், இதோ... ஜூன் மாதம் திருமணம். ஊர் கூடி நடத்தும் காதல் கொண்டாட்டம். அப்பா, அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மகிழ்ந்திருக்கிறார் விஜய். ‘ஐ லவ் யூ அப்பா, ஐ லவ் யூ அம்மா’ எனப் பாட்டுப் பாடாத குறைதான்.

ஒரு விஷயம்... திருமணத்திற்குப் பிறகு அமலாபால் நடிக்க மாட்டார். அதைத் தெளிவாக விஜய் வீட்டில் சொல்லி விட்டார். அமெரிக்காவில் இருந்த விஜய்யை அலைபேசியில் பிடித்தால், ‘‘சார்... கொஞ்சம் பொறுங்களேன்... வந்திடுறேன். நாலே நாள் வெயிட் பண்ணுங்க...’’ எனச் சிரிக்கிறார். அது விஜய் ஸ்பெஷல் ‘ஜென்டில்மேன்’ புன்னகை!

- ஜேம்ஸ்பாண்ட்