நியூஸ் வே



முதல் தடவையாக ஹீரோவாக நடிப்பதால் சந்தானம் வெகு சிரத்தையாக நடித்து வருகிறார். காமெடியை மறக்கடிக்கிற அளவுக்கு படப்பிடிப்பில் சீரியஸ் ஆக இருக்கிறார். ‘மரியாதை ராமண்ணா’ தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றதால் இந்த டென்ஷன் அவருக்கு வந்து விட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து வருஷத்துக்கு ஒரு படம் ஹீரோவாம்!

ஷகிலா எழுதிய சுயசரிதையின் அடிப்படையில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்கள். அதில் இளவயது ஷகிலாவாக நடிக்க அஞ்சலியின் டேட்ஸ் கேட்கிறார்கள். சம்பளமாக மட்டும் 1 சி கேட்பதால், தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். கால்ஷீட் கொடுத்துவிட்டால், அங்கே ‘டர்ட்டி பிக்சர்’ மாதிரி, இங்கே ஷகிலா படம்தான்!

அனிருத், யுவன் எல்லாம் வண்ணத்திரையில் வந்து ஸ்டெப்ஸ்(!) செய்துவிட்டு போகும்போது ஹாரிஸ் ஜெயராஜ் மட்டும் சும்மா இருப்பாரா! ரவி கே.சந்திரன் கேமராவில், ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். நமக்கு இதுதான் பிடிக்கும் என்றால், இனிமேல் முழு நீளத் திரையில் கூட நடிக்கலாம். அப்பவும் மெதுவாகத்தான் நடிப்பீங்களா ஹாரிஸ்?

மதுரையில் நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரியில் திடீரென மேடை ஏறி ராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பாலா, ‘‘நான் இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படம், ராஜாவுக்கு ஆயிரமாவது படமாக அமைந்ததற்கு நான் பாக்கியம் செய்திருக்கிறேன். படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, நாயகன் சசி, நான்... மூவருமே மதுரை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது அபூர்வமாக அமைந்துள்ளது’’ என அகமகிழ்ந்தார்.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை பீல்டுக்கு இறக்குவதற்கான ‘சகாப்தம்’ ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ரெடி. இப்போதுதான் திடீரென்று விஜயகாந்த் அந்தப் படத்தில் ஒரு கேரக்டர் செய்ய விரும்புகிறார். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து ஸ்கிரிப்ட் தயாரிக்கும் வேலை நடக்கிறது.

மகிழ்திருமேனியின் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்துவது 7 வில்லன் களாம். ரியல் லைஃபில் ஹீரோயின்களின் மனசைத் திருடும் ஆர்யாவுக்கு, இந்தப் படத்தில் நல்ல காரியத்துக்காக கொள்ளையடிக்கும் கேரக்டர் என்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் வேட்டியிலேயே இருக்கிறார் ரஜினி. விருந்தினர்களை சந்திக்கும் அறையில், பாபா யோக நிலையில் இருக்கும் பெரிய ஓவியமும், தத்துவம் பொறித்த விவேகானந்தரின் புகைப்படமும் இருக்கும்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன் - 2’ வெளிவருகிறது. அந்த வெற்றியை திரும்பப் பெற உத்தேசித்து இருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் கேட்டதால், நயன்தாரா நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். கூடவே வெள்ளை தமன்னாவும் நடிக்கிறார். இதை சந்தோஷமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தமன்னா. ஆர்யான்னாலே சந்தோஷம்தானா மக்களே!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு ‘பப்பு’ என்பது செல்லப் பெயர். இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ‘மிட்டு’ என வீட்டில் செல்லப் பெயர். நண்பர்களும் அப்படித்தான் அழைக்கிறார்கள். பப்பு, மிட்டு நல்லாயிருக்கே...

ஐந்தாவது தடவையாக டைரக்டர் ஹரியும், சூர்யாவும் ஒன்று சேரப்போகிறார்கள். அதை சூர்யாவே தன் சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறார். சூர்யாவுக்கு இன்னும் பெரிய மீசை வைக்கப் போறீங்களா ஹரி?

பிரபுசாலமனின் ‘கயல்’ படத்தின் நாயகி ஆனந்திக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே பட வாய்ப்புகள் கதவைத் தட்டுகிறதாம். ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க அட்வன்ஸ் வாங்கியிருக்கிறார் ஆனந்தி.

கார்த்திக்ராஜாவின் இசையில் ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் பாடியிருக்கிறார் போனி வர்மா. ‘யார் இது?’ என கேள்வி கேட்கக்கூடாது. நம்ம பிரகாஷ்ராஜ் மனைவிதான். வீட்டில் பாடிக் கொண்டிருந்தவரின் பாடலில் சொக்கிப் போய் ‘‘நீ பாடலாமே’’ என ஊக்கம் தர... அவர் வெளியே வந்துவிட்டார். டான்ஸ் - பாட்டு, குட் காம்பினேஷன்!

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருக்கும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க கோலிவுட்டின் மெகா ஸ்டார்கள் ரெடியாக இருக்க, வடிவேலுவின் கால்ஷீட்டை விரும்பிப் பெற்றிருக்கிறார் பிரபு. யெஸ், பிரபுதேவாவின் அடுத்த தமிழ்ப் படத்தில் வடிவேலுதான் ஹீரோ. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சம்மதித்துள்ள படத்தில் வைகைப்புயலும் நடனப்புயலும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போடப் போகிறார்களாம்.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நடிகர் பசுபதி இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார். அவர் சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும் அவர் விளைவித்ததுதான். நல்லா விஷயமா இருக்கே பிரதர்!

‘பூ’, ‘மரியான்’ படங்களில் நடித்தாலும் இன்னும் பார்வதி மேனன் கேரியர் எந்தக் கட்டத்திற்கும் வரவில்லை. ஆனால், கமல் அவரைக் கண்டுகொண்டு ‘உத்தம வில்லன்’ படத்தில் சரியான கேரக்டர் கொடுத்திருக்கிறார். நினைத்து பூரித்து நண்பர்களுக்கு போன் போட்டுச் சொல்கிறார். இனி சிரிப்‘பூ’ எதிர்பார்க்கலாமா?

அஜித், கௌதம் மேனன் இணையும் படத்தின் முதல் காட்சி பூஜையுடன் ஏ.எம்.ரத்னத்துக்கு சொந்தமான சாய்பாபா கோயிலில் நடந்துள்ளது. பூஜையில் அஜித் கலந்துகொள்ளவில்லை. முதல் ஷெட்யூலை ஈ.சி.ஆர் ரோட்டில் இருபது நாட்கள் நடத்தத் திட்டம். ‘மிருகம்’ ஆதியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

‘கத்தி’க்குப் பிறகு சிம்பு தேவனின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனை அழைத்து வர தீவிர முயற்சி நடக்கிறது. நிச்சயம் புதுக்கதாநாயகி இருந்தால் நல்லது என்பது விஜய் அபிப்பிராயம். அதற்காகத்தான் இந்த மெனக்கெடல்!