இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை



சபாஷ்

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. அதன் நிர்வாக இயக்குநரான சித்ரா விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசினோம்...

‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை. நான் ஓர் ஓவியர். என்னுடைய கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு எனது மகள் ஐஸ்வர்யா 3 வயதில் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாள். எங்கள் செல்ல மகளின் இழப்பு எங்களை கடுமையாக பாதித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம்.

ஒருகட்டத்தில் இப்படி இதுபோன்று இதய நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். இன்னொரு ஐஸ்வர்யா நம் பெண்ணைப் போல உயிரிழக்கக் கூடாது என்பதற்காக அவள் பெயரிலேயே ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினோம். எனவே அந்த 2008-ம் ஆண்டிலேயே அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டோம்.

அரசு அனுமதியுடன் வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அரசு மருத்துவமனையோடு தொடர்புகொண்டு இலவச இதயநோய் கண்டறிதல் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இதுவரை 2200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவைசிகிச்சைக்கு உதவி வருகிறோம். மேலும் 55-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறோம். இதய அறுவை கிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சை தேவைப்
படும் குழந்தைகளுக்கும் உதவுகிறோம்.

எங்கள் அறக்கட்டளையின் சேவையை புரிந்து நிறைய பெரிய மனிதர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி வருகிறார்கள். அவர்களின் உதவியால் இந்த அறக்கட்டளை தொடர்ந்து தன்னுடைய சேவையை செய்து வருகிறது’’ என்கிற சித்ரா விஸ்வநாதன், குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை பெற விரும்புகிறவர்கள் 044 - 2815 1953 என்ற எண்ணிலோ அல்லது aishwaryatrust.org@gmail.com என்ற மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.

- க.இளஞ்சேரன்