தேளின் உயிரியல் தேவை



பூச்சிப் பூக்கள் 24

இரவு நேரத்தில் எப்போதும் போல் சகல முஸ்தீபுகளுடன் இரை தேடி உலாப் போகும் ஆண் தேளுக்கு இரை மட்டுமே பிரதானம்! இந்த ஊர்வலத்தில் ஒரு வாளிப்பான பெண் தேளைப் பார்த்து விட்டால், ஆண் தேளுக்கு அதன் எட்டு அறைகள் கொண்ட இதயம் படபடக்க... ஆசை ஊற்றெடுத்து விடும். உடனே அதைத் தன் வசப்படுத்தத் தயாராகிவிடும். பெண் தேளை நோக்கி தயங்கித் தயங்கி நகரும். இப்படி பவனி வரும் தேளுக்கு தெனாவெட்டெல்லாம் கிடையாது.

ஆண் தேளை பெண் தேள் குறுகுறுவெனப் பார்க்கும். இந்த ஆண் தேள் தன் சொந்த இனமா? தனக்கேற்ற சரியான இணையா? என்பது போன்ற சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்யும். இதன் பிறகு ஒரு ஃபிரமோன் வாடையை வெளியிடும். இதைத் தன் ரசாயன ரிசப்டார் மூலம் கிரகித்து ஆண் தேள் சிலாகிப்பதையும் உறுதி செய்யும். மேலும் சில அதிர்வு அலைகள் மூலமாகவும் ஆண் தேளுடன் இந்தப் பெண் தேள் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறது. வாசனை சம்மதம்!

இந்த இனிய சங்கேதம் கிடைத்த மறு வினாடி, ஆண் தேள் தனது ஜூடரிங்கைத் துவங்கிவிடும். ஜூடரிங் என்பது ஆண் தேள் தம் கைகளோடு சேர்த்து முன்னுடலை கூடிய மட்டும் மேலும் கீழுமாய் அதிவேகத்தில் ரிதமாக அசைப்பதுதான். இதற்கு ஒரு அருஞ்சொற்பொருள் இருக்கிறது. அதாவது ‘‘நான் தயார்’’!

இப்படி வெட்கம் கொப்பளிக்க இரு தேள்களும் எதிரெதிரில் சந்தித்தவுடன், அவற்றின் கலாசார நடனத்தின் அரங்கேற்றம் தொடங்கிவிடும். எதிரெதிரில் டைட் குளோசப்பில் ஒன்றையொன்று பார்த்தபடி, தம் ராக்கெட் கைகளைக் கோர்த்துக் கொள்ளும். அதன்பிறகு வால் முனைகளை மேக்ஸிமம் உயரத்திற்கு நீட்டிக் கொண்டு, ‘‘அன்று வந்ததும் இதே நிலா’’ பாணியில் முன்னும் பின்னுமாகவும் பின்னர் இட வல அரை வட்டமாகவும் இந் நடனம் நகரும். ஜாலி நடனம்.

இந்த ரிச்சுவல் டான்ஸின்போது பல்வேறு ரகசிய சில்மிஷங்களும் நடப்பதுண்டு. தொடு உணர்வு மிகுந்த கைஸின் உரோமங்களில் இரண்டு தேள்களும் எக்கச்சக்கமாய் ஸ்பரிச லூட்டி அடித்துக் கொண்டு தம்மை மன்மத மூடிற்கு மாற்றிக் கொள்கின்றன. கூடவே ஆண் தேள் அடிக்கடி, பெண் தேளை வெகு அருகாமைக்கு இழுத்து கத்திரி முத்தங்களைப் பகிர்ந்து கொள்கின்றது.

இந்த முன் கலவி மயக்கத்தின்போதே கூட ஆண் தேள் பலே எச்சரிக்கையுடன், தனது விஷத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது பெண் தேளின் உடலில் செலுத்திக் கொண்டே இருக்கும். இது பெண் தேளுக்கான ஒரு அபூர்வ ஆசுவாசம்!

இது போக இறுதி ஆலிங்கன சுகமாக, இரு தேள்களும் குறைந்த அவகாசத்தில் பெருவாரியான முத்தங்களைப் பகிர்ந்து ஓய்ந்தபின், பெண் தேள் இணக்கமாக நெருங்கி வரும். ஆண் தேள் இந்த சந்தர்ப்பத்தைச் சற்றும் வீணடிக்காமல் சட்டென்று பெண் தேளின் முதுகில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொள்ளும்.

இதன் பிறகு இரு தேள்களும் தம் வால் பகுதியை முடிந்த மட்டிலும் முழு ஸ்பரிசத்தில் இருக்குமாறு வைத்துக் கொண்டு, நையாண்டி செய்வது போல் தூக்கித் தூக்கி விளையாடும். இந்த சல்லாப நிகழ்வு பன்முறை நிகழ்ந்த பின்பு, தடையேதுமின்றி நிகழும் இவற்றின் சாந்தி முகூர்த்தம்!

தேள்களின் இருட்டு வாழ்க்கையில் இருக்கின்ற ஒரே ஒரு சுகபோகம் என்பது இந்த ஆதி மகரந்தச் சேர்க்கைதான்! ஆண் தேள்கள் இதற்காகவே பிறவி எடுத்ததைப் போல் பொங்கி வழியும் காமத்தோடு அலைந்து, உயிரைப் பணயம் வைத்துக்கூட உறவு கொள்கின்றன. இந்த ஆண் தேள்களுக்கு இரட்டை சுகம் வழங்க இரண்டு கலவி உறுப்புகள், வாகாக வயிற்றின் முதல் கண்டத்தில் அமைந்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் தம் கலவி உறுப்புகளை வெகு பத்திரமாய் வெளியில் தெரியாமல் மூடியே வைத்திருக்கின்றன.

பெண் சுகத்தில் பித்துப் பிடித்து அலையும் ஆண் தேள்களுக்கு, அந்தரங்க உறவு செட்டான தருணத்திலிருந்து, அனைத்தும் முடியும் வரை திக் திக்தான்! அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும். இரு தேள்களும் சேர்ந்து ஒருவழியாக தோதான ஒரு ஸ்பாட்டையும்  தேர்வு செய்கின்றன. அந்த இடத்தில் தனது விந்தணுக்கள் அடங்கிய பையினை நம்பிக்கையோடு பிதுக்கிவிட்டு நாயகியின் முதுகில் குப்புறப் படுத்துக்கொள்வது ஆண் தேள்களின் வாடிக்கை.

இதன்பிறகு இவற்றிற்கிடையே நிகழும் இன்பப் பரிவர்த்தனைகள் ஏராளம். இப்புணர்ச்சி பல மணி நேரங்களுக்கு நீடிப்பதுண்டு. இது ஆண் தேளின் உயிரியல் தேவை. அதன் வலிமைக்குத் தக்கபடி மாறுபடும். எனினும், புணர்ச்சி யின் கால நீட்டிப்பு சமயத்தில் பெண் தேளைப் போரடிக்க வைத்துவிடும். எனவே இவை இடையில் ஜகா வாங்கி விடுவதுண்டு. எனினும் ஆண் தேளுக்குப் பயம் இன்னும் மிச்சமிருக்கும்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்