கிச்சன் டிப்ஸ்...



கீரை இலையையும், இளந்தண்டையும் சேர்த்து வேகவைத்தால் இலை சீக்கிரம் வெந்து விடும். தண்டு வேகாமல் இருக்கும். முதலில் தண்டை  வேகவைத்து விட்டு பின்பு இலையை கலந்து வேகவைக்க வேண்டும். ரொட்டியில் பஜ்ஜி தயாரிக்கும்போது ரொட்டியின் இரு பகுதிகளிலும் தயிரை  பூசி விட்டு மாவில் முக்கி எண்ணெயில் போடுங்கள். இவ்வாறு செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

பாயசம் சிறிது நீர்த்து விட்டால் பொட்டுக்கடலை மாவைக் கரைத்து பாயசத்தில் சேர்த்து விட்டால் பாயசம் கெட்டியாகி விடும். பனீர் துண்டங்களை  வெட்டும் முன் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்து விட்டு பிறகு பனீரை வெட்டினால் உதிராமல், உடையாமல் துண்டங்களாக வரும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே 1 டீஸ்பூன் சோயா மாவு, 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துப்  பிசைந்தால் போதும். பூரி உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது. இட்லி மிளகாய்பொடியில் எண்ணெய் ஊற்றிக் கொள்வதற்குப் பதிலாக  தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாக இருக்கும்.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

கூட்டுக்கு அரைக்க தேங்காய், சீரகம், மிளகாய்க்குப் பதில் தேங்காய், ஓமம், பொட்டுக்கடலை, மிளகாய் அரைத்து போட வித்தியாசமான மருத்துவ குணமுள்ள கூட்டு ரெடி.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

குக்கரின் உள்ளே கறை படிந்திருந்தால் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கி நன்கு தேய்த்தால் கறைகள் மறைந்து விடும்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

எந்தவிதமான சூப் செய்தாலும் சோள மாவு இல்லாவிட்டால் 1 டீஸ்பூன் அவலை வறுத்து பொடித்து, சலித்து அதில் சேர்த்து கொதிக்கவிட்டால் சூப்  கெட்டியாக, ருசியாக இருக்கும். கார பலகாரங்களை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு செய்தால் பலகாரம் ருசியாக  இருக்கும். நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கீரையை சமைப்பதற்கு முன்பு, சர்க்கரை கலந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் சமைத்தால் நிறம் மாறாமல் இருப்பதுடன், ருசியும் அபாரமாக  இருக்கும்.
- ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91.

மாங்காய் ஊறுகாயில் மாங்காய் துண்டுகள் தீர்ந்து போய் மசாலா மட்டும் இருந்தால் அதில் தேவைக்கு இஞ்சியும், பச்சைமிளகாயும் நறுக்கி 4-5  நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். அதுவும் சுவையான ஊறுகாய் ஆகி விடும். பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு  கன்டென்ஸ்டு மில்க் சேருங்கள். பரோட்டா அதிக ருசியாக இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.