பிசாசு என்ன செய்கிறார்?



மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள பிரயாகா, தமிழில் ‘பிசாசு’ படம் மூலமாக அழகான பேயாக அறிமுகமானார். இதையடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்தில் ஹீரோயின் என்று அறிவிப்பு வந்தது. ஓரிரு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. படம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள்.

பிரயாகா என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய அவருக்கு தொலைபேசினோம்.“இப்போதைக்கு மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் அடுத்து என்ன என்கிற அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும். மலையாளத்தில் குடும்பப்பாங்காக நடிக்கும் நடிகைகள், தமிழ் மற்றும் தெலுங்கில் கிளாமராக நடிப்பதாக குறை சொல்கிறார்கள்.

அது அவரவர் விருப்பம். எனக்கு கிளாமர் செட் ஆகாது என்பதால், குடும்ப குத்துவிளக்காகவே தொடர்வேன். நடிப்புத் திறமைதான் ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகையை நீண்டகாலம் நினைவு வைத்துக்கொள்ள உதவும். கவர்ச்சி காட்டி நடித்தால் அப்போதைக்கு சில வாய்ப்புகள் வருமே தவிர, சில காலத்திலேயே நாம் இருந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது.

‘பிசாசு’ படத்தைத் தொடர்ந்து பேய் வேடத்திலேயே நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஒரே மாதிரி வேடத்தில் தோன்ற எனக்கும் சலிப்பாக இருக்கும், ரசிகர்களுக்கும் அலுத்துவிடும் என்பதால் நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன். இப்போதுதான் எனக்கு இருபத்தோரு வயதாகிறது. பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். படிப்பை முடித்துவிட்டுத்தான் மற்ற விஷயங்களை எல்லாம் முடிவெடுக்க வேண்டும்.

காதலிக்கிறீர்களா, திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் ரொம்ப சின்னப் பெண். இந்த வயதில் இதையெல்லாம் யோசித்துப் பார்க்கக்கூட நேரமில்லை” எனும் பிரயாகா, கேரளாவில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் எல்லாவற்றையுமே உடனுக்குடன் பார்த்து விடுகிறாராம்.

- தேவராஜ்