முகங்களின் தேசம்



ஜெயமோகன்
ஓவியம்: ராஜா


ராமனின் நாடு
மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக் கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் என எதுவும் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில் செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பது கோடி ரூபாய் வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கை விடப்பட்டது.



அந்தத் திரைக்கதையை நான் கோதாவரி நதியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒரு மாத காலம் தங்கி எழுதினேன். அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடு வேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.

ஊருக்கு அப்பால் பிரமாண்டமான தென்னந்தோப்புகள். ‘தென்னங்காடு’ என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை, இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக் கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச் செய்வார்கள்.



தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமென்ட் தூண்களுக்கு மேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரை நோக்கியிருந்தாலும், மறுபக்கம் மிக விரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித் திறந்திருந்தது.  அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும். கோதாவரியின் மிக அதிகமான அகலம் அங்கேதான்.  இரண்டு பெரிய நீர்வழிகளாகப் பிரிந்து கடலை அணுகியது. நடுவே பெரிய மணல் திட்டு. ஒரு தீவு போல தென்னை மரங்களும் புதர்களும் செறிந்து தெரியும்.

கோதாவரியின் நீரோட்டத்தில் அந்தத் தீவு, கப்பல் போல மிதந்துசெல்வதாக பிரமை எழும். கோதாவரியின் நீர்ப்பாசி மணம் படிந்த காற்று அலையலையாக வீசிக்கொண்டிருக்கும். நானும் எனக்கு உதவியாக வந்த தனசேகரும் அங்கே குடியேறினோம். எங்களுக்குக் காவலாக ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அவர்தான் அருகே ஒரு வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை தினமும் கோதாவரியில் சிறு படகில் சென்று எடுத்து வந்து தருவார். வயதானவர். எஞ்சிய நேரம் முழுக்க கீழே சிமென்ட் தூண்களுக்கு நடுவே போடப்பட்ட கயிற்றுக் கட்டிலில் சுருட்டுப் பிடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அமர்ந்திருப்பார்.

நான் அந்த உப்பரிகையிலேயே நாள் முழுக்க அமர்ந்திருப்பேன். காலை எழுந்ததும் திரைக்கதையை கொஞ்சம் எழுதுவேன். பிறகு கண்ணை நிறைத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரியின் அலைகளையும், அதன்மேல் மெல்ல ஒழுகிச் செல்லும் படகுகளின் விரிந்து புடைத்த கொக்குச்சிறகு போன்ற வெண்ணிறப்பாய்களையும், அப்பால் வளைந்திறங்கும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன். மறுகரை மெல்லிய பச்சைக்கோடு போல நெளிந்துகொண்டிருக்கும்.

படகுகளில் இருந்து செம்படவர்கள் வலை விரிப்பதைப் பார்ப்பது ஓர் அபாரமான அனுபவம். படகுகள் சிறகு விரிப்பது போலத் தோன்றும். வலை சென்று நீரில் விழும் இடம் எப்படி கச்சிதமான வட்டமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியப்பேன். படகில் நின்றபடி செம்படவன் வலையை இழுக்கையில் அந்த விசைக்கு எப்படி படகு நகராமல் இருக்கிறது?  சில சமயம் படகு பெரும்பாலும் நீருக்குள் மூழ்கியிருக்க, படகோட்டி வெறும் நீரில் துடுப்பிட்டு செல்வது போலத் தெரியும்.

அந்தியில் வேறு வகை மீன்கள் வரும். ஆகவே சிறிய லாந்தர் விளக்குகளுடன் செம்படவர்கள் நீர்ப்பரப்பில் மீன் பிடிப்பார்கள். இருளுக்குள் அவை விண்மீன்கள் போலத் தெரியும். அலையடிக்கும் விண்மீன்கள். வானத்து விண்மீன்களுடன் அந்தச் செந்நிற விண்மீன்களும் கலந்துவிடும். அவர்களுக்கு என்றே பாடல்கள் உண்டு. நம்மூர் தெம்மாங்கு போல. பல மெட்டுக்களை பின்னாளில் தேவிபிரசாத் சினிமாப் பாட்டுகளாக ஆக்கியிருக்கிறார்.

காற்றின் அலை வேறுபாடுகளுக்கேற்ப அந்தப் பாடல்கள் கிழிந்து கிழிந்து பிசிறுகளாக வந்து காதில் விழும். நான் அந்த மனநிலையை நீட்டிக்கச் செய்வதற்காக தெலுங்கு பாடல்களை மட்டுமே இரவில் கேட்பேன். என்.டி.ராமராவ் நடித்த படங்களுக்காக கண்டசாலா பாடிய பாடல்கள் அற்புதமானவை. கண்டசாலா என்பது ஓர் ஊர், கோதாவரிக்கரையில்தான் அதுவும் இருக்கிறது.  ராமராவை நினைக்காமல் ஆந்திரத்தைப் பார்க்க முடியாது. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். சிலைகளாக, சினிமாப் பாடல்களாக. இன்றைய ஆந்திரம் என்பது ராமராவின் சிருஷ்டி. தேங்கிக் கிடந்த ஆந்திரத்தை மறுபிறப்பு எடுக்க வைத்தவர் அவர். என்றும் மக்களுடன் ஒருவராக இருந்தவர்.
 
கூடவே தியாகய்யர் பாடல்கள். அவையும் ‘ராமா... ராமா...’ என்றுதான் கூவுகின்றன. ‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா’ என்கிறார் தியாகராஜர். ‘அரசனுக்கு அரசனாகத் தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்.’ ராமன் ஒரு கனவு. ஓர் லட்சியம். எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்குத் தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகை மொழியால்தான் உரையாடல். பெரிய சிக்கலொன்றும் இல்லை. சில நாட்களில் தெலுங்கு புரியத் தொடங்கியது. நான் அதிகாலையில் எழுந்து வேலை செய்வதையும், என் செலவுக்கான பணத்தை தனசேகரே அளிப்பதையும், தனா அரைக்கால் சட்டை போட்டிருப்பதையும் கண்ட வாட்ச்மேன், அவரை என் எஜமான் என்று புரிந்துகொண்டார். காலையில் வந்ததும் என்னிடம் ‘‘பெத்த ராயுடு எழுந்ததும் டீ கொண்டு வைத்திருப்பதைச் சொல்லிவிடுங்கள்’’ என்று பவ்யமாகச் சொல்வார். பெத்த ராயுடு ஒன்பதரை மணிக்கு எழுந்து டீயை சாப்பிடுவார். மதிய உணவை பெத்த ராயுடுவுக்கு வாட்ச்மேனே அன்புடன் பரிமாறுவார்.

சமயங்களில் பெத்த ராயுடுவை எழுப்பி உணவூட்டவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக்கொள்வதும் உண்டு. நாங்கள் ஒருமுறை வெளியே நடக்கச் சென்றபோது வாட்ச்மேனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போனோம். அவர் ‘சரி’ என்றார். திரும்பி வந்தால் விடுதி எல்லா வாசல்களும் திறந்து அனாதையாகக் கிடந்தது. அப்பகுதியில் எங்கும் மானுட நடமாட்டம் இல்லை. உள்ளே மடிக்கணினிகள், செல்பேசிகள், பணம், நகை எல்லாம் இருந்தது. நல்லவேளை திருட்டுப் போகவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து வாட்ச்மேன் வந்தார். கையில் இரவுணவு. தனா அவரைக் கண்டபடி திட்டினார். அவருக்கு என்ன புரிந்ததோ, சிரித்தபடி தலையாட்டிக்கொண்டிருந்தார்.  மீண்டும் மறுநாள் அவரிடம் பலமாக எச்சரித்துவிட்டு நடக்கச் சென்றோம். திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடந்தது. அன்று தனா உக்கிர ரூபம் கொண்டார். வாட்ச்மேன் தெய்வீகப் புன்னகை புரிந்தார். மீண்டும் அதேதான் கதை. அவர் அங்கே இருக்கையில் நாங்களே பூட்டிவிட்டும் செல்லமுடியாது.

அப்படியும் ஒருமுறை சாவி வாங்கி பூட்டிவிட்டுச் சென்றோம். அவர் அதன் பின்னர் திறந்திருக்கிறார். அப்படியே போட்டுவிட்டுச் சென்று விட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பகுதியில் ‘டைகர் பிரான்’ எனப்படும் இறால் வளர்ப்புப் பண்ணைகள் மிகுதி. கோதாவரியின் நீரை மோட்டார் வைத்து இறைத்து வயல்களில் தேக்கி இறால் வளர்ப்பு செய்வார்கள்.  அங்கே கேட்டால் அதை ‘டிகர்’ என்பார்கள். ‘டைகர் பிரான்’ என்பதன் சுருக்கம். வளர்ந்த இறால்களை வாங்கிச் செல்ல வந்த லாரியில் ஒருவர் தமிழ் பேசினார். எங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்டு அவரே வந்து எங்களிடம் உரையாடினார். மாணிக்கம் என்று பெயர். திருப்பத்தூர்காரர்.

‘வாட்ச்மேனிடம் இந்தச் செய்தியைச் சொல்லிப் புரியவைக்க முடியுமா?’ என்று அவரிடம் கோரினோம். மதிப்புமிக்க பொருட்கள் இருக்கின்றன, கதவை மூடிவிட்டுச் செல்லும்படி நாங்கள் மன்றாடுவதாகச் சொல்லச் சொன்னோம். மாணிக்கம் சிரித்தார். “சார்! இவங்களுக்கு அதைச் சொல்லிப் புரிய வைக்கவே முடியாது. ஏன்னா இங்க திருட்டே கெடையாது!’’

ஆச்சரியமாக இருந்தது. “பாத்தீங்கல்ல... ஒரு வீட்டையாவது மூடி வைக்கிறாங்களா? பலசமயம் ராத்திரிகூட கதவு தெறந்துதான் சார் கெடக்கும். இங்க திருட்டு நடக்கிறதே இல்ல. அதனால அந்த மாதிரி நெனைப்பே இவங்களுக்கு இல்ல... வேணுமானா சொல்றேன்’’ என்றார். நான் “வேண்டாம்” என்றேன். அது திருட்டை அவர்களுக்கு நாமே கற்பிப்பதுபோல. உண்மையில் எலமஞ்சலி அப்படித்தான் இருக்கிறது என்பதை அதன்பின் கண்டேன். அங்கே குற்றம் என்பதே இல்லை. திருட்டு, அடிதடி எதுவும் இல்லை.

இத்தனைக்கும் எல்லா மளிகைக்கடைகளிலும் சாராயம் கிடைக்கும். குடித்தால் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான்! எல்லா வீடுகளும் திறந்துதான் கிடந்தன. மீனவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு இரண்டு நாட்கள் மீன் பிடிக்கச் செல்வதும் உண்டு.
கோதாவரியில்தான் மிகச்சிறந்த உணவை உண்டேன். மிகக் காரமான உணவு, ஆனால் அற்புதமான சுவை. மீன் குழம்புடன் இட்லி. மீன் குழம்பின்மேல் இரண்டு இஞ்ச் கனத்துக்கு எண்ணெய் நிற்கும். கோதாவரி மீனுக்கு நெய் மிக அதிகம்.

பளிங்குத்தயிர். காலையுணவாக உளுந்து வடை சாப்பிட்டது அங்கேதான். வாட்ச்மேன் எப்போதுமே நிறைய உணவு கொண்டுவருவார். ஏழு, எட்டு பேருக்குத் தாங்கும். ஆந்திராக்காரர்கள் நன்றாகச் சாப்பிடுபவர்கள். நாங்கள் கொறிப்பவர்கள். பரிமாறி எஞ்சிய உணவை வாட்ச்மேன் சாப்பிடுவார். மிச்ச உணவை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்திருப்பார். படகுகள் செல்லும்போது ‘ஓகே ஓ!’ எனக் கூவுவார். பசியுடன் இருக்கும் செம்படவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். விலையேதும் இல்லை. நன்றி சொல்வதும் இல்லை. இயல்பாகச் சாப்பிடுவார்கள்.

ஒருநாள் நாங்கள் நடை சென்றுவிட்டு திரும்பி வந்தோம். விடுதிக்குள் இரு செம்படவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் நட்புடன் சிரித்து, ‘‘பசித்தது, ஆகவே வந்தோம். நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் பாத்திரம் தரையில் இருக்கும் என்றார் அண்ணா. தரையில் இருந்தது. ஆகவே சாப்பிடுகிறோம்” என்றார்கள்.

“நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அவர் எங்கே?” என்றேன். “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப் போயிருப்பார் என நினைக்கிறோம்” என்றபடி, சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு துடுப்பைத் தூக்கிக்கொண்டு படகை நோக்கிச் சென்றார்கள். நான் ‘வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்’ என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில். கம்பன் பாடிய ராமனின் நாட்டில்.

வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது  கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில்  இருக்கிறார்கள்.

படகுகளில் இருந்து செம்படவர்கள் வலை விரிப்பதைப் பார்ப்பது ஓர் அபாரமான அனுபவம். படகுகள் சிறகு விரிப்பது போலத் தோன்றும். வலை சென்று நீரில்  விழும் இடம் எப்படி கச்சிதமான வட்டமாக அமைகிறது!

எலமஞ்சலியில் குற்றம்  என்பதே இல்லை. திருட்டு, அடிதடி எதுவும் இல்லை. இத்தனைக்கும் எல்லா  மளிகைக்கடைகளிலும் சாராயம் கிடைக்கும். குடித்தால் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான்!

(தரிசிக்கலாம்...)