தீவிரவாதிகளின் தோழியா நடிகை லைலா?



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  கன்னத்தில் குழிவிழ சிரித்துக் கொண்டிருந்த முன்னாள் தமிழ் நடிகை லைலா பற்றிய நியூஸ் இல்லை இது! இந்திப் படங்களில் நடிக்க பாகிஸ்தானிலிருந்து வந்த சாரா கான் எனப்படும் லைலா என்ற நடிகையின் சஸ்பென்ஸ் கதை. இந்த லைலா காணாமல் போய் பல மாதங்களாகிறது. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு இவர் தோழியா, அல்லது கடத்திச் செல்லப்பட்டாரா என்று விசாரணை தீவிரம் அடைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்கு நடிக்க வந்தவர் லைலா. ‘வாஃபா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். படு கவர்ச்சியாக நடித்திருந்தாலும், அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்புகள் இல்லை. விளம்பரப் படங்கள், ஆல்பங்கள் என நடித்துக் கொண்டிருந்தார். அவரது குடும்பமே மும்பை வந்து தங்கியது. மும்பை ஓஷிவாராவில் வீடு வாங்கியிருந்தார்.

இந்நிலையில் ‘லைலாவைக் காணவில்லை’ என கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது தந்தை நாதிர் ஷா போலீஸில் புகார் செய்தார். வழக்கமான ‘காணவில்லை’ வழக்காக இதை படு அசிரத்தையாக போலீஸ் டீல் பண்ணியது. ஆனால் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசுக்குக் கிடைத்த தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.

லைலா ஒரு சாட்டிலைட் போன் பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்தியாவில் ராணுவமும், அதிமுக்கியமான சந்தர்ப்பங்களில் போலீசும் மட்டுமே சாட்டிலைட் போனைப் பயன்படுத்த அனுமதி உண்டு. மும்பை தாக்குதலுக்கு வந்த தீவிரவாதிகளின் படகுகளில் சாட்டிலைட் போன் இருந்தது. அதன்பிறகு இந்திய மண்ணில் சாட்டிலைட் போன் பயன்படுத்தியது இப்போதுதான்.

லைலாவுடன் அடீக் கான் என்ற காஷ்மீர் இளைஞர் இருந்தாராம்.  லைலாவின் தந்தை தவிர மற்ற எல்லோரும் அவரோடு காஷ்மீர் போனார்கள். ஆல்பம் ஷூட்டிங் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். போகும்போது வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார்களாம். அதன்பின் ஸ்ரீநகரில் அவர்களது கார் மட்டும் தனியாகக் கிடந்தது. லைலா காணாமல் போன சில தினங்களில் அவரது வீடு மர்மமான முறையில் தீப்பற்றியது. ‘தங்களைப் பற்றி வீட்டில் இருந்த தகவல்களை தீ விபத்து மூலம் தீவிரவாதிகள் அழித்திருக்கலாம்’ என சந்தேகப்படுகிறது போலீஸ். 

லைலாவின் அப்பாவோ, ‘‘யாரோ சதி செய்து என் மகளையும் குடும்பத்தையும் கொன்றுவிட்டார்கள்’’ என்கிறார். அதோடு மகள் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு மாற்றச் சொல்லி அவர் கேட்பதுதான் போலீஸை உறுத்துகிறது. 

மோனிகா பேடிக்கு அடுத்து நிழல் உலகத்தின் தொடர்பில் சிக்கிய நடிகை என்ற பெருமை மட்டும் இப்போது லைலாவுக்கு!
- ரெமோ