பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                         நெருப்பில்லாமல் புகையாது!

சினிமாகாரர்களின் ‘காதல்’ கத்தரிக்காயைக் கடைத்தெருவுக்குக் கொண்டுவர கொஞ்சம் பற்ற வைத்தால் போதும். கொஞ்ச நாளில், ‘ஆமா நாங்க காதலிக்கிறோம்தான்... அதுக்கென்ன இப்ப’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டு ஒத்துக்கொள்வார்கள். இதுவும் அந்த ரகம்தான். ஒரேயொரு வித்தியாசம்... இது பிரிகிற காதல்! திருமணத்துக்குத் தயாரான பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிவின் விளிம்பில் இருப்பதாகச் செய்திகள். நயன்தாரா கழுத்தில் தாலிகட்ட அப்படியென்ன அவசரமோ, விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டை வலியுறுத்தினார் பிரபுதேவா.

 செட்டில்மென்ட்டாக மனைவி ரமலத் கேட்டதையெல்லாம் கொடுத்தார். அந்தப் பக்கம் பிரபுதேவாவுக்காக மதம் மாறினார் நயன்தாரா. (ரமலத்தும் ஆரம்பத்தில் இப்படி மாறியவர்தான்!) புதுப்பட வாய்ப்புகளையெல்லாம் தவிர்த்தார். இப்படி நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்ததில் எங்கு விழுந்தது கீறல்?

‘‘ரமலத்தை முழுசா ஒதுக்கிட்டு நயன்தாராகூட சேரணும்ங்கிறது அவரோட எண்ணமே இல்லை. ரெண்டு பேருடனும் குடும்பம் நடத்தத்தான் அவருக்கு ஆசை. ரமலத்கிட்ட எப்படியோ, குழந்தைகள்கிட்ட ரொம்பவே பிரியமா இருக்கறவர் அவர். அவங்களை நிரந்தரமாப் பிரியறது பத்தி அவர் நினைச்சுக்கூட பார்க்கலை. ஆனா நயன்தாராவோட பிடிவாதம், அவரோட ஆசையை காலி பண்ணிடுச்சு. அதுலயே மனுஷன் சோர்ந்துட்டார்.

ஆனாலும் முறைப்படி விவாகரத்து பண்ணிட்டதால, பிள்ளைகளோட பேசிப் பழகறதுல எந்த சிக்கலும் இருக்காதுன்னு நினைச்சார். பிரபுவும் நயனும் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய சென்னை போட் கிளப் வீட்டுக்கு பையன்கள் ரெண்டு பேரையும் அப்பப்ப வரவழைச்சார். லீவு நாட்கள்ல அங்க வந்த பசங்க ரிஷி, ஆதித் ரெண்டு பேரும் சமயங்கள்ல நைட்கூட அங்கயே தங்கி
யிருக்காங்க. ஆரம்பத்துல பசங்களை வீட்டுக்குள்ள அனுமதிக்காத நயன்தாரா, பிரபுவோட வாட்டத்தைப் பார்த்து அனுமதிச்சார்.

அப்பவும் பசங்களோட நயன்தாரா பேசறது இல்லை. ‘தனிமையைத் தன்னோட கழிக்காம பசங்ககூட கொஞ்சிட்டிருக்காரே’ங்கிற வருத்தம் நயன்தாராவுக்கு. எரிச்சலை முகத்தில் காட்ட ஆரம்பிச்சதும், வேறவழியில்லாம ரகசியமா பிள்ளைகள்கிட்ட பழக வேண்டிய சூழல். ஷூட்டிங்ல இருக்கறதா நயனிடம் பொய் சொல்லிட்டு, எத்தனையோ நேரங்கள்ல தன் பசங்களோட ஷாப்பிங்கிலோ வேறு எங்கோதான் இருந்திருக்கார் பிரபு.

இதுக்கிடையில ஹன்சிகா மோத்வானியோட சம்பந்தப்படுத்தி பிரபுதேவா பத்தி வந்த கிசுகிசுக்களும் நயன்தாராவை பாதிச்சிருக்கு. பொய் சொல்லிட்டு பசங்களோட சுத்தினதை வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. இந்தச் சூழல்லதான் மும்பை வீட்ல வச்சு ஒருநாள் வாக்குவாதம் முற்றியிருக்கு. சேர்த்து வச்சிருந்த வெறுப்பையெல்லாம் நயன்தாரா கொட்ட, மூடு அவுட் ஆகி அப்பா வீட்டுக்குப் போறதாச் சொல்லிட்டு சென்னைக்கு ஃபிளைட் ஏறிட்டார் தேவா.

 ஆத்திரத்துல அந்தப் பொண்ணும் கொச்சி கிளம்பிப் போயிடுச்சு. நாலு நாளா பேசிக்கவே இல்லை. பிறகு நயன்தாராவே மௌனத்தைக் கலைச்சுட்டு சுந்தரம் மாஸ்டர் வீட்டுக்குப் போன் பண்ணியிருக்காங்க. ‘வந்தன்னிக்கு மதியமே கிளம்பிட்டானேம்மா’ என அங்கிருந்து பதில். அப்பா வீட்டிலிருந்து மும்பைக்கும் செல்லவில்லை பிரபு.

ரெண்டு நாள் கழிச்சு கேரளா போன பிரபுவை வீட்டுக்குள்ளேயே விடலை நயன்தாரா. அவமானப்பட்டுத் திரும்புன பிரபு அதுக்கப்புறம் நயன்தாராகிட்ட பேசவே இல்லை’’ என்கிறார் விவாகரத்து வழக்கில் பிரபுதேவாவுக்கு உதவிய ஒரு சட்டப் பிரமுகர்.

ஒரு புறம் தமிழில் அஜித்துடனும் தெலுங்கில் நாகார்ஜுனாவுடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில் பிஸியாகிவிட்ட நயன்தாரா இன்னொரு முயற்சியிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள். ‘காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியதாக’ பிரபுதேவா மீது வழக்கு தொடர்வது பற்றி சில வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாராம் நயன்தாரா.

நயன்தாரா தீர்மானித்து விட்டார். அப்படியென்றால் பிரபுதேவா? அவரது முன்னாள் மனைவி ரமலத்திடம் கேட்க முயன்றோம். ‘‘இவளுக்கும் அவருக்கும் இப்ப என்ன தொடர்பு இருக்குனு இவகிட்ட அவர் பத்திக் கேக்கறீங்க? அவர் பசங்ககிட்ட பேசியிருக்கலாம். அதனால அவருக்கு பர்சனலா பிரச்னைன்னா, அதுல நாங்க என்ன செய்ய முடியும்? இப்படித்தான் நடக்கும்ங்கிறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தான். இதுல அவளோட கருத்து எதுக்கு?’’ என்று அவர் சார்பாகச் சொல்லிவிட்டார் ரமலத்தின் அக்கா ரஸியா.

சொன்னாங்க...

‘‘வாழ்க்கையின் கடினமான நேரங்களைக் கடந்து வந்துவிட்டேன். இப்போது கொச்சியில் ஓய்வில் இருக்கிறேன். சினிமாவில் நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன். இப்போது திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் பிஸியாக நடிப்பேன். தமிழ் சினிமா என்னை ஸ்டார் ஆக்கியது. தெலுங்கு இன்னும் உயரத்துக்குக் கொண்டு போனது. இரண்டு மொழிப் படங்களிலும் என்னை மீண்டும் பார்க்கலாம். மற்ற விஷயங்கள் பற்றி சொல்ல ஏதுமில்லை!’’
- நயன்தாரா

சொன்னாங்க...

‘‘இந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் என்னை இழுக்கிறார்கள். கற்பனை செய்யக்கூட முடியாத கதைகள் பரப்புகிறார்கள். பிரபுதேவா மட்டுமில்லை... யாருடைய பர்சனல் வாழ்க்கையிலும் நான் தலையிட்டதில்லை. என்னை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். எல்லோரும் என் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபுவை நான் ‘அண்ணா’ என்றுதான் கூப்பிடுவேன். நான் அவருக்குக் குழந்தை மாதிரி! என்னை ‘கிட்டி’ (குழந்தை) என்றுதான் அவர் கூப்பிடுவார். அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தாதீர்கள்.’’
- ஹன்சிகா
- அய்யனார் ராஜன்