இன்டர்வியூ 1



காலியாக இருந்த ஒரு சூப்பர்வைசர் பதவிக்கு, ஸ்பின்னிங் பிரிவு காளி மற்றும் டையிங் பிரிவு மாரி ஆகிய இருவரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன.

இவர்களில் யாருக்கு எம்.டி ப்ரமோஷன் கொடுக்கப் போகிறாரோ என கம்பெனி முழுவதும் பேச்சு. எம்.டி மனதில் குழப்பமில்லை. இருவரும் பணிபுரியும் பிரிவுகளின் சூப்பர்வைசர்களை தனித்தனியாக அழைத்து, சில கேள்விகளைக் கேட்டு, பதிலை குறித்துக்கொண்டார்.

‘‘மாரிக்கு ப்ரமோஷன் ஆர்டர் ரெடி பண்ணிடுங்க!’’ - ஜெனரல் மேனேஜரை அழைத்துச் சொன்னார் எம்.டி.‘‘ஆனா சார்... ரெண்டு பேருமே நல்லா வேலை செய்யறவங்கதான். அதில் காளி சீனியர். ஆனாலும், மாரிக்கு ப்ரமோஷன் கொடுக்க என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?’’ - தயக்கத்துடன் கேட்டார் அவர்.

‘‘ரெண்டு பேரோட சூப்பர்வைசர்ஸ் கிட்டயும் பேசினதில் அவங்க குணம் தெளிவா தெரிஞ்சது. சூப்பர்வைசர் ஸ்பாட்ல இருந்தா, அவருக்கு பயந்து, நல்லா வேலை செய்யக்கூடியவர் காளி. சூப்பர்வைசர் இருந்தாலும், இல்லாட்டாலும், சுயக்கட்டுப்பாட்டோடு நேர்த்தியா வேலை செய்யறவர் மாரி. மேற்பார்வை இல்லாமலே நல்லா வேலை செய்யறவரைத்தான் நாம நம்ப முடியும்.’’எம்.டியின் விளக்கம் பளிச்சென்று ஜெனரல் மேனேஜரின் மனதில் பதிந்தது.

எஸ்.ராமன்