நியூஸ் வே



*இந்தியில் அடுத்தடுத்து படங்கள் தோற்றதால், ‘ஸ்ருதி ஹாசன் இனி அவ்வளவுதான்... மும்பை வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் செட்டிலாகி விடுவார்’ என ஜோசியம் சொன்னார்கள் பலர். ஆனால் ஜான் ஆபிரகாமுடன் ஒரு படம், அக்ஷய் குமாருடன் ஒரு படம் என இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் ஹீரோயினாகி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஸ்ருதி.

*என்னவோ தெரியவில்லை... ஆச்சரியமாகவே எல்லாம் நடக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரையும் ஹீரோவாகப் போட்டு அடுத்து விஷால் படம் தயாரிக்கிறார். வகையான கதையும், டைரக்டரும் கிடைத்தால் உடனே ஷூட்டிங் ஆரம்பமாம். ஹீரோக்கள் முறைச்சுக்கிற சீசன் முடிஞ்சு போச்சா பிரதர்?

*‘அமரகாவியம்’ பிரீமியர் சென்னையில் நடந்தது. அதில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா தவிர அத்தனை ஹீரோக்களும் ஆஜர் ஆகிவிட்டார்கள். படம் முடிந்த பிறகு ‘‘பிரதர்’’ என அழைத்து எக்கச்சக்கமாக ஆர்யாவின் தம்பி சத்யாவைப் பாராட்ட, கண்ணீரில் நனைந்து விட்டார் சத்யா.

*கொஞ்ச தூரப் பயணம் என்றால், காரை முன்னால் அனுப்பி விட்டு சைக்கிளில் போகிறார் ஆர்யா. நிறைய வசதிகள் உள்ள சைக்கிள் அது. காரிலேயே அதை பொருத்திக் கொள்ள விசேஷ ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்.

*ஷூட்டிங் ஸ்பாட்டில் எக்கச்சக்கமாக ஜூஸ் அருந்துகிறார் சூரி. நடிகைகளை விட அதிகமாக ஜூஸ் குடித்து உடம்பை பத்திரமாக வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவதால் அவரை ‘ஜூஸ் சூரி’ என்றே கூப்பிடுகிறார்கள்.

*பழைய நினைவு என்ன வந்ததோ தெரியவில்லை. ஸ்ரீப்ரியாவும், மீனாவும் தங்கள் பழைய ஹீரோ ரஜினியைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். ‘லிங்கா’ ஷூட்டிங் பிரேக்கில் இரண்டு மணி நேரம் பேசியிருந்து விட்டு, மதியம் அவரோடு சேர்ந்து சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டார்கள். மீனா இப்போ கூட நடிக்கலாமே பாஸ்!

*உதயநிதி அடுத்து நடிக்கப்போகிற படத்தின் பெயர் ‘கெத்து’. மேற்கொண்டு சந்தானத்தைத் தவிர்த்து இந்தத் தடவை தம்பி ராமையா கூட்டு சேர்கிறார்.

*அனிருத் அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘இன் த பாத்ரூம்’ என்ற வாசகத்தையே நான்கு நாட்களாக போட்டு வைத்திருக்கிறார். ஏதாவது அவருக்கு உடல் உபாதையா என நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.

*‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக் பாபநாசத்தில் வைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது. நடிகர் மோகன்லால் மகன் அசிஸ்டென்ட் டைரக்டராக எந்தவிதமான பந்தாவும் இன்றி துடிப்பாக வேலை செய்கிறாராம். இரண்டு நாள் கழித்துத்தான் கமலுக்கு இந்த விஷயத்தைக் காதில் போட்டு இருக்கிறார்கள்.

*இப்பொழுதெல்லாம் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தத்தை விரும்புவது இல்லையாம். கொஞ்சம் சத்தம் கேட்டாலே ‘‘சைலன்ஸ் ப்ளீஸ்’’ என சொல்லி விடுகிறாராம். அதனால் ஹீரோ உட்பட அனைவரும் அவரைப் பார்த்ததும் சைலன்ட் மோடுக்கு மாறி விடுகிறார்கள்.

*பரத்பாலா ‘மரியானி’ல் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இப்போது சிம்ஹாவை ஹீரோவாக்கி படம் செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர வேறு யார் மியூசிக் போடுவார்கள்! அவரேதான். ஆங்கிலத்தில் பேசி தமிழ்ப்படம் இயக்குகிற இரண்டாவது இயக்குநர் பரத்பாலா.

*‘ஐ’ படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததில் ஷங்கர் பல படங்களைப் பார்க்க முடியவில்லை. இப்போது அவர் அசிஸ்டென்ட் கார்த்திக் எடுத்த ‘கப்பல்’ படத்தைப் பார்த்தார். சந்தோஷித்து தன் எஸ் பிலிம்ஸை தூசி தட்டி அதிலிருந்து ‘கப்பலை’ வெளியிட்டு மிதக்க விடுகிறார்.

*டாப்ஸியின் அடுத்த இந்திப் படம் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கும் ‘பேபி’. படத்தில் ‘க்ராவ் மகா’ என்ற இஸ்ரேலிய தற்காப்புக் கலை தெரிந்தவராக நடிக்கிறார் டாப்ஸி. சில சண்டைக் காட்சிகளும் உண்டு. இதற்காக சின்ஸியராக ‘க்ராவ் மகா’ கற்றுக்கொண்டு நடிக்கிறார். ஒவ்வொரு சீனும் எடுத்து முடிப்பதற்குள் வலி உயிர் போகுமாம். ஆனாலும் சிரித்துக் கொண்டே நடிக்கிறார் டாப்ஸி.

*சிவகார்த்திகேயன் ‘ரஜினி முருகன்’ படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார். அவருக்கு தமன்னாவை ஹீரோயினாக்க புரொடியூசர் லிங்குசாமி ஆசைப்பட்டார். யோசித்து சொல்வதாகச் சொன்னவர்... இறுதியில் ‘ஸாரி’ சொல்லி விட்டார்.

*விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மலேசியா, பொள்ளாச்சியில் கொஞ்ச நாட்கள் நடந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டைரக்டர் ஸ்பாட்டுக்கே வரவில்லை. படத்தை கிட்டத்தட்ட கேப்டன்தான் டைரக்ட் செய்கிறார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது. மறுபடியும் ஜிம்மிற்குப் போகிறார் பாண்டியன்.