கவிதைக்காரர்கள் வீதி



கடைசித்துளி

அருந்தப்படாமல்
வீணாவதற்கெனவே
காத்திருக்கிறது
தேனீர் கோப்பைக்குள்ளிருக்கும்
தேனீரின் கடைசித்துளி...
- ராம், சென்னை.

ஏ.டி.எம்.

அம்மாவின்
அரிசிப்பானையே
எங்கள் குடும்ப
ஏ.டி.எம்.
- சங்கீத சரவணன்,மயிலாடுதுறை.

மரம்

தாத்தா
மரம் நட்டார்
அப்பா
அனுபவித்தார்
நான்
வெட்டி விட்டேன்!
- மகிழை.சிவகார்த்தி,புறத்தாக்குடி.



ஆடை

நீரின் நிர்வாணம்
மறைக்கின்றன
ஆகாயத் தாமரைகள்
- வீ.உதயக்குமாரன்,வீரன்வயல்.

கண்ணீர்

மணல் லாரியின்
அடிப்புறத்தில்
சொட்டுச் சொட்டாய்
கசிகிறது
நதியின் கண்ணீர்.
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.

உபதேசம்

வானவில் வழங்கியது
உபதேசம்,
‘நிரந்தரமில்லாதது
வாழ்க்கை!’
- மனோமணாளன்,கோவை.

துணை

நீச்சல் தெரியாதவனையும்
கரை சேர்த்துவிடுகிறது
மரண பயம்..!
- தில்பாரதி, திருச்சி.