உயிரித் தொழில்நுட்ப படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!



நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை விளைவிக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் உயரிய தொழில்நுட்பமாக உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) இருக்கிறது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால், இந்தியாவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு கல்லூரிகளிலும் உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.  

படிப்புகள்

இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் உயிரி அறிவியல் (Bio Science), உயிரி வேதியியல் (Bio Chemistry), உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology), உயிரித் தகவல்கள் (Bio Informatics), உயிரி மருத்துவம் (Bio Medical), உயிரிப் பொறியியல் (Bio Engineering) எனும் பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc./B.E or B.Tech), முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc/M.Tech) இடம்பெற்றிருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் தற்போது தொழிற்சாலை உயிரித் தொழில்நுட்பம் (Industrial Bio Technology), மருந்தாளுமைத் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (Pharmaceutical Technology and Bio Technology) உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் பொறியியல் (Biotechnology and Medical Engineering) போன்ற சில சிறப்புப் பாடங்களுடனான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன.

சில கல்லூரிகளில் உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பப் பாடங்களில் ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc/M.Tech) இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் இரட்டைப் பட்டப்படிப்பு (Dual Course) முறைகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.  உயிரித் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளாக உயிரி அறிவியல் மற்றும் உயிரித் தகவல்கள் பாடங்களில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும், உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவல்கள், உயிரி மருத்துவப் பொறியியல் பாடங்களில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, ஒரு சில கல்லூரிகளில் உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் பட்டயப்படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதிகள்

உயிரித் தொழில்நுட்பப் படிப்புகளுக்குப் பொதுவாக +2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்கிற பொதுக் கல்வித் தகுதி இருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலான படிப்புகளுக்கும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இளநிலைப் பட்டப்படிப்பு

மூன்று ஆண்டு கால அளவிலான உயிரித் தொழில்நுட்பம், உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டு கால அளவிலான உயிரித் தொழில்நுட்பம், உயிரி மருத்துவம் மற்றும் உயிரிப் பொறியியல் (B.Tech) பாடங்களிலான இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் (PCBM) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில மாநிலங்களில் இந்த மதிப்பெண்களில் அரசு இடஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதுநிலைப் பட்டப்படிப்பு

இரண்டு ஆண்டு கால அளவிலான உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு தொடர்புடைய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். உயிரித் தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல் மற்றும் உயிரித் தகவல்கள் (M.Tech) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 60% மதிப்பெண்களுடன் பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவல்கள் தொடர்புடைய பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வுப் படிப்புகள்

உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் படிப்புகளுக்குத் தொடர்புடைய பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயிரித் தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல் போன்ற பொறியியல் பாடத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பிற்கு தொடர்புடைய பாடங்களில் முதுநிலைப்பட்டம் (M.E/
M.Tech) பெற்றிருக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி நிறுவனங்கள் உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ்காந்தி உயிரித் தொழில்நுட்ப மையம் (Rajiv Gandhi Centre for Biotechnology), மொகாலியிலுள்ள தேசிய மருந்தாளுமைக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Pharmaceutical Education and Research), ஹரியானா மாநிலம் கர்னலிலுள்ள தேசியப் பால்பண்ணை ஆய்வு நிறுவனம் (National Dairy Research Institute, Karnal), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIT), தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (National Institute of Technology) போன்றவை முதன்மையானவைகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் உயிரித் தொழில்நுட்பம் தொடர்புடைய இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

மாணவர் சேர்க்கை உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவல்கள் மற்றும் உயிரிப் பொறியியல் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology), தேசியத் தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் +2 மதிப்பெண்களுடன் இணை நுழைவுத் தேர்வு (முதன்மை (JEE (Main)) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் +2 வகுப்பில் தொடர்புடைய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறுகின்றது. உயிரி அறிவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் குறித்த அறிவியல் ஆய்வுப் படிப்புகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) அடிப்படையிலும், உயிரித் தொழில்நுட்பம் குறித்த பொறியியல் ஆய்வுப் படிப்புகளுக்குத் தனி நுழைவுத் தேர்வுகள் வழியாகவும் மாணவர்  சேர்க்கை நடைபெறுகின்றன.

வேலைவாய்ப்புகள்

வேளாண்மைத்துறையில் தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம், நோய் எதிர்ப்பு, வறட்சி எதிர்ப்பு, பூச்சி எதிர்ப்பு போன்ற எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து, அதிகச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்திடவும், உற்பத்தியான பொருட்களை வணிக ரீதியாக அதிக நாட்கள் கெட்டுப்போகாமலும், அதன் தன்மை மாறாமலும் வைத்திருக்க உயிரித் தொழில்நுட்பம் உதவுகிறது. மருத்துவத் துறையில் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் உருவாக்குதல், மரபு வழியாக வரும் நோய்களிலிருந்து விடுபட மரபணு சிகிச்சை முயற்சிகள், மனித உடல்களில் இருக்கும் சுரப்பிகளின் குறைபாடுகளை நீக்க உதவுதல் போன்றவைகளுக்கு உயிரித் தொழில்நுட்பம் உதவுகிறது.

இதேபோல் சுற்றுச்சூழல் துறைகளில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மாசடைந்த நிலம், நீர்நிலைகள், காற்று ஆகியவற்றை மீட்டெடுக்க உயிரித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுதல், உணவுப் பதப்படுத்துதல், புதிய மருந்துகள் தயாரித்தல், சிறந்த பண்புகளுடனான ஆடை தயாரிப்புக்கான நூலிழைகள் உருவாக்குதல் என்று பல்வேறு தொழில்துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போல் சட்டம் சார்ந்த தடயவியல் துறைகளிலும், மரபணுச் சோதனைகளிலும் இத்தொழில் நுட்பம் உதவிவருகிறது.

உயிரித் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன. எனவே உயிரித் தொழில்நுட்பம் தொடர்புடைய படிப்பு படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிகச் சம்பளத்துடனான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே உயிரித் தொழில்நுட்பம் தொடர்புடைய படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம், படித்து முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பினைப் பெற முடியும்.

 - TS.மணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

205 பேருக்கு வாய்ப்பு!


மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மெக்கான். மினிரத்னா அந்தஸ்து பெற்ற மெக்கான் நிறுவனத்தில் தற்போது பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ், அக்கவுண்டன்ட், சேஃப்டி ஆபீசர், புராஜெக்ட் எஞ்சினியர், ஜூனியர் எஞ்சினியர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பிலோ இணையதளத்திலோ பார்க்கலாம்.

கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட எஞ்சினியரிங் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கணிசமான பணியிடங்கள் உள்ளன. பிசியோதெரபி, ரேடியோகிராபி டிப்ளமோ படிப்புகள், எம்.பி.ஏ. மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி குறித்த விவரங்களை இணையதள அறிவிப்பில் பார்க்கலாம். சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாகக் கோரப்பட்டுள்ளது.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு தகுதி வேறுபடுகிறது. 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ரூ.1000-ம் கட்டணமாகச் செலுத்தி, இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 20.6.2019.

மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள www.meconlimited.co.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கலாம்.