கடற்படையில் பயிற்சியுடன் வேலை!



*எஞ்சினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கடல் எல்லையைப் பாதுகாக்கும் பணியை இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை மேற்கொண்டு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும் தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)’, கோர்ஸ் காமென்சிங் -ஜூன்-2020 பயிற்சியில் சேர, பட்டதாரி எஞ்சினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் இளைஞர்கள் சேர்க்கப்பட உள்ளனர். திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட குறிப்பிட்ட எஞ்சினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் இந்த படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
 
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 2.7.1996 மற்றும் 1.7.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

உடல்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் விண்ணப்பதாரர்கள் பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்‌ஷன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களைப் புரிந்துகொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக்காலத்தைக் கொண்ட ‘ஷாட் சர்வீஸ் கமிஷன்’பணியாகும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் அதற்கு பின்னர் பணி நீடிப்பு பெற முடியும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள் 27.6.2019.

மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.