ஐந்நூறு பேரில் ஒருத்தி இந்த அருவி!



‘ஜோக்கர்’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ போன்ற தரமான படங்கள் வரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம் ‘அருவி’.லீட் ரோலில் அதீதி பாலன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் நடித்துள்ளார்கள். இசை வேதாந்த், ஒளிப்பதிவு ஷெல்லி. இயக்கம் அருண் பிரபு.

‘‘இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும்தான் என்னால் கூற முடிந்தது. என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் ஏன் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது.

அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒளிப்பதிவாளர் சக்திசரவணன்தான் நான் ‘பிரியாணி’ படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ‘அருவி’ படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். அவர் என்னிடம் கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும்போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு அவர் கதையைக் கூறினார்.

பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பிரபல இயக்குநர்களிடம் வேலை பார்த்தவர் இயக்குநர் அருண் பிரபு. ஜாம்பவான்களிடம் வேலை பார்த்தவர் என்பதை ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருக்கிறார். 

இது மனிதநேயத்தைப் பற்றிப் பேசும் படம். அந்த வகையில் நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்துகொண்டே இருந்தது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்த பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்புக் குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.

இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்தனர்.

அருவி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 500 பெண்களை இயக்குநர் ஆடிஷன் பண்ணினார். நான் அவரிடம் கேட்டேன் - ‘நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக ஆடிஷன் செய்கிறீர்களா? அல்லது 500 பெண்களை சந்திக்க வேண்டும் என்று ஆடிஷன் செய்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

சென்சார் குழு இந்தப் படத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம். ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையான படைப்பாக இருக்கும்’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

- சுரேஷ்ராஜா