சண்டக்கோழி 2
பல வருடங்களாக நின்று போயிருந்த திருவிழாவை நடத்த ராஜ்கிரண், விஷால் சேர்ந்து எடுக்கும் முயற்சிகளும், அதைத் தடுப்பவர்களை அடக்குவதுமே ‘சண்டக்கோழி 2’. வட்டாரத்தில் மிகப்பெரிய மனிதர் ராஜ்கிரண். உள்ளூர் சண்டையால் நின்றுபோயிருந்த திருவிழாவை நடத்தி வைக்கவேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறார். மகன் விஷால் அப்பாவிற்குத் துணை நிற்கிறார். ஏழு வருடங்களுக்கு முன்பான ஊர்த் திருவிழாவில் வரலட்சுமியின் கணவர் வெட்டிக் கொல்லப்படுகிறார். பதிலுக்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் கொன்றுவிட, ஒரே ஒருவர் மிஞ்சி நிற்கிறார்.
 அவரை ராஜ்கிரண் தன் பாதுகாப்பில் வைக்கிறார். இறுதியில் திருவிழா பங்கமின்றி நடந்ததா? தன் பாதுகாப்பில் வைக்கப்பட்டவரை காப்பாற்றுகிறார்களா... என்பதே மீதிக்கதை. அடர்த்தியும் அழுத்தமுமான பெர்ஃபார்மன்ஸ் தேவைப்படும் ஹீரோவாக விஷால். கீர்த்தியிடம் டிரைவரைப் போல அறிமுகமாகும் காட்சியிலும், அவர் மீது காதல் வளர்க்கும் காட்சிகளிலும் கலகலப்பு. அப்பாவிடம் அடங்கி, ஒடுங்கி, பயபக்தியோடு பாசமும் காட்டுவது அருமை. அனல் வெயிலில் எதிரிகளைப் புரட்டி எடுக்கும் சண்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது.
ஜீப்பில் வந்து போகும் கம்பீரமும், காதலில் சொக்கி வீழும் ஈர்ப்பும் இவ்வளவு இயல்பாக விஷாலுக்கே புதுசு. ராஜ்கிரண்தான் படத்தின் மையம். அவர் கோபப்படும் வேளை, அமைதியும் சாந்தமும் கொண்டு பேசும் இடங்களில் அவ்வளவு யதார்த்தம். தலைப்பாகை அணிந்து நடந்து வரும் தருணங்கள் உச்சபட்ச கம்பீரம். கீர்த்தி சுரேஷ் சேட்டையும், காதலுமாக கலக்குகிறார். ‘‘என்னய்யா அய்யா மகனா போயிட்டீங்க... கைக்கு அடக்கமா டிரைவரா இருந்தா, கையில் சம்பளத்தைக் கொண்டாந்து தருவீங்கன்னு பார்த்தேன்... இப்படி ஆகிப்போச்சே...’’ என புதுவிதமா புரபோஸ் செய்யும் அழகே அழகு.
வெரைட்டியாக விளையாடும் கீர்த்திக்கு இருக்கிறது இன்னும் நல்ல எதிர்காலம்! வரலட்சுமிக்கு காரசாரமான வில்லி வேடம். கோபத்தைக் கண்ணில் ஏற்றி, துடிக்கும் கன்னக்கதுப்பில் வெறுப்பேற்றி பழிவாங்கத் துடிக்கும்போதெல்லாம் அதகளம். இவர்கள் அத்தனை பேரையும் துள்ளலும், துடிப்பும், நெகிழ்வும், பதமுமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த், சண்முகநாதன், தென்னவன் கேரக்டர்களாக மாறி நிற்கிறார்கள்.
திருவிழா கோலாகலத்தை அப்படியே கண்ணில் வந்து நிறைக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல். யுவன் ஷங்கர் பின்னணியில் சதிராடி இருக்கிறார். ‘கம்பத்துப் பொண்ணு...’ பாடல் தனி ரகமாய் கேட்கக் கேட்கச் சிறப்பு. இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். முன்பாதியில் திகிலும், திருவிழாவும், காதலுமாக நகரும் படம், இரண்டாம் பாதியில் தனிப்பட்ட பழிவாங்குதல் சார்பாகவே நிலைத்து நிற்கிறது. அரிவாளுக்கு கொடுத்த வேலையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மண்ணும், மனசுமாக, நெகிழ்வான கதையில் நெஞ்சில் நிற்கிறது ‘சண்டக்கோழி 2’.
- குங்குமம் விமர்சனக்குழு
|