வடசென்னை



தாதாக்களின் விசுவாசத்திற்கும், துரோகத்திற்குமான விளையாட்டே ‘வடசென்னை’.அடித்தட்டு மக்களின் பாதுகாவலனாக பவனி வருகிறார் அமீர். அவரது குடையின் கீழ் சமுத்திரக்கனி, பவன், கிஷோர், டேனியல் பாலாஜி இருந்து உதவுகிறார்கள். சாலையின் விரிவாக்கத்திற்காக குடிசைகளைக் காலி செய்ய அரசாங்க அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் நெருக்கடி தருகிறார்கள். இதில் கூட்டாக செயல்பட்ட நண்பர்கள் பிரிய, அமீர் கொல்லப்படுகிறார். அடுத்து ஏரியாவில் கடை விரிக்கும் கிஷோர், சமுத்திரக்கனி தனித்தனியாக இறங்கி ரத்தவெறி யோடு மோதிக்கொள்கிறார்கள்.

இந்த இடத்தில் அமைதிகொண்டு... கேரம் விளையாட்டில் சாம்பியன் ஆக வேண்டும் என நினைத்து உழைக்கிற தனுஷ் எப்படி சிக்கினார்? அவர் என்னவாகிறார்..? என்பதே நீளும் கதையின் முடிவு. சட்டத்திற்கு உட்பட்ட கொடூரங்களையும், ஏழை எளியவர்களே இதில் எப்போதும் பலிகடா ஆவதையும் நம்பகத்தன்மையின் வேர்கள் பரவிச் சொன்ன வகையில் இந்த சினிமா முக்கியமாகிறது. தாதாக்கள் உருவாக்கப்படுகிற இடங்களில் கருத்து வகுப்பெடுக்காமல், அச்சு அசலாக வீரியமாக விதைத்ததற்காக வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

தனுஷுக்கு இது தனித்த அடையாளம். கண்டிருப்பது வேறு உருமாற்றம். தாதாக்களிடம் சிறப்புப் பயிற்சி பெற்ற மாதிரி வாயில் கத்தி சுமக்கும் லாவகம் மெர்சல். கண் தொடங்கி கணுக்கால் வரை மிரட்டுகிறது நடிப்பு. பல நிலைகளில் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வஞ்சகமாக ஏமாற்றப்படும் விதம், வகை தொகை இல்லாமல் வாழ்க்கையில் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வன்முறையின் வாசலில் வந்து நிற்கும் சூழல்... என ஆழமாக எடுத்துப்பேசுகிறார் வெற்றி. தனுஷ் தொடங்கி அத்தனை மனிதர்களின் வாழ்க்கையிலும் வன்முறை தலைவிரித்து ஆடுவதைப் பார்க்க வரப்போகிற அத்தனை பயங்களும் நமக்குத் தெரிந்து விடுகிறது.

ஆக, அவர்கள் அத்தனை பேர் நடிப்பிலும் உயிர்த்ததும்பல். சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் என நடிப்பில் அடுத்த கட்டம் போகிறார்கள். சர்வசாதாரணமாக அயோக்கிய முகம் காட்டி, எந்த உணர்ச்சியும் இல்லாமல் களவாணித்தனம் செய்யும் காவல் அதிகாரியைப் போட்டுத் தாக்கும் அமீரின் ஆவேசம் ரொம்ப காலத்திற்கு நிற்கும். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலும், குட்டிக் குட்டி முத்தங்களும் அழகு. வழக்கு மொழி முற்றாக புது வடிவம் எடுத்து தமிழ் சினிமாவில் நுழைந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆண்ட்ரியா அநியாயத்திற்கு பாந்தம் காட்டி, பின்பு பட்டையைக் கிளப்புகிறார். நடுக்கடலில் அமீரும், ஆண்ட்ரியாவும் திறந்த முதுகில் தேனிலவின் தனிமையை அனுபவிப்பது காமத்தின் சிறு துளி. தனுஷின் மாப்பிள்ளை சரண் அசால்ட் அறிமுகம். ராதாரவி, பாவல், பவன் என கேரக்டர்களில் நிறைகிறார்கள். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் நேர்த்தி. வேல்ராஜின் கேமரா அருமையாக உழைத்திருக்கிறது. சமயங்களில் கேண்டிட் கேமராவில் படமாக்கியது போல புதுவகை. கேங்ஸ்டர்களின் வாழ்க்கைக்குப் பதிலாக வடசென்னை மக்களின் வாழ்க்கையை படமாக்கியிருந்தால் இன்னும் வெற்றி மாறனைக் கொண்டாடியிருக்கலாம்.

- குங்குமம் விமர்சனக்குழு