மாஃபியா ராணி!



‘அடடே! நல்லா நடிச்சிருக்கே! இத்தனை நாட்களா எங்கப்பா இருந்துச்சு இந்தப் பொண்ணு?’

‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தைப் பார்த்தவர்கள் இக்கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.பதில் சிம்பிள். ஞாயிறுதோறும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ நிகழ்ச்சி வந்ததல்லவா..?
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து ‘சூது கவ்வும்’ உட்பட சில படங்களில் தலையைக் காட்டிய சாய் பிரியங்கா ரூத்தான் இப்போது நாயகியாகக் களமிறங்கியிருக்கிறார். ‘‘இவ்ளோ பில்டப் தேவையில்ல. ஷாக்க குறைங்க! சாதாரணப் பொண்ணுதான் நான்...’’ அடக்கத்துடன் கோவைத் தமிழில் பேசத் தொடங்குகிறார் சாய் பிரியங்கா ரூத்.

‘‘சொந்த ஊர் கோவை. படிச்சது பிசிஏ. எல்லாரையும் மாதிரி பிழைக்க சென்னை வந்தேன். ஒரு கம்பெனில வேலைக்கும் சேர்ந்தேன். ஆனா, சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல அப்படியொரு ஆர்வம். வீட்ல சொன்னா டின்னு கட்டிடுவாங்க. அதனால உள்ளுக்குள்ளயே புதைச்சுட்டு கம்பெனி வேலையைப் பார்த்துட்டு இருந்தேன்.
இந்த நேரத்துல நண்பர்கள் மூலமா ஒரு பிரைவேட் சேனல்ல ரியாலிட்டி ஷோல என்ட்ரி ஆனேன். அப்புறம் எங்க எல்லாம் ஆடிஷன் நடக்குதோ அங்க எல்லாம் கலந்துகிட்டு கிடைச்ச ஒண்ணு ரெண்டு கேரக்டர்ஸ்ல சினிமால தலைகாட்டினேன்...’’ என சுருக்கமாக தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லும் பிரியங்காவுக்கு எந்த கேரக்டர் என்றாலும் ஓகேதானாம்.

‘‘ஆக்சுவலா ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஹீரோயின் பேஸ் படம் கிடையாது. ஒரு பெண்ணைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவளை என்னவா மாத்துது என்பதுதான் படம்.நிறைய சவால்கள் அதுல இருந்தது. ஆம்பளை மாதிரி நடந்துக்கணும். முடியை வெட்டிக்கணும். சண்டை போடணும். ஒரு கட்டத்துக்கு மேல முகமெல்லாம் கிழிஞ்ச மாதிரி ரத்தம் தெறிக்கற காட்சிகள்ல நடிக்கணும்.

மத்த நடிகைகள் நடிக்க பயந்தப்ப நான் அதைப் பயன்படுத்திக் கிட்டேன். சர்ச்சைக்குரிய கேரக்டர்தான். பல பிரபல நடிகைகள் தயங்கவே நான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டிட்டேன்! ஹீரோயினாதான் நடிப்பேன்னு சொல்ற அளவுக்கு நான் அப்பாடக்கர் இல்ல! பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு அடம் பிடிக்க மாட்டேன்.

பந்தம் கிடைச்சாலும் ஓகேதான்! சின்னதோ பெருசோ... அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தா உடனே ஓகே சொல்லிடுவேன்...’’ என்ற பிரியங்காவுக்கு தன் வீட்டில் படம் பார்த்துவிட்டு பாராட்டியதில் ஏக குஷி.‘‘நீ ஜெயிச்சுட்டேனு அவங்க சந்தோஷப்பட்டப்ப வானத்துலயே பறக்கிற மாதிரி இருந்தது. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும் சொல்லுங்க..?!’’ புருவத்தை உயர்த்திக் கேட்கிறார் பிரியங்கா.                

ஷாலினி நியூட்டன்