ஆத்தி... எதுக்கு எனக்கு கீழ பாம் வைக்கறீங்க?! வேதிகா கலகல



அஸ்கு புஸ்கு. ‘எங்கப்பா இந்தப் பொண்ணு... ஆளையே காணோம்...’ என்றெல்லாம் எல்லோரையும் தேட முடியாது; விசாரிக்க முடியாது.
சில நடிகைகளின் படங்களும் அவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரங்களுமே இப்படிப்பட்ட வினாவை எழுப்பும்.அப்படி கேட்க வைத்தவர்களில் வேதிகாவும் ஒருவர். ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அதுவும் எவர் க்ரீன் மாஸ் ஃப்ரான்சீஸ் ஆன ‘காஞ்சனா 3’ படம் வழியாக!

‘‘செம ஹாரர் கமர்ஷியல் படம்... லாரன்ஸ் மாஸ்டர் கலக்கி இருக்கார்... ஒரு ரசிகையா நானும் படம் பார்த்து என்ஜாய் பண்ண காத்திருக்கேன்...’’ பேசும்போதே வேதிகாவின் இமைகள் படபடக்கின்றன. ‘‘வெயிட்... ‘நல்லா இருக்கீங்களா’னுதானே கேட்கப் போறீங்க..? வெல்... நல்லா பாருங்க... எப்படி இருக்கேன்? அதே. ரொம்ப நல்லா இருக்கேன்! ‘காவியத்தலைவன்’ படத்துக்கு அப்புறம் நாலு மலையாளப்படங்கள், மூணு கன்னடப் படங்கள்னு மத்த woodல பிசி! எப்பவுமே லேங்குவேஜை பெருசா நினைச்சதில்ல.

நல்ல படங்கள், அட்டகாசமான கேரக்டர்னா உடனே நடிக்க ஓகே சொல்லிடுவேன்.தமிழ்ல அப்படி இப்ப அமைஞ்சதுதான் ‘காஞ்சனா 3’. போஸ்டர்ல என்னைப் பார்க்கிறப்ப அவ்வளவு சந்தோஷமா இருந்தது. இத்தனை நாட்கள் தமிழ் ரசிகர்களை மிஸ் பண்ணினதுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து அடுத்தடுத்து படங்கள் நடிச்சு மகிழ்விக்கணும்...’’ தன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார் வேதிகா.

நீங்கதான் ‘முனி’ வழியா ‘காஞ்சனா’ படங்களின் முதல் ஹீரோயின். இப்ப திரும்பவும் அதே மேஜிக்... யெஸ். ஆச்சர்யமா இருக்கு. திடீர்னு ஒருநாள் லாரன்ஸ் மாஸ்டர் கால் பண்ணி சென்னைக்கு வரச் சொன்னார். ஏற்கனவே வந்த மூணு பாகங்களும் மிகப்பெரிய ஹிட். அடுத்தடுத்த பாகங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பிச்ச நேரத்துலதான் மாஸ்டர் என்னை கமிட் பண்ண கூப்பிட்டார். கதையைக் கேட்கவே இல்ல. ‘காஞ்சனா 3’னு மாஸ்டர் சொன்னதுமே ஓகே சொல்லிட்டேன். லாரன்ஸ் மாஸ்டர் மேலயும் ‘காஞ்சனா’ மேலயும் அவ்வளவு நம்பிக்கை!

செம ஹாரர் கமர்ஷியல். அதேநேரம் ஷூட்டிங் அப்படி கலகலப்பா போச்சு. கோவை சரளா மேமும் மாஸ்டரும் நடிக்கிற எங்க எல்லாரையும் கலகலப்பா பேசியே எனர்ஜியோடு வைச்சிருந்தாங்க! உங்க கேரக்டர்... ஆத்தி... எதுக்கு எனக்கு கீழ பாம் வைக்கறீங்க?! மாட்டேன்பா... கேரக்டர் பற்றியோ கதை பற்றியோ மூச்சு விட மாட்டேன். யாரும் கட்டளை எல்லாம் போடலை. நானாதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். ஏன்னா எதுவும் தெரியாம படம் பார்க்கிறப்பதான் அந்த ஃப்ரெஷ்னெஸ்ஸை முழுமையா அனுபவிக்க முடியும்!

ஆனா, ஒண்ணு... இதுவரை என் கரியர்ல இப்படியொரு கேரக்டர் செஞ்சதில்ல. கதையும் புது ஹாரர் தீம். படம் பார்த்தீங்கனா உங்களுக்கே நான் சொல்றது புரியும். பேய் பயம் உண்டா?OMG! நல்லா கேட்டீங்க போங்க. பேய்னா செம பயம் எனக்கு. படத்துல லாரன்ஸ் மாஸ்டர் பயப்படறதை விட மோசமா பயப்படுவேன்! அதுக்காக ஹாரர் / த்ரில்லர் படங்களைப் பார்க்க மாட்டேன்னு அர்த்தமில்ல. பயந்துகிட்டே முழுசா பார்த்துடுவேன்!
என்ன சொல்றார் ராகவா லாரன்ஸ்..?

சச் அ ஹம்பிள் அண்ட் எனர்ஜிடிக் பர்சன்! அவர் இருக்கிற இடம் எப்பவும் கலகலனு இருக்கும். எல்லா கேரக்டர்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைப்பார். யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், அது நியாயமா இருந்தா முதல் ஆளா வந்து நிற்பார். பத்து வருஷங்களுக்கு மேல அவரை எனக்குத் தெரியும். இப்ப உச்சத்துல இருக்கார். ஆனா, அந்த உதவற, பழகற குணம்... அப்படியேதான் இருக்கு!
2014 - 2019 வேதிகா என்னவா இருந்தாங்க..?

ஸ்டூடண்டா! கலாய்க்கல. உண்மையைத்தான் சொல்றேன். எப்பவும் என்னை மாணவியாதான் நினைக்கறேன். புதுப் புது விஷயங்களைக் கத்துக்கிட்டே இருக்கேன். அப்படிதான் இடைப்பட்ட 5 வருஷ காலமும் இப்ப மாதிரியே இருந்தேன்.மல்லு / சாண்டல்வுட்ல நடிச்சப்ப என் கேரக்டரை இன்னும் எப்படி பாடிலேங்குவேஜ்ல சுவாரஸ்யப்படுத்தலாம்னு யோசிச்சு... அது தொடர்பா தேடி... கிடைச்சதை எனக்கு தகுந்த மாதிரி அடாப்ட் பண்ணி நடிச்சேன்.

கத்துக்கற இந்த ஆர்வம்தான் எனக்கு ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்களைக்  கொடுத் துச்சு. இதோ இப்ப ‘காஞ்சனா 3’. மக்கள் என்னை மறக்காம இருக்க இதுவும் ஒரு காரணம். அடுத்தடுத்த படங்கள்..? தமிழ்ல ஆதி சாய்குமார் கூட ஒரு ஹாரர், திரில்லர் படம் பண்றேன். ஆதி சாய்குமாருக்கு அது தமிழ்ல முதல் படம். ‘வினோதன்’ முழுப் படமும் முடிஞ்சு இப்ப போஸ்ட் புரொடக்‌ஷன் நடக்குது. அப்புறம் கன்னடம், மலையாளத்துல சில படங்கள். இந்தில இம்ரான் ஹாஷ்மி தயாரிக்கிற ‘வைக்கோம்’ படத்துல ஒப்பந்தம் ஆகியிருக்கேன். ஜீது ஜோசப் இயக்கும் இந்தப் படத்துல ரிஷி கபூர், இம்ரான் ஹாஷ்மி கூட நடிக்கிறேன்.                               

ஷாலினி நியூட்டன்