பெங்களூர் தக்காளி!



சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ என இரண்டிலும் ஒரே டைமில் அறிமுகமானவர் நிதி அகர்வால். பாலீஷான பெங்களூர் தக்காளி. பாலிவுட், டோலிவுட்டில் சிறகடித்தவர். இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியின் ஜோடி இவர்தான். தெலுங்கிலும் பவன் கல்யாண், ஸ்ரீராம் ஆதித்யா புராஜெக்ட் என கைவசம் கெத்து காட்டுகிறார் நிதி. ‘‘தமிழ்ல என்னோட முதல் படம் ரிலீஸுக்கு முன்பே, அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆனேன். எல்லாம் கடவுளோட ஆசீர்வாதம்தான்...’’ கொஞ்சும் தமிழில் பேசுகிறார் நிதி அகர்வால்.

‘‘சின்ன வயசில இருந்தே டான்ஸ்னா பிடிக்கும். பாலே, ஜாஸ்னு வெஸ்டர்ன் மட்டுமில்ல. கதக், கிளாஸிக்கல் டான்ஸும்  கத்துக்கிட்டேன். இந்த டான்ஸாலதான் என் முதல்பட வாய்ப்பும் கிடைச்சது. ஸ்கூல் படிக்கும் போது, ஐஸ்வர்யா ராய் மாதிரி நானும் ஆக்ட்ரஸ் ஆகணும்னு விரும்பினேன். போஸ்டர்ல, விளம்பரங்கள்ல அவங்க போட்டோஸ் பார்க்கும் போது அவங்களோட மேக்கப், ஐப்ரோ இப்படி சின்னச் சின்ன விஷயங்கள்லதான் என் பார்வை போகும்.

அப்புறம், தீபிகா படுகோனே பிடிச்சது. அவங்களும் பெங்களூருதான். தீபியின் தங்கை என் ஸ்கூல்மேட். ஸ்கூல் பஸ்சுல என் பக்கத்துலதான் உட்காந்திருப்பாங்க. சில நேரங்கள்ல தன் தங்கையை பிக்கப் பண்ண தீபிகா வருவாங்க. அப்ப அவங்க இந்தியில நடிச்சிட்டு இருந்தாங்க. தீபிகாவை நேர்ல பார்த்ததும், என் ஆக்ட்டிங் ஆர்வம் இன்னும் அதிகமாச்சு.

தெலுங்கில் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ வழியா கிராண்டா ரீச் ஆனேன். நடிக்க வந்து நாலஞ்சு படங்கள் பண்ணினபிறகே தெலுங்கு பேச கத்துக்கிட்டேன். அதுவரை அங்கே டயலாக்ஸ் எல்லாம் ஆங்கிலத்துல எழுதிதான் பேசுவேன். இப்ப தெலுங்கு சரளமாகிடுச்சு. தமிழையும் கத்துக்கிட்டு இருக்கேன். இங்கே மணி சார், ஷங்கர் சார் படங்கள்ல நடிக்கணும்னு ஒரு பெரிய ட்ரீம் இருக்கு...’’ எனர்ஜியாக புன்னகைக்கிறார் நிதி.

எப்படி இருந்துச்சு ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ பட அனுபவங்கள்..?
நைஸ். ‘பூமி’ ஜெயம் ரவி சாரின் 25வது படம். அந்தப் படத்துல என் பங்களிப்பும் இருந்தது மகிழ்வானது. இயக்குநர் லக்‌ஷ்மன் சாரின் ‘ரோமியோ ஜூலியட்’ பார்த்திருக்கேன். ஹீரோயினுக்கு அதுல அவ்ளோ முக்கியத்துவம் இருக்கும். அதைப் பார்த்தே இந்த படத்துல கமிட் ஆனேன். கடுமையான லாக்டவுன் சூழல்னால அந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் நல்ல வரவேற்புகிடைச்சது.  

‘ஈஸ்வரன்’ ஷூட் மறக்க முடியாது. முதல் நாள் சிம்புவை பார்த்ததும் ஆச்சரியமாகிடுச்சு. ஏன்னா அவர் என்னைவிட ஒல்லியா இருந்தார். எப்படி அவ்ளோ ஸ்லிம்மா ஆனார்னு அவர்கிட்ட கேட்க வச்சிட்டார். ஷூட் அப்ப சுசீந்திரன் சார் என்கிட்ட, ‘காஜல் அகர்வால் மாதிரி இங்கே நீங்களும் பத்து பதினைஞ்சு வருஷம் நிலைச்சு நின்னு பெயர் வாங்குவீங்க’னு சொன்னார். எனக்கும் ட்ரீம் அதான். தமிழ்ல நம்பர் ஒன்னா வரணும். ஏன்னா, இங்கே படம் பண்ணினா எல்லா இண்டஸ்ட்ரீயிலும் பெயரெடுக்க முடியும். அதை நானே நேர்ல உணர்ந்திருக்கேன். இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவ்வா இருக்கீங்க..?

சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருக்க பிடிக்கும். அட்மின் கிடையாது! நானேதான் ஹேண்டில் பண்றேன். ரசிகர்கள் நேரிடையா என்கிட்ட பேசுறது சந்தோஷமா இருக்கு. அவங்க எனக்கு அன்பும் அக்கறையுமா சப்போர்ட்டும் பண்றாங்க. அதனாலேயே அந்த குஷியில் சில டைம்ல ஒரே நாள்ல மூணு நாலு போட்டோஸ் கூட போஸ்ட் பண்ணிடுறேன்.

டோலிவுட்ல சில இயக்குநர்கள் கூட, ‘நீங்க படத்துக்கு நல்ல சப்போர்ட் பண்றீங்க’னு சொல்வாங்க. அதை பெரிய பாராட்டாகவும் எடுத்துக்கறேன்.
உதயநிதி படத்துல என்ன ரோல்?ஆஹா... ஆரம்பிச்சிட்டீங்களா! மகிழ் சார் படம் ஷூட் போயிட்டு இருக்கு. இன்னும் டைட்டில் வைக்கல. அருமையான த்ரில்லர் ப்ளஸ் லவ் இருக்கும்.உதயநிதி சார் அருமையா பழகுறார். சிம்பிள் அண்ட் ஹம்பிள். மகிழ் சார் பர்ஃபெக்‌ஷனை விரும்புறவர். படத்துக்கு டைட்டில் வச்சதும், அதைப் பத்தி இன்னும் நிறைய பேசலாம். அதுவரைக்கும் ப்ளீஸ் வெயிட்.!

மை.பாரதிராஜா