பீடி சுற்றும் வள்ளல்!



இன்று கேரளா முழுவதும் பிரியமுடன் உச்சரிக்கும் ஒரு பெயர், ஜனார்த்தனன். பல ஆண்டுகளாக பீடி சுற்றி சேர்த்து வைத்திருந்த பணத்தை, முதலமைச்சரின் கொரோனா கால நிவாரண நிதிக்குக் கொடையாக கொடுத்திருக்கிறார் இந்த வள்ளல். தான், கணக்கு வைத்திருந்த வங்கியிடம், ‘‘2 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுங்கள்...’’ என்று கேட்டிருக்கிறார் ஜனார்த்தனன்.

அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், ‘‘உங்கள் கணக்கில் 2 லட்சத்து 850 ரூபாய் இருக்கிறது. நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பிவிட்டால் மீதி 850 ரூபாய்தான் இருக்கும்...’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘‘பரவாயில்லை. நான் பீடி சுற்றி பிழைத்துக்கொள்வேன்...’’ என்று உறுதியாக ஜனார்த்தனன் சொல்ல, தயக்கத்துடனே வங்கி ஊழியர்கள் 2 லட்சத்தை நிவாரண நிதிக்கு அனுப்பியிருக்கின்றனர்.

கண்ணனூரைச் சேர்ந்த ஜனார்த்தனனின் தன்னலமற்ற செயலை முதலமைச்சர் பினராயி விஜயன் முதல் பல பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
                       

த.சக்திவேல்