பிரபாஸ் சூப்பர் ஹீரோதான்!



கோலிவுட் ப்ரொடக்‌ஷன் மானேஜர்கள் மத்தியில் இன்றைக்கு ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் பற்றிதான் பேச்சு அடிபடுகிறது.நம்மூரில் இருக்கும் ஹீரோ யாராக இருந்தாலும், பிரபாஸுக்கு இணையாக யாருமில்லை என்கிறார்கள்.காரணம், தன்னுடைய சம்பளத்திற்கு அதிகமாக ஒரு சல்லிக்காசு கூட கேட்கமாட்டாராம்.அதாவது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானால், சம்பளம் பேசுவது வாடிக்கை. அப்படி முடிவான சம்பளத் தொகைக்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட பிரபாஸ் தயாரிப்பாளர்களிடம் கேட்பதில்லையாம்.

சில ஹீரோக்கள் தங்களுடைய சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட்கள், மானேஜர், உதவியாளர்களுக்கு அது வேண்டும், இது வேண்டுமென கேட்டு தயாரிப்பாளர்களின் பர்ஸை காலி செய்து விடுவார்கள்.

ஆனால், பிரபாஸ் ஷூட்டிங்கிற்கு தன்னுடைய காரிலேயேதான் வருவார். இவரது டீம் தனி காரில் வந்து இறங்கும். தயாரிப்பாளர்கள் தரப்பில் கேரவன் கொடுக்கப்படுவதால், வேறு எந்த கூடுதல் பணமும் இவர் கேட்பதில்லை.சில ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வைத்திருந்தாலும், அதற்கான டிரைவர் பேட்டா, அஸிஸ்டெண்ட் பேட்டா என எல்லாவிதத்திலும் தயாரிப்பாளரிடம் காசைக் கறந்துவிடுவார்கள்.

பிரபாஸ் ஷூட்டிங்கில் இருந்தால், அவருடைய வீட்டில் இருந்து உணவு வந்துவிடும். தயாரிப்பாளருக்கு சாப்பாடு செலவை வைப்பதில்லை. அதேபோல் அவரது டீமிற்கும் உணவு வந்துவிடும். இவர்கள் மட்டுமில்லாமல் பிரபாஸின் டூப்பாக நடிப்பவர்கள், பவுன்சர்கள் என எல்லோருக்கும் செலவை பிரபாஸே பார்த்துக்கொள்வாராம்.இப்படி பலவிதங்களில் தயாரிப்பாளருக்கு தொல்லைகொடுக்காத ஹீரோ பிரபாஸ் என்கிறது கோலிவுட் ப்ரொடக்‌ஷன் மானேஜர்கள் வட்டாரம்.

காம்ஸ் பாப்பா