மிஸ்டர் தண்டபாணி இருக்காரா?
“சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?” “இல்லைங்க...” “வெளில போயிருக்காரா?” “இல்லைங்க...”
 “அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?” “இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?” “வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?” “இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”
“வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?” “வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே...” “ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?” “இல்லை...”
“பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?” “நல்ல கதையா இருக்கே! தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?” “இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?” “நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே!”
கவியரசன் கவின்
|