இது சிகரெட் சூடு அல்ல... தமிழகத்தை மிரட்ட வரும் காய்ச்சல்!



ஆம். இந்தக் காய்ச்சலின் பெயர் ஸ்க்ரப் டைஃபஸ். வாயில் பெயர் நுழையவில்லையா? பரவாயில்லை. ஒருவகையான ஃபீவரின் பெயர் இது என புரிந்துகொண்டாலும் போதும்.ஆந்திராவில் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் எனும் காய்ச்சல் பரவி சமீபத்தில் 9 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 
இதிலிருந்து இதன் வீரியத்தை உணரலாம். அத்துடன் நாம் அனைவரும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியதும் காலத்தின் கட்டாயம். ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சல். 

ஓரியன்சியா சுட்சுகாமுஷி - ஆமாம். ஜப்பானியர்தான். ‘ஜப்பான்காரன் எதை எதையோ கண்டுபிடிக்கிறா மாதிரி’ இதையும் கண்டறிந்திருக்கிறார்கள் - அப்படி கண்டறிந்தவரின் பெயர்தான் ஓரியன்சியா சுட்சுகாமுஷி.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இந்த பாக்டீரியா காணப்பட்டாலும் மேற்கே பாகிஸ்தான், கிழக்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வாழும் நூறு கோடி மக்கள் இந்த ஸ்க்ரப்  டைஃபஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளார்கள்.உலக வரைபடத்தில், மேற்கே பாகிஸ்தான், கிழக்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிலும் புள்ளி வைத்து கோடால் இணையுங்கள். சரியாக ஒரு முக்கோணம் வரும்.
இந்த முக்கோணமே, ‘சுட்சுகாமுஷி முக்கோணம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த முக்கோணம் இருக்கும் பகுதியில் வாழும் சுமார் நூறு கோடி மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் அறிகுறியில் நான்கில் ஒருவருக்கு ‘ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்’ உள்ளேன் ஐயா எனக் குரல் கொடுக்கிறது. 

தமிழ்நாடும் இந்த சுட்சுகாமுஷி  முக்கோணத்துக்குள் வருகிறது என்பதுதான் அதிர்ச்சி செய்தி. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. 

தொற்றுக்குள்ளான உண்ணிகள் மனிதர்களைக் கடிக்கும்போது நமக்கும் தொற்று பரவுகிறது. உண்ணிகளில் வாழும் பாக்டீரியாக்கள், மனிதனைக் கடிப்பதன் வழியாகப் பரவுகிறது. பூனை, நாய், எலி  போன்று மனிதனிடம் நெருங்கி வாழும் விலங்குகளிடமும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுத்துகிறது என்பது கவனத்துக்குரிய விஷயம்.  

எனவே இந்த டிக் மைட் வகை உண்ணி பாதிப்புக்குள்ளான வளர்ப்புப் பிராணிகளிடம் நெருங்கிப் பழகும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்தத் தொற்று மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு வேறு வழிகளில் பரவுவதில்லை என்பது ஆறுதலான செய்தி. எனவே இது தொற்றுநோய் அல்ல. இவ்வாறு உண்ணிக் கடி பட்டதில் இருந்து பதினான்கு நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், நெறிகட்டிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படும். 

கவனிக்காமல் விட்டால் இரண்டாவது வாரம் பிதற்றல் நிலை, நிமோனியா, குழப்ப நிலை, கோமா, திடீர் சுவாசச் செயலிழப்பு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் ஏற்படலாம். 
கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணமடைவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதமளவுக்கு இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

மேற்சொன்ன அறிகுறிகளுடன் கூடவே உண்ணி கடித்த இடம் சிவந்து சிகரெட்டில் சுட்டது போன்ற நீள்வட்டமான புண் உருவாகும். பிறகு அந்தப் புண் கருப்பு நிறத்தில் உலரும். இதை ‘எஸ்கர்’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

இந்த எஸ்கர் நமது உடலில் கதகதப்பும் வேர்வை சுரப்பும் ஒருங்கே இருக்கும் கழுத்து, கக்கம், அக்குள் ஆகிய இடங்களில் தென்படலாம். தொப்புளுக்குக் கீழே இந்தப் புண் இருக்கலாம். 
பெண்களைப் பொருத்தவரை மார்பகங்களிலும் மார்பகங்களுக்குக் கீழ் உள்ள பகுதியிலும் இந்தப் புண் இருக்கலாம். இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானதும் சிகிச்சை அளிக்காமல் கடத்தும் நாட்களில் உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களில் தீவிர அழற்சி நிலை தோன்றும். 

ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழற்சி, ரத்த நாளங்களில் கசிவு ஆகியவற்றின் விளைவாக முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே, மருத்துவரை சந்திப்பதிலும் சிகிச்சை எடுப்பதிலும் காலதாமதம் கூடாது. 

வயது முதிர்ந்தோர், ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு கொண்டவர்கள், கூடவே இதய/ சிறுநீரக/கல்லீரல் சார்ந்த இணை நோய்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது தீவிரத்தன்மையுடன் வெளிப்படும் வாய்ப்புண்டு.

மாறிவரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வெப்பமும் கூடவே ஈரப்பதமும் தொடர்ந்து நிலவுவதால் இந்த வகை உண்ணிகள் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்றிருக்கின்றன.  
நமது உடலில் கூட ஈரப்பதமும் வெப்பமும் இருக்கும் பகுதிகளான அக்குள், கக்கம் ஆகிய பகுதிகளில்தான் முதலில் கடித்துப் புண் ஏற்படுத்துகிறது. 

ஒருவருக்கு காய்ச்சல் அடிக்கும்போது வேறெந்த அறிகுறிகளும் இல்லாமல் தீவிரக் காய்ச்சல், அதீத தலைவலி, அதீத உடல் சோர்வு இருந்தால்... உடனடியாக உடலில் எங்காவது சிகரெட்டால் வைத்து சுட்டது போன்ற வட்ட வடிவ புண் இருக்கிறதா அல்லது கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் காய்ந்த புண் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். உடனடியாக இதை மருத்துவரிடம் தெரிவியுங்கள். 

இந்த ஓரியன்சியா சுட்சுகாமுஷி பாக்டீரியா, உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களைத் தாக்கி அழற்சி ஏற்படுத்தும் என்பதால் விரைவாகக் கண்டறிந்து அதற்குரிய ஆன்டிபயாடிக் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.டாக்சிசைக்ளின் - அசித்ரோமைசின் - க்ளோராம்ஃபெனிகால் ஆகிய ஆன்டிபயாடிக்குகள் இந்த பாக்டீரியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாக மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. 

சரி... எவ்வாறு இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது? 

* இந்த உண்ணிகளிடம் இருந்து கடிபடாமல் இருப்பதே முதல் தற்காப்பு நடவடிக்கை.

* நமது வீடுகளில் உபயோகப்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை சரியாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். 

* உண்ணிகள் வளராதவாறு உண்ணிக் கொல்லி மருந்துகளை நமது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெளித்து வரவேண்டும். ஆனால், இது பிராக்டிகலாக சாத்தியமற்றது. என்றாலும் தெளித்து வைப்பதில் தவறில்லை.

* வனாந்தரங்களுக்கு ட்ரெக்கிங், ஹாக்கிங் , டூர்  செல்வீர்கள் என்றால் கொசு விரட்டி, உண்ணிவிரட்டிக் களிம்புகளை உடலில் தேய்த்துக்கொள்ள வேண்டும். 

* காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் எப்போதும் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் நினைவும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அச்சம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்.

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா