சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வயசு 150



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

          வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததும், நீதி பரிபாலனத்துக்கென இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றத்தை அமைத்த இடம் சென்னை. பிரிட்டிஷ் இந்தியாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் (1801&1862) சுப்ரீம் கோர்ட் சென்னையில் இயங்கியது. அதிகார எல்லைகள் அதிகரித்தபோது ஒரே நீதிமன்றம் போதவில்லை. சென்னை, மும்பை, கல்கத்தா உயர் நீதிமன்றங்களாகப் பிரிந்தது. அது நடந்து 150 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆம்! சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வயசு 150.

1862ல் தொடங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம் முதல் 30 வருடங்கள் கஸ்டம்ஸ் ஹவுஸ் கட்டிடத்திலேயே இயங்கியது. அதாவது ஏற்கனவே 60 வருடங்களாக பிரிட்டிஷ் இந்தியாவின் ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ செயல்பட்டு வந்த இடத்தில். இந்த இடம்தான் தற்போதைய சிங்காரவேலர் மாளிகை.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine பாரிமுனையில் இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. 1888 அக்டோபர் முதல் 1892 ஜூலை வரை கட்டுமானப் பணிகள் நடந்தன. மொத்தச் செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.

 உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் இந்த இடம் முன்பு சென்ன கேசவ, சென்ன மல்லேஸ்வர ஆலயங்கள். நீதிமன்றம் அமைவதற்காகவே அனைவர் ஒத்துழைப்புடனும் அந்த ஆலயங்கள் சற்றுத் தள்ளி இடம் பெயர்ந்தன. தற்போது பூக்கடை காவல் நிலையம் அருகே அந்தக் கோயில்கள் அமைந்துள்ளன.

 பிரிட்டிஷ் துரைகளே நீதிமான்களாக அமர்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றியவர் நீதியரசர் முத்துசாமி அய்யர். ‘முதல் இந்திய நீதிபதி’ என்ற பெருமையைப் பெற்ற அவர், தெருவிளக்கில் படித்து உயர்ந்தவர். பிற்காலத்தில் அவர் வழங்கிய தீர்ப்புகளில் ஆங்கிலேயர்களே அசந்து போயிருக்கிறார்கள்.

 இந்தியாவில் கலங்கரை விளக்கம் அமையப்பெற்ற ஒரே நீதிமன்ற வளாகம் சென்னை உயர்நீதிமன்ற வளாகமே.

 ‘உயர் நீதிமன்றச் சிந்து’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் புகழ்பாடும் பாடலும் அப்போது இயற்றப்பட்டிருக்கிறது. 1908ல் பாடலை இயற்றியது செஞ்சியைச் சேர்ந்த ஏகாம்பர முதலியார். 150வது ஆண்டு கொண்டாட்டத்துக்கான ‘தீம் சாங்’ இயற்றியிருப்பது கவிப்பேரரசு வைரமுத்து.

 ‘முதல் இந்தியத் தலைமை நீதிபதி’ என்ற பெருமை பெற்ற நீதியரசர் ராஜமன்னார்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிக காலம் (1948&1961) தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர். ஆறே நாட்கள் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதியரசர் சண்முகசுந்தர மோகன்.

  இங்கு பதவி வகித்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளானவர்களின் லிஸ்ட்டும் பெரியதே. பதஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் என நீளும் பட்டியலில் விரைவில் சேர இருக்கிறார் நீதியரசர் சதாசிவம்.

 தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கென அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60. இதில் 43 பேர் நிரந்தர நீதிபதிகளாகவும் 17 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் இருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் 12 பேர். 12 தென்மாவட்ட வழக்குகள் மதுரையில் விசாரிக்கப்படுகின்றன.

 150 ஆண்டுகால பயணத்தில் இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் பல பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை. இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 15 திருத்தங்களுக்கு அடிகோலிய தீர்ப்பினை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றமே.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனையைக் குறைத்தது, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதரையும் என்.எஸ். கிருஷ்ணனையும் விடுவித்தது போன்ற சில முக்கியத் தீர்ப்புகளின் ஆவணங்கள் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 பசுவின் துயர்துடைக்க மகனைத் தேரேற்றிக் கொன்ற தமிழ் மன்னன் மனுநீதிச் சோழன்தான் உயர் நீதிமன்ற முகப்பில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறான். 125வது ஆண்டு நிறைவின்போது இச்சிலை நிறுவப்பட்டது. அதேநேரம், சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்றான பிறகும், மெட்ராஸ் ‘சென்னை’ என மாறிய பிறகும்கூட உயர்நீதிமன்ற பெயர்ப்பலகையில் ‘மெட்ராஸ்’ என்றே பளிச்சிடுவதைத்தான் தாங்க முடியவில்லை தமிழார்வலர்களால்.

 அய்யனார் ராஜன்
படங்கள்: பால்துரை