அஞ்சலி போன் நம்பர் கூட என்கிட்ட இல்லை... ஜெய்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

             கத்தரிக்காய் முற்றித்தான் கடைத்தெருவுக்கு வர வேண்டும் என்பதில்லை. பிஞ்சுக் கத்தரியும் சீசனில் மார்க்கெட்டைப் பிடித்துவிடும். இது கோலிவுட் மார்க்கெட்டிலும் காதல் சீசன் என்பதால் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் காதல் என்கிற விவகாரம் புகைய ஆரம்பித்த சில வாரங்களுக்குள்ளேயே சென்ற வார செய்திகளில் பற்றிக் கொண்டது. அதற்கு முக்கியக் காரணம், அஞ்சலியின் ஒரு கடிதம்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்ததிலிருந்து ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி அங்கங்கே பிட் நியூஸாக இடம் பிடித்துக் கொண்டிருந்தது. என்ன நெருக்கடியோ, யார் ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை...

திடீரென்று அஞ்சலியிடமிருந்து எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் ஒரு கடிதம்.

‘ஐந்து வருடங்கள் போராடிப் பெற்ற நல்ல பெயரையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் விதமாக ஒரு நடிகருடன் இணைத்துத் தான் கிசுகிசுக்கப் படுவதாகவும், அவருக்கும் தனக்கும் காதல் இல்லை யென்றும், ஒரே ஒரு படத்தில் மட்டும் அவருடன் நடித்த தான், இந்தக் கிசுகிசுக்களாலேயே இனி அந்த நடிகருடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டதாகவும், இனி அந்த நடிகருடன் இணைத்து காதல், திருமணம் என்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம்’ என்றும் அந்தக் கடிதத்தில் அஞ்சலி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தை இதுவரை அறியாத செய்தியாளர்களும் இந்தக் கடிதம் மூலம் அந்தக் கிசுகிசுவைத் தேடி அறிந்து அஞ்சலி பேர் சொல்லாமல் விட்ட ‘அந்த’ ஹீரோ ஜெய்தான் என்று கண்டறிந்தார்கள். ஆக, வேலியில் ஓடிக்கொண்டிருந்த ஓணானுக்கு ஆடித் திரிய ஆடைக்குள் இடம் கிடைத்தது.

அடுத்து ஜெய்யை தேடியபோது அவர் அகப்படவில்லை. சில தினங்கள் முயற்சிக்குப்பின் அவர் சொல்லியிருந்த பதிலில், ‘அஞ்சலியுடன் எனக்குக் காதல் இல்லை. என் திருமணம் நிச்சயமாக காதல் திருமணம் இல்லை. ஒரு நடிகையை நிச்சயமாக நான் மணக்க மாட்டேன்’ என்றும் கூறியிருந்தார். இதிலெல்லாம் எந்த அளவுக்கு உண்மை..? பேசினார் ஜெய்...

‘‘கொஞ்ச நாளா நம்மளைப் பத்தி ஒண்ணும் செய்தியே வரலையேன்னு பார்த்தேன். யார்தான் இப்படியெல்லாம் கிளப்பி விடறாங்கன்னே தெரியலை. நான் அஞ்சலியோட சேர்ந்து நடிச்ச ஒரே படம் ‘எங்கேயும் எப்போதும்’ மட்டும்தான். அதுக்கான புரமோஷன்கள்ல அஞ்சலியும், நானும் ஒண்ணாவே பல நிகழ்ச்சிகளுக்குப் போனோம். ஏ.ஆர்.முருகதாஸ்தான் அந்தப் படத்தோட தயாரிப்பாளர்ங்கிறதால அவர் டைரக்ட் பண்ணியிருந்த ‘ஏழாம் அறிவு’ படத்துல கூட ‘எங்கேயும் எப்போதும்’ புரமோஷனுக்காக ஒண்ணாவே எங்களைப் படம் பார்க்க வச்சார்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazineஇதையெல்லாம் பார்த்த யாரோ கிளப்பி விட்ட விஷயம் இதுன்னு நினைக்கிறேன்.

இந்த செய்திகளைப் பார்த்துட்டு, ‘நான் தான் இதை யெல்லாம் கிளப்பி விடறேன்’னு கூட யாராவது தப்பா நினைச்சிருக்கலாம். சிம்புவோட ‘வேட்டை மன்னன்’ டிஸ்கஷனுக்காக கொஞ்ச நாள் ஹாங்காங் போயிருந்ததால நான் ‘நாட் ரீச்சபிள்’. இதெல்லாம் சேர்ந்து என்மேல சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கு போல. நான் சென்னை திரும்பி வந்ததும்தான் இதையெல்லாம் கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன். பழகியவரை அஞ்சலி நல்ல தோழியாதான் பழகினாங்க. உண்மையில அஞ்சலியோட போன் நம்பர் கூட எனக்குத் தெரியாது. அதனால இது பற்றியெல்லாம் என்னால அஞ்சலிகிட்ட கேட்கக்கூட முடியலை...’’

‘‘சரி... நிச்சயமா ஒரு நடிகையைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்களே... அதுக்கு என்ன அர்த்தம்..?’’

‘‘ஐயய்யோ.. அதுவும் தப்பாயிடுச்சா..? நானும் நடிகன். எப்ப எங்கே இருப்பேன்னு தெரியாம உள்ளூர், வெளியூர்னு ஷூட்டிங்ல இருப்பேன். என் மனைவியும் நடிகையா இருந்து அவங்களும் பிஸியா இருந்தா அது சந்தோஷமான வாழ்க்கையா இருக்குமா..? அதைத்தான் சொன்னேன். அது நடிகையோ இல்லையோ குறிப்பா ‘வேலைக்குப் போற பெண் வேண்டாம்... குடும்பத்தைப் பார்த்துக்கிற பெண்தான் வேணும்’ங்கிறதுதான் அதுக்கு அர்த்தம்..!’’

வேணுஜி