மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





மிதுனம் என்றாலே இரட்டை என்று பொருள். இரண்டு குழந்தைகள் சேர்ந்து நிற்பதுபோல ஒரு தோற்றத்தை அந்த நட்சத்திரத் தொகுப்பு தெரிவிப்பதால் மிதுனம் என்கிறோம். மிருகசீரிஷத்தின் 3, 4, பாதங்களும், திருவாதிரையும், புனர்பூசத்தின் 1, 2, 3 பாதங்களும் இதற்குள் அடங்கும். புதன் இதை ஆட்சி செய்கிறார்.

பொதுவாகவே மிதுன ராசியினர் தன்மானம் பார்ப்பவர்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு முன்னேறுவீர்கள். உங்களின் வேலைவாய்ப்பு ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக மீன குரு வருகிறார். ஆனால், உங்கள் ராசிக்கு அதிபதியான புதனுக்கு ஜென்மப் பகையாகவும், பாதகாதிபதியாகவும் குரு வருகிறார். உங்களில் பலருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால், சரியான வேலை கிடைக்க காலதாமதம் ஆகும். நல்ல வேலை, கைநிறைய சம்பளம், அடுத்தடுத்த பதவி உயர்வு என்றிருந்தால், வீட்டில் பிரச்னையும் போராட்டமுமாக இருக்கும். இந்த ராசியில் பிறந்து, ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கினால், அது பெரிய சாதனை. அப்படி வாங்குகிறவர்கள் பல காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து வெவ்வேறு இடங்களில் வேலை செய்தவராக இருப்பார்கள்.
சிறிய வயதிலேயே நிறைய மதிப்பெண் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்து படிப்பீர்கள். ‘‘இந்த வேலைக்குன்னா இவ்ளோ படிக்கணும்’’ என்று திட்டமிடுவீர்கள். ஆனால், உத்யோகத்தில் உயர்ந்த இடத்திற்கு வர உங்கள் மார்க் ஷீட் மட்டும் போதாது என்பதை காலதாமதமாக உணர்வீர்கள். பிரமோஷன் கட் ஆகும்போதெல்லாம், ‘ஏன் நமக்கு மட்டும் இப்படி ஆகிறது’ என்று யோசிப்பீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வகுப்பறைப் பாடங்கள் மட்டும் போதாது; வாழ்க்கையின் நிதர்சன பாடங்களே வேண்டும் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தோடு இணை தொழிலாக எதையாவது சேர்த்துச் செய்வீர்கள். ஆரம்பத்தில் நஷ்டம் வரத்தான் செய்யும். தொடக்கத்தில் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நடுவே நின்று சம்பாதிக்க முயற்சி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக சொந்த வியாபாரத்தில் இறங்கலாம்.

கூட்டுத்தொழில் உங்களுக்கு சரியாக வராது. அப்படிச் சென்றால் அப்பளம்போல வியாபாரம் நொறுங்கி விடும். எதுவாக இருந்தாலும் தனியாளாக நின்று போராடினால் நல்லது. ஆனால், உங்கள் ராசியிலுள்ள திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் இடம், பொருள், ஏவல் அறிந்து எல்லாவற்றையும் செய்வீர்கள். அலுவலகத்தில் வஞ்சனையே இல்லாமல் எவ்வளவு நேரமானாலும் வேலை பார்ப்பீர்கள். ஆனால், கௌரவமாக நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். எப்போதுமே எல்லாவற்றையும் தேங்காய் உடைத்ததுபோல பேசுவதால் அலுவலகத்தில் ஆங்காங்கு எதிரிகள் முளைத்த வண்ணம் இருப்பார்கள். எவ்வளவு சிறப்பாக ஒரு வேலையை செய்தாலும், திருப்தி என்பது இருக்காது. இனி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எப்படி என்று பார்ப்போம்...

மிருகசீரிஷம் போர்க் கிரகமான செவ்வாயை அதிபதியாகக் கொண்டது. புத்தி கிரகமான புதனை தலைவராகக் கொண்ட மிதுன ராசியில் இது இடம் பெறுகிறது. இதனால், தீயிலிட்ட தங்கம்போல, தன்னைத்தானே உருக்கி மெருகூட்டிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் எப்போதுமே எதிலும் ஒரு அர்ப்பணிப்பு குணம் இருக்கும். பக்கத்து இருக்கை ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்ப்பதுண்டு. முன்பின் தெரியாதவர்கள் அலுவலகத்திற்கு வந்து விழித்துக் கொண்டிருந்தால் தேடிச் சென்று உதவுவீர்கள். ‘‘ரொம்ப நல்லவர்தான்... ஆனா மனசை நோகடிக்கற மாதிரி ஏதாவது சொல்லிடறாரு’’ என்பார்கள் உங்களைப் பற்றி! நட்சத்திர அதிபதியான செவ்வாய், மற்றவர்களை பதம் பார்க்க மறக்க மாட்டார். எவ்வளவுதான் திறமை இருந்தாலும், பளிச்சென்று வெற்றிகளும் முன்னேற்றமும் இருக்காது. போராடியே வெற்றி பெறுவீர்கள். வேலை நன்றாக இருந்தாலும், விரும்பிய சம்பளம் கிடைக்காது. 30 வயது வரை அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். முதல் முப்பது முடக்கினாலும், பின் முப்பது முன்னேற்றத்தை அளிக்கும்.

மிருகசீரிஷம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் நிறைய வேலை கொடுத்தாலும் எதிர்த்து கேள்வி கேட்காமல் செய்வீர்கள். அவமானப்படுத்தினால் கூட குடும்ப நிலைமையை யோசித்து சகித்துக் கொள்வீர்கள். இன்சூரன்ஸ், கெமிக்கல், மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு, பொருளாதார ஆசிரியர், விவசாயத்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர் போன்ற வேலைகள் கிடைத்தால் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மின்சாரத்துறை, தீயணைப்புத் துறை, தாய் சேய் நல விடுதி, போதை மீட்பு மருத்துவர் என்ற துறைகளில் ஈடுபட்டால் முன்னேற்றம் எளிதாக இருக்கும். மரவேலை, இன்டீரியர் டெக்கரேஷனிலும் சிறந்து விளங்குவீர்கள்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வேலையில் அதீத ஈடுபாடு இருப்பதுபோல காண்பித்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் மூளைத்திறனை எளிதாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவீர்கள். சபை அலங்காரப் பேச்சுகளில் வல்லவராக இருப்பீர்கள். ‘‘கோடு கிழிச்சா ரோடு போடுவாரு’’ என்பதெல்லாம் உங்களைப் பார்த்துச் சொன்னதுதான். குருட்டு அதிர்ஷ்டம் எப்போதுமே உங்களுக்கு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களைச் சார்ந்திருப்பதையே விரும்புவீர்கள். அவர்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடாமல் பார்த்துக் கொள்வீர்கள். எந்த அலுவலகத்தில் சேர்ந்தாலும், எல்லோரும் தன்னைத் தேடி வரும்படி பார்த்துக் கொள்வீர்கள். அதேசமயம் பல அணியாக வேலையாட்களைப் பிரித்து வேலை வாங்குவதில் வல்லவர் நீங்கள்.

முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மருந்து விற்பனைப் பிரதிநிதி, வங்கிக் கடன் வசூலிப்பாளர், இன்சூரன்ஸ் கம்பெனியில் விபத்து காப்பீட்டுத் துறை, ராணுவத்தில் எல்லை பாதுகாப்புப் பணி, வழக்கறிஞர் என துறைகளில் சிறந்து வருவீர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிளாஸ்டிக் தொழிற்சாலை, முறுக்குக் கம்பிகள் மற்றும் இரும்பு உருக்காலைகள், ரயில் எஞ்சின் டிரைவர், பைலட் போன்ற அதிகாரப் பதவிகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், நில அளவையாளர், முத்திரைத்தாள் விற்பனையாளர், கிளப் நிர்வாகி, தண்ணீர் சுத்திகரித்து விற்பனை, நேஷனல் பர்மிட் லாரி கம்பெனி, பெட்ரோல் பங்க், அரிசி மண்டி போன்றவை ஏற்றதாக இருக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இறால் பண்ணை, பள்ளி நிர்வாகி, செவிலியர் பயிற்சிக் கல்லூரி, புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் மக்கள் தொடர்பு அதிகாரி, எஞ்சின் ஆயில் கம்பெனி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் வேலை கிடைத்து மேல் நிலைக்கு வளர்வார்கள்.

மிதுன ராசியில் இடம்பெற்றுள்ள சாத்வீகமான நட்சத்திரம் புனர்பூசம். இந்த நட்சத்திரத்தை அனுபவ ஆச்சார்யன், ஞான பரிபூரணனான குரு ஆட்சி செய்கிறார். முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் இடம்பெற்றுள்ளன. துரியோதனனுக்கும் நல்ல நாள் பார்த்துச் சொன்ன சகாதேவனைப்போல, ஜென்ம எதிரியாக இருந்தாலும் ஏதேனும் கேட்டு வந்துவிட்டால் தயங்காமல் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் கூட பதவியைப் பார்க்காமல் அதில் அமர்ந்திருக்கும் மனிதரை உற்றுப் பார்ப்பீர்கள். அதைப் பொறுத்துத்தான் நட்பை வளர்த்துக் கொள்வீர்கள். புனர்பூசம் குருவினுடைய நட்சத்திரம்; உங்களின் ராசியாதிபதி புதன். இரண்டு பேருமே ஜீனியஸ்தான். ஆனால், கொஞ்சம் பகைவர்கள். வேதம், உபநிடதங்கள் என்று எடுத்துக்காட்டி குரு பேசுவார். எவ்வளவு கற்றாலும் தன்னளவில் உள்ளதை மட்டும் சரியென்பார் புதன். இதனால் நீங்கள் எப்போது எதை ஏற்றுக் கொள்வீர்கள் என்றே புரியாது அலுவலகத்தில் உள்ளவர்கள் திணறுவார்கள்.       

புனர்பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எலெக்ட்ரிகல் துறை சார்ந்த பணிகள், அக்குபங்சர், தானிய அரவை நிலையம், தானியக் கிடங்கு நிர்வாகி, உளவியல் நிபுணர், ஜோதிடத் துறை என்று பணியாற்றுவீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட முடநீக்கியல் சிறப்பு மருத்துவராகும் வாய்ப்பு உண்டு. மருத்துவ, அரசியல் இதழ்கள் மற்றும் அதைச் சார்ந்த பப்ளிகேஷன் துறையில் பிரகாசமான எதிர்காலம் உண்டு. 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் கன்ஸ்ட்ரக்ஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் பழுதுக்கூடம் என்று தொழில்கள் செய்வீர்கள். சாஃப்ட்வேரில் புரோக்ராமர், புராஜெக்ட் மேனேஜர், வருவாய்த்துறை, கருவூலத்துறை, நீதிமன்றங்களில் பணிபுரிபவராகவும் இருப்பீர்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளின் குறை தீர்ப்பாளராகத்தான் பொதுவாக பணிபுரிவீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் யோகா மாஸ்டர், பர்சனாலிடி டெவலப்மென்ட் கோர்ஸ் மாஸ்டர், வங்கியில் காசாளர், பள்ளி ஆசிரியர், கமிஷன் ஏஜென்ட் என்று இருப்பீர்கள். மருத்துவத்தில் ரேடியோலஜி, அனஸ்தீஸியா ஸ்பெஷலிஸ்ட் ஏற்ற துறைகள். டெலி கம்யூனிகேஷன் கம்பெனிகள் மற்றும் டெலி ஷாப்பிங் போன்ற துறைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

மிதுன ராசிக்கு பத்தாம் இடமாக - அதாவது வேலையைக் கொடுக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியாக - மீன குரு வருகிறார். எனவே, பொதுவாகவே உங்களுக்கு மகான்களின் தரிசனத்தைப் பெறுதல் எப்போதும் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு மகான்தான் விருத்தாசலத்தில் ஜீவ சமாதியுற்ற குமாரதேவர் ஆவார். ஒருமுறை குமாரதேவர் திருவாரூர் சென்று தியாகேசனை தரிசித்தார். தேர்த் திருவிழாவின்போது மாட வீதியில் இருந்து தேரின் அழகில் தன்னை மறந்து நின்றார். அப்போது குமாரதேவரின் அருமை தெரியாத இருவர், அவரை இழிவு படுத்தும் பொருட்டு ‘வீரசைவ மருளைப் பார்த்தீரா’ என்றனர். இதைக் கேட்ட குமாரதேவர், ‘‘இந்த வீரசைவம் மருள் என்றால் தேர் செல்லட்டும். அருள் என்றால் நிற்கட்டும்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் மூழ்கினார். தேர் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. பிறகு எல்லோரும் குமாரதேவரின் பாதம் பணிய, தேர் நகர்ந்தது. இப்படி குமாரதேவரின் அற்புதங்கள் எண்ணற்றவை.

குமாரதேவர் புரட்டாசி மாதம் பூர்வபட்சம் சதுர்த்தசி திதி கூடிய பூர நட்சத்திர நன்னாளில் தாம் தியானம் செய்த இடத்திலேயே ஈசனோடு ஒளிப்பிழம்பாய் மாறி கலந்தார். இது நடந்தது 16ம் நூற்றாண்டு. இன்றும் குமாரதேவரின் அற்புதங்களை நினைவுபடுத்தியபடி இருக்கின்றன அவரது திருமடமும் திருக்கோயிலும். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருக்கின்றன இவரது நினைவாக அமைக்கப்பட்ட திருக்கோயிலும் திருமடமும் ஜீவசமாதியும். விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதியும் ஆட்டோ வசதிகளும் உண்டு.
(தீர்வுகளைத் தேடுவோம்...)