இ.என்.டி... பராமரிப்பு கியாரண்டி!





அக்கு மருத்துவத்தைப் பொறுத்தவரை, நம் உடல் உறுப்புகளில் ‘மிஸ்டர் நாட்டாமை’ காதுதான். பல்வேறு உள்ளுறுப்புகளின் பலவகையான குறைபாடுகளை சரி செய்யும் மையமாக அமைகிறது அது. ஒவ்வொரு காதிலும் தலா 124 அக்கு புள்ளிகள் உள்ளன. காதில் பரவியிருக்கும் அந்த அக்கு புள்ளிகளால் விரட்ட முடியாத நோய்களே இல்லை எனலாம். எல்லா பிரச்னைகளுக்கும் காது வழியாக சிகிச்சை தரலாம்... அந்தக் காதுக்கே பிரச்னை என்றால்..? பொக்கிஷத்தைப் பாதுகாக்க வழி சொல்லாமலா போயிருப்பார்கள்? காதுகளின் நலன் பேணுகின்ற எளிமையான அக்கு பிரஷர் பயிற்சிகளை இந்த இதழில் பார்ப்போம்...

காதுகளைப் பொறுத்தவரை காது கேளாமை, காதடைப்பு இரண்டும்தான் காலம் காலமாக இருந்து வருகிற பிரச்னை. காது கேளாமை பிறவியிலேயே வரலாம்; கர்ப்ப காலத்தில் தாய் அதிகளவில் ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்கு காது கோளாறுகள் ஏற்படக் கூடும். முன்னோர்கள் யாருக்காவது காது பிரச்னைகள் இருந்தால், அந்த பாதிப்பும் தலை முறைகளைத் தாண்டி வரலாம். இடையில் விபத்து, வெடிச்சத்தம் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளானாலும் காது கேட்காமல் போகலாம். இவற்றிற்கான சிகிச்சையைப் பார்க்கலாம்.


வரும்முன் காக்க... கர்ப்பமாக இருக்கும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், கர்ப்பகால உடற்பயிற்சியோடு கூடுதல் பயிற்சியாக, சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் சந்திக்கும் அடிப்பகுதியில் தினமும் இருபது முறை இதமாக அழுத்தி வர வேண்டும். தாய்க்கோ அல்லது குடும்பத்தில் வேறு யாருக்குமோ காது கேட்காத பிரச்னை இருந்தால், பிறந்த குழந்தைக்கு ஒரு வயதிலிருந்தே இந்த ‘விரல் சிகிச்சை’யை ஆரம்பித்து விடலாம். வேறு பாதிப்புகளால் காது கேளாமல் போனவர்கள் கூட, இதே சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், நாளடைவில் கேட்கும் திறனில் முன்னேற்றம் வரும்.

காதடைப்பு மற்றும் சீழ் பிரச்னையைச் சரிசெய்ய அக்கு மருத்துவம் பயன்படுத்தும் ஒரு முறை மிகவும் தொன்மையானது. மெழுகு பூசிய ஒரு காகித உருளை மூலம் அடைப்புக்குக் காரணமான பொருட்களை அகற்றும் இந்த டெக்னிக், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனில் கடைப்பிடிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. அந்தக் காகித உருளையின் ஒரு முனையை காதுக்குள் பொருத்தி, இன்னொரு முனையில் தீயைப் பற்ற வைத்துவிட்டால் போதும்... தீ எரிய எரிய, இந்த உருளை காதினுள் இருக்கும் அழுக்கு, நீர் உள்ளிட்டவற்றை உள்வாங்கி இழுக்கும். சமயத்தில் காதுக்குள் எறும்பு, வண்டு, பூச்சிகள் இருந்தால் கூட இந்த சிகிச்சை வெளியில் இழுத்து வந்து விடும்.

சமீபமாக அதிகம் பேரை அட்டாக் செய்திருக்கும் காது சம்பந்தப்பட்ட இன்னொரு பிரச்னை... செல்போனால் உண்டாகும் பாதிப்பு. சதா செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறவர்களுக்கு காதுகளின் பின்புறமுள்ள அகௌஸ்டிக் நரம்புகள் வலுவிழந்து ‘டினிட்டஸ்’ என்கிற ஒருவகைக் கோளாறு ஏற்படுகிறது. ‘அடிக்கடி ரிங்டோன் ஒலிக்கிற மாதிரியே இருக்கு’ என்பார்கள் சிலர். அதெல்லாம் இந்த வகையில்தான் வரும். தூங்கும்போது காதுகளுக்குள் ஒருவித இரைச்சல் கேட்பதும் டினிட்டஸ் காரணமாகத்தான். காதின் முன்புறமாக கன்னத்தையொட்டி மூன்று அக்கு புள்ளிகள் உள்ளன. அவற்றை அழுத்தி இந்தப் பிரச்னையை எளிதாகச் சரி செய்யலாம்.

ஆங்கில மருத்துவம் போலவே அக்கு பிரஷரிலும் காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றுதான். எனவே, காதுகளுக்கு எப்படியோ அதே போல சைனஸ், மூக்கடைப்புக்கும் அக்கு மருத்துவம் பரிந்துரைப்பது எளிமையான பயிற்சிகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் சிகிச்சைகளே. பத்து விரல்களின் நுனிப்பகுதியையும் (நகத்தை ஒட்டிய) ஒவ்வொன்றாக சில நிமிடங்கள் அழுத்தி விட வேண்டும். மேஜை உள்ளிட்ட மரப்பொருட்கள் மீதும் விரல்களை அழுத்தலாம். இதனால் மூக்கடைப்பு உடனடியாக விலகும். ‘ஈ.என்.டி மேக்னட்’ எனப்படும் ஒருவகைக் காந்தத்தை மூக்கின் இருபுறமும் அழுத்தியும் (அவை ஒட்டிக் கொள்ளும்) சைனஸ் பிரச்னையைச் சரி செய்யலாம். இதில், ஊதா நிற காந்தம் வலது புறமும் சிவப்பு நிற காந்தம் இடது புறமும் இருக்குமாறு அழுத்த வேண்டும்.


தொண்டைப் பகுதியில் இதே ஈ.என்.டி மேக்னட்டால் அழுத்தம் தருவதன் மூலம் தொண்டை கரகரப்புக்கும் முடிவு கட்டலாம். தொண்டையில் அமைந்திருக்கும் ‘டான்சில்’ எனப்படும் அடிநாக்குச் சுரப்பி, இயற்கை தந்த பாதுகாப்பு அரண். அதை ஆபரேஷன் செய்து அகற்றுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் இன்று! அக்கு மருத்துவம் அதை வெட்டி எறிய ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அங்கு ஏதாவது பிரச்னை என்றால், கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட ஜவ்வுப் பகுதியைத் தொடர்ந்து அழுத்தி வந்தாலே போதும். டான்சிலைப் பாதுகாக்கும் அக்கு புள்ளிகள் அங்குதான் மறைந்துள்ளன.
(தொடர்வோம்)
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்


ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்




*  அடிக்கடி காதடைப்பு பிரச்னைக்கு ஆளாகிறவர்கள் குளிக்கும்போது காதில் பஞ்சு வைத்துக் கொள்வது
நல்லது.

*  ஏசி அறையில் தூங்கும்போது குளிர்ந்த காற்று நேரடியாக காதில் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். காற்று நேரடியாக காதில் நுழைவது முகவாதத்துக்குக் காரணமாகி விடும்.

*  ஐஸ் கிரீம் விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடித்து விட்டால், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து தப்பித்து விடலாம்.

*  சாப்பிடும்போதோ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிப்பது சைனஸ் பிரச்னைக்குக் காரணமாவதால் அதைத் தவிர்க்கலாம்.

*  தொடர்ச்சியான அக்கு பிரஷர் பயிற்சிகள் சளித்தொல்லைகளை நிரந்தரமாக விரட்டி விடும்.