உயில் எழுதப் போறீங்களா!



‘‘என் நண்பருக்கு நேர்ந்த அனுபவம் இது. நண்பரின் தாத்தா இறக்கும் தறுவாயில் ஒரு சாதாரண வெள்ளைத்தாளில் உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில், தன் வாரிசுகள் சொத்துகளை ஆறு தலைமுறை வரை அனுபவிக்க முடியுமே தவிர விற்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். சாதாரண வெள்ளைத் தாள்தானே என நினைத்து நண்பர் சொத்துகளை விற்க முயன்றால், வாங்க யாரும் முன்வரவில்லை.

காரணம், அந்த வெள்ளைத் தாள் உயிலுக்கும் உயிர் உண்டு. இனி அந்தச் சொத்துகளை விற்பதும் வாங்குவதும் சட்டப்படி செல்லாது!’’ - உதாரணத்தோடு பேசுகிறார் ஐகோர்ட்டின் மூத்த வழக்கறிஞரான சத்தியசந்திரன். ஆன்லைன் வழியாகவே உயிலை எழுதும் நடைமுறை வந்துவிட்ட இன்றைய ‘நெட்’ காலத்தில், உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்...

* ஒருவர் தான் சம்பாதித்த சொத்து, தன் காலத்திற்குப் பிறகு யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை சுய நினைவோடு தெரிவிப்பதுதான் ‘உயில்’. இதற்கு தூய தமிழில், ‘விருப்பு உறுதி ஆவணம்’ என்று பெயர். சொத்து வைத்திருக்கும் யாரும் உயில் எழுத முடியும். ஆனால், அவர் இறப்பிற்குப் பிறகே அந்த உயில் உயிர் பெறும்.

* பரம்பரைச் சொத்து, சுயமாக சம்பாதித்தது என சொத்துகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பரம்பரைச் சொத்திற்கு உயில் எழுத முடியாது; சுயமாக சம்பாதித்த சொத்துகளுக்கு மட்டுமே ஒருவர் உயில் எழுத முடியும்.

* சாதாரண வெள்ளைத்தாளில் கூட ஒருவர் உயில் எழுதலாம். ஆனால், அதனை தெளிவாக எழுத வேண்டும். குறிப்பாக, சொத்து விவரங்களை விவரமாக சொல்ல வேண்டும். இதில் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளையும், அது தவிர இருக்கிற அசையும் சொத்துகள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும். பிறகு, ‘சுய நினைவோடு, யாருடைய வற்புறுத்தலோ, தூண்டுதலோ இல்லாமல் எழுதுகிறேன்’ எனவும் தெரிவிக்க வேண்டும். இரண்டு நபர்கள் சாட்சிகளாகக் கையெழுத்திட்டு அவர்களின் முகவரியையும் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் அந்த உயில் செல்லுபடியாகும். அல்லது முத்திரைத்தாளில் வழக்கறிஞரை வைத்தும் எழுதிக் கொள்ளலாம்.

* உயிலை பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ஆனால், 500 ரூபாய் கட்டி கோர்ட்டில் பதிவு செய்யும்போது ஒரு சட்ட அங்கீகாரம் கிடைக்கிறது. சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும்.

* ஒரு நபர், அவர் வாழும் காலத்தில் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். அப்படி எழுதும்போது அதற்கு முன்பு எழுதிய உயிலை ‘ரத்து செய்கிறேன்’ என்கிற வரிகளை மறக்காமல் சேர்க்க வேண்டும். அப்போதுதான், புதிய உயில் செல்லுபடியாகும்.

* ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் உயிலைப் பதிவு செய்ய முடியும். வேறு மாநிலங்களில் கூட உயிலைப் பதிவு செய்யலாம்.

* இந்து சட்டப்படி உயில் எழுதுபவர் முழு சொத்தையோ அல்லது ஒரு பகுதியையோ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், முஸ்லிம் சட்டப்படி உயில் எழுதும் நபர் அவர் சொத்தின் ஆறில் ஒரு பகுதியைத்தான் எழுத முடியும் என்கிறது சட்டம்.

* சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள், உயிலைப் பதிவு செய்தாலும் செய்யாவிட்டாலும் ஐகோர்ட்டிலிருந்து   Probate   சான்றிதழ் வாங்க வேண்டும். ‘உயில் ஐயத்திற்கு இடமற்றது’ என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் இது. இந்தச் சான்றிதழ் வாங்க, அந்த சொத்தின் அன்றைய மதிப்பில் 4 முதல் 6 சதவீத பணத்தை கோர்ட்டிற்கு கட்ட வேண்டும்.

இதனால், இப்போது உயில் எழுதுவது குறைந்து வருகிறது. பல நேரங்களில் உயிலால் பல்வேறு சட்டச் சிக்கல்களும் வருவதால், இதனைத் தவிர்க்க நாங்கள் செட்டில்மென்ட் செய்வதையே விரும்புகிறோம். ஒருவர் சம்பாதித்த சொத்தை இருக்கும் காலத்திலேயே பிரித்துக் கொடுத்துவிட்டால், பின்னாளில் பிரச்னை வராது. ஆனால், ‘சொத்துக்கு உரிமையானவரை பிள்ளைகள் விரட்டிவிட்டால் என்ன செய்வது?’ என்கிற கேள்வி இங்கே எழலாம்.

இதற்காகவே, ‘செட்டில்மென்ட் வித் லைஃப் இன்ட்ரஸ்ட்’ என்பதை முன்வைக்கிறோம். அதாவது, சொத்துகளைப் பிரிக்கலாம். அவரவர் அனுபவிக்கலாம். ஆனால், உரிமையாளர் உயிரோடு இருப்பதால் இதில் அவருக்கான உரிமை அற்றுப் போகாது என்பதை வலியுறுத்தி செட்டில்மென்ட் செய்கிறோம். இனி, ஆன்லைனிலும் உயில் எழுத முடியும்...

மும்பையைச் சேர்ந்த என்.எஸ்.டி.எல். என்கிற முதலீட்டுப் பாதுகாப்பு நிறுவனமும், ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டி நிறுவனமும் தனித்தனியாக ஆன்லைனில் உயில் எழுதும் முறையை தொடங்கி இருக்கின்றன. இதற்கு முதலில், அவர்களின் வெப்சைட்டில்   (www.ezeewill.com)  பதிவு செய்ய வேண்டும்.

பிறகு, ரூ.4 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு உயிலின் முழு விவரங்களை அதில் பதிவு செய்யலாம். பணம் செலுத்திய நாளிலிருந்து 60 நாட்கள் வரை விவரங்களைப் பதிவு செய்யலாம். இறுதி வரைவினை இமெயில் வழியாகவோ அல்லது உங்கள் வீட்டிற்கோ அனுப்பி விடுவார்கள். முதலில், ஒரு வரைவு உங்கள் பார்வைக்கு அனுப்பப்படும். அதில், தவறு இருந்தால் நீங்கள் மறுபடியும் விவரங்களை அனுப்பி புது உயிலைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்