ரஜினி சார் சூப்பர்னு சொன்னார்!



நெகிழும் கருணாகரன்

அடுத்தடுத்த வெற்றிகள் கூடி வந்திருக்கிற அமைதி... சாந்தமாக உட்கார்ந்திருக்கிறார் கருணாகரன். ‘சூது கவ்வும்’, ‘ஜிகிர்தண்டா’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என குவியும் டெடிகேட்களே இன்னும் குறையவில்லை. அதற்குள் அடுத்த அதகளத்துக்கு கருணாகரன் தயார். இந்த முறை கருணா கை கொடுத்திருப்பது ரஜினியிடம் ‘லிங்கா’வுக்காக...‘‘கொஞ்சம் உங்க பூர்வீகம் சொல்லுங்களேன்.’’

‘‘ ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி என் நண்பர். அவர் படம் பண்ணும்போது கொஞ்சம் உதவி பண்ணலாம்னு போனேன். அவர் என்னை நடிக்க வச்சிட்டார். ‘நல்ல பட்ஜெட், சரியான ஸ்கிரிப்ட்டோடு படம் பண்ணும்போது, வேற நல்ல நடிகரா போட்டுப் பண்ணுப்பா’னு சொன்னேன். ‘உன்னால முடியும்’னு சொல்லி நடிக்க வச்சிட்டார். அதுக்கு முன்னாடி குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். நான் நடிச்ச ‘நெஞ்சுக்கு நீதி’ குறும்படம் பார்த்துட்டு, ‘உங்க நடிப்பு நல்லாயிருக்கு கருணா’ன்னு தேடிப் பிடிச்சு சொன்னார் ஷங்கர் சார். தலையில வானத்து தேவதைகள் பூக்கொட்டுவது மாதிரி இருந்தது.

கொஞ்ச நாளில் ‘நண்பன்’ படத்திற்காக ஷங்கர் சார் ஆபீஸிலிருந்து போன். எனக்கு பயம். ஒரு வேலை பார்த்துட்டு இருந்தேன். அதை விட்டுட்டு சினிமாவுக்கு வரணும்; சினிமா நிலைக்குமான்னு சந்தேகம். நான் போகவேயில்லை. ‘இது தப்பு! அவர் ஆபீஸுக்கு போய் சொல்லிட்டு வந்திருக்கணும்’னு நலன் கண்டிச்சார்.

 அப்ப சுந்தர்.சி ஆபீஸிலிருந்து ‘கலகலப்பு’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. நான் நேரே சுந்தர்.சி சார் கிட்ட போய் எனது இயலாமையைச் சொன்னேன். ‘அதை விடுங்க, கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’னு சொன் னார். வேலைக்கு பாதகமில்லாமல் நடிச்சேன். இப்படி என்னை மறுபடியும் கட்டாயப்படுத்தி நடிக்க வச்சு பிள்ளையார் சுழி போட்டது அவர்தான்.

அப்புறம் அவரோட ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு ஸ்கிரிப்ட் ஒர்க் செய்யச் சொன்னார். நலன், நான், இன்னும் ரெண்டு நண்பர்கள் சேர்ந்து அந்த வேலையைப் பார்த்தோம். அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் ‘ஜிகிர்தண்டா’வுக்கு கூப்பிட்டு பெரிய கால்ஷீட் வாங்கினார். ‘இனிமேல் சினிமாதான் நமக்கு’ன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப ஆச்சரியம் என்னன்னா, போன வருஷம் முழுக்க நான் அனேகமா ஒருநாள் விடாம ஷூட்டிங்கில் இருந்திருக்கேன்!’’
‘‘அப்படின்னா சினிமா ஆசை இல்லையா? சந்தர்ப்ப வசம்தானா?’’

‘‘வீட்டில் யார் மாதிரியாவது நடிச்சுக் காட்டிட்டே இருப்பேன். எங்க குடும்பத்தில் எல்லாரும் நல்லாப் படிச்சவங்க. அப்பா சி.பி.ஐயில் இருந்தார். எந்த நேரத்தில் எங்க டிரான்ஸ்பர்னு தெரியாது. அப்படியிருக்கும்போது எப்படி ‘சினிமா’ன்னு தைரியமா வர முடியும்? இருந்தாலும் துணிஞ்சு சென்னை வந்திட்டேன். பீச்ல சன் டி.விக்காக குழந்தைகளை வச்சு ப்ரோகிராம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அந்த கேமராவுல ரெண்டு தடவை குறுக்கே குறுக்கே போனேன். வீட்டுக்கு வந்து ப்ரோகிராமை பார்த்தால் நான் அதில் இல்லை. பெரிய திரையில ஒரே ஒரு தடவை முகத்தைப் பார்க்கணும்னு ஆசை. கெமிக்கல் எஞ்சினியரிங் படிச்சேன். இப்படி கவனம் சிதறியதால் கை கொள்ளாம அரியர்ஸ். அப்பா கண்டிப்பினால் ஒரு மாதம் முழுக்க காலையிலும், மாலையிலும் படிச்சு பரீட்சை எழுதி முடிச்சேன். இப்ப பாருங்க... குறும்பு கேரக்டர்னா என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கிறாங்களே...

சந்தோஷம்!’’‘‘நீங்க காமெடியை விட கேரக்டர் ரோலில் ஆர்வம் காட்டுறீங்க...’’‘‘இப்படித்தான்னு எந்த வகையிலும் செட்டில் ஆகிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். எதையும் எடுத்துச் செய்யணும். இப்ப, ‘மகாபலிபுரம்’ படத்துல சீரியஸ் நெகட்டிவ் ரோல் பண்றேன். மக்கள் நல்ல கதை தேடித்தான் படம் பார்க்கறாங்க. அப்புறம்தான் நடிப்பைப் பார்க்கிறாங்க. படம் பிடிச்சிருந்தா, அதில் உள்ள ஒவ்வொருத்தர் நடிப்பையும் பார்க்கிறாங்க.

‘மொழி’, ‘அபியும் நானும்’ மாதிரி மனித உணர்வுகளை மென்மையா சொல்லிய ராதா மோகன் படத்துல நடிக்கிறேன். கொஞ்சம் நம்பிக்கையூட்டும் வரிசை இருக்கு. சின்சியராக வேலை பார்க்கிற மனசு இருக்கு. அருமையான டைரக்டர்கள் ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டை யோசிச்சா அதில் நானும் இருக்கிறது அவங்க பண்ற போன் காலில் தெரியுது!’’

‘‘ரஜினியின் ‘லிங்கா’வில் நடிக்கிறது எப்படி இருக்கு?’’

‘‘சத்தியமா நம்பவே முடியல. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஆபீஸிலிருந்து போன்னு சொன்னாங்க. ‘அடடா, காலையிலயே யாரோ ஓட்டுறாங்களோ’ன்னு யோசிச்சேன். நிஜமாகவே அழைப்பு. அதுவும் ரஜினி சாரோடு நடிக்கற வாய்ப்பு! ‘எந்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்போது, சத்யம் தியேட்டர் வாசல்ல அவரை நெருக்கியடிச்சு பார்த்தவன் நான். ‘லிங்கா’வுக்காக மைசூர் போனேன். ரவிக்குமார் சாரை பார்த்துட்டு ரெடியாகி ஸ்பாட்டுக்குப் போனால், அங்கே ரஜினி சார் இல்லை.

‘இதோ வந்திடுவார்’னு சொல்றாங்க. பார்த்தால் அதே சிரிப்போட வருகிறார். அந்த இடமே மலர்ந்து போச்சு. என்னை அவர்கிட்ட, ‘இவர்தான் கருணா’ன்னு அறிமுகப்படுத்தியதுதான் தாமதம், ‘காசு பணம், துட்டு, மணி... மணி’ன்னு பாடிக்கிட்டே என் தோளில் தட்டினார். அருமையா இருந்தது.

‘கேரக்டரில் உயிரைக் கொடுக்கிறீங்க. சூப்பர், சூப்பர்’னு சொன்னார். ஒரு வார்த்தை வரலை... கண்ணுல தண்ணீர் நிறையுது. வெளியே ஓடி வந்து நலன்கிட்டயும், சந்தோஷ் நாராயணன்கிட்டயும் ‘சத்தியமாப்பா... நம்ம பாட்டை ரஜினி சார் அப்படியே பாடினாருப்பா’னு சொன்னேன்.

எப்பவும் ஸ்பாட்டுக்கு அஞ்சு நிமிஷம் கூட லேட்டாக்காமல் முன்னாடி வந்து நிக்கிறார் ரஜினி. எனக்கு முதல் நாளில் அவர்கிட்ட நிற்கவே பயமா இருந்தது. ‘ஒண்ணும் பயப்
படாதீங்க...’னு அவர்தான் கலகலனு பேசி இயல்புக்குக் கொண்டு வந்தார். சந்தானம் என்னை சிரிப்பு மூட்டி விட்டுட்டு ‘கம்’முன்னு இருப்பார். நான்தான் தவிச்சுப் போவேன்!’’
‘‘சந்தானம் கூட நல்ல ஃப்ரண்ட் ஆகிட்டீங்க போல..?’’

‘‘அருமையான மனுஷன். அவர் கூட ஒரு பயணத்துல வந்தேன். ரொம்ப மனசு விட்டுப் பேசினார். அவர் தயாரிக்கிற படத்தில் கூட என்னை நடிக்கக் கூப்பிட்டார். அவருடைய அனுபவங்களைக் கொண்டு நிறைய டிப்ஸ் சொன்னார். என் கேரியரில் ரொம்ப அக்கறையா இருக்கார். ரொம்ப ரசிக்கிற காமெடி மட்டுமில்ல, அவர்கிட்ட கத்துக்க வேண்டிய அம்சங்களும் நிறைய இருக்கு. பிறர் நலனும் தேடுகிற பெரிய அம்சம்தான் அது!’’

‘‘உங்க பர்சனல்..?’’

‘‘என் வளர்ச்சியில் அக்கறைப்படுகிற அப்பாவும், அம்மாவும் கூடவே இருக்காங்க. அருமையான காதல் மனைவி தென்றல்... என் ஜன்னலில் பூத்த பூ. பொசுக்குனு இந்த உலகமே அழகாகி விட்டது. காதல்தான். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மா.ராசேந்திரனின் மகள். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பிறகு எங்கள் திருமணம் நடந்தது. இன்னும் பேரன்பு வற்றிப் போகாமல் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு!’’

-நா.கதிர்வேலன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்