ரிஷப லக்கனத்துக்கு சுக்கிரனும் செவ்வாயும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 16
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சுக்கிரன் - செவ்வாய் என்ற இந்த சேர்க்கையை பிருஹத் சம்ஹிதை, ஜாதக அலங்காரம் உள்ளிட்ட நூல்கள் ஒருவகையில் சிறப்பாகச் சொல்கின்றன. மறுபுறம் மண வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்தும் அமைப்பாகவும் கூறுகின்றன. இந்த இரு கிரகங்களும் சேரும் அமைப்பில் உள்ளவர்கள், எளிதில் காதல் வயப்படுபவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து யாரேனும் பாசமாகப் பேசினால், தான் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.

ரிஷப லக்னத்தில் இந்த சேர்க்கையில் பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு உடன் பிறந்தவர்களோடு கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் பிரச்னைகள் உருவாகியபடி இருக்கும். அதனால் அருகருகே உள்ள வீடுகளில் வசிப்பது நல்லது. இவர்கள் மேஷம் அல்லது விருச்சிக ராசிக்காரர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லது. இப்படிப்பட்ட கிரக அமைப்பு கொண்டவர்கள், சகோதர உறவுகளுக்கும், வாழ்க்கைத் துணைவருக்குமிடையே அல்லாடிக்கொண்டே இருப்பார்கள்.

முதலாவதாக, உங்கள் லக்னமாகிய ரிஷபத்திலேயே லக்னாதிபதியான சுக்கிரனோடு 12ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் அமர்ந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம். இப்படி அமைந்தால், தோற்றப் பொலிவே கம்பீரமாக இருக்கும். பெண்ணாக இருந்தாலும் ஆணின் மெல்லிய கம்பீரத்தோடு இருப்பார்கள். இவர்களுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகல விஷயத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.



இயல்பாகவே சொந்த வீடு, சொத்து என்று எதற்கும் கவலைப்பட வேண்டாம். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். இதில் ஆணாக இருப்பவர்கள் மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார்கள். மனைவி மிகுந்த புத்திக் கூர்மையோடு இருப்பார். இன்னொரு விஷயம் என்னவெனில், சகோதரனா, மனைவியா என்கிற குழப்பம் எப்போதும் இருக்கும். மனைவி நன்றாக அமைந்தால் சகோதரனின் பக்கம் ஏதேனும் சிறுசிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

மிதுன ராசியான லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரனும் செவ்வாயும் நின்றால், திருமணம் தாமதமாக முடியும். எப்போதும் மிகுந்த உணர்ச்சிவசப்படக்கூடிய மனைவி அமைவார். செலவாளியாகவும் இருப்பார். வாங்கிய பொருளையே வாங்குபவர்களாக இருப்பார். ஆனால், வாழ்க்கைத் துணைவரின் பெருமையை பேசத் தயங்க மாட்டார். ‘‘கொஞ்சம் கோபக்காரங்கதான். ஆனா, எல்லாருக்கும் விழுந்து விழுந்து செய்வா’’ என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். இவர்கள் திருமணத்திற்குப் பின்பு சகோதரர்களோடு சேர்ந்து கூட்டாக சொத்துக்களை வாங்காமல் இருப்பது நல்லது.

அதாவது கூட்டுப் பட்டா கூடாது. படிக்கும் வயதில் செவ்வாய் தசை வந்தால் படிப்பு தடைபடும். பாதை மாறி பயணிக்க வேண்டியது வரும். ‘பிஞ்சிலேயே பழுத்து விட்டான்’ என்பார்கள். கண்ணில் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். சிலருக்கு கண்ணின் இமை நரம்புகள் பாதித்து அடிக்கடி கண் சிமிட்டிக் கொண்டேயிருக்கும் நோய் இருக்கும். கடக ராசியில் செவ்வாய் நீசமாகிறது. செவ்வாய் ஏழுக்குரியவராகவும் வருவதால், செவித்திறன் பாதிக்கப்படும். அல்லது சற்றே கால் தாங்கி நடக்கும் வாழ்க்கைத்துணை அமையும். அப்படி வந்தால் நல்லது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

இவர்கள் கடலோரம் மற்றும் ஏரிக்கரையோரமாக இடம் வாங்காமல் இருப்பது நல்லது. எங்குமே நீர் செல்லும் பாதையருகே இடம் வாங்கக் கூடாது. செவ்வாயோடு சுக்கிரன் மூன்று டிகிரிக்குள் நெருக்கமாக இருந்தால், ரத்த உறைதல் குறைபாடு இருக்கும். அதேபோல ஹீமோக்ளோபின் குறைவாக இருக்கும். இந்த அமைப்பானது இளைய சகோதர, சகோதரி மற்றும் ஒன்றுவிட்ட சகோதர உறவுகளை சோபிக்க விடாது. உடன்பிறந்தவர்களை ஓங்க விடாது. உணவில் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. புதைகுழி, வெள்ள வடிகால் பகுதிகளில் இவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
 


சிம்மமானது செவ்வாய்க்கு உகந்த வீடாகும். இந்த அம்சமுள்ள ஆணாக இருப்பின் அவர்களை விட அந்தஸ்தில், தோற்றப் பொலிவில், செல்வத்தில் மிகுந்த வாழ்க்கைத்துணை அமையும். சர்வ சாதாரணமாக சொத்துக்கள் சேர்ந்தபடி இருக்கும். இந்த அமைப்பில் இருக்கும் ஆண்கள், மனைவியின் சகோதரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு தாயாரின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும். வாகன அமைப்பும் நன்றாகவே அமையும். வாகனப் பிரியராகவே இருப்பார்கள். ‘தாயா... தாரமா...’ என்கிற மனப் போராட்டமும் இருக்கும்.
கன்னி ராசியில் சுக்கிரன் வலுவிழக்கிறான். இதோடு செவ்வாயும் சேர்கிறான்.

இந்த அமைப்பில் உள்ளவரின் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு ஏதாவது இருக்கும். அல்லது பிள்ளைக்கு ஒன்றுக்கு பத்தாக கூடுதல் செலவு செய்ய நேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக ஏதேனும் செலவு இருந்து கொண்டே இருக்கும். பூர்வீகச் சொத்தையே ஒரு கௌரவத்திற்காக வைத்திருப்பார்கள். நகரத்திலேயே கிராம வீட்டில் வசிப்பதுபோன்ற அமைப்பை ஏற்படுத்துவார்கள். இவர்களுக்கு அடிவயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். சுக்கிரன் செவ்வாயை விட்டு எட்டு பாகை விலகியிருந்தால் மிகுந்த சங்கீத ஞானத்தோடு இருப்பார்கள். அதேசமயம் நட்டுவாங்க வித்வானாக இருப்பார்கள். பொதுவாகவே எந்த விஷயத்திற்கும் மிகையாகவே உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள்.

துலாம் ராசியில் சப்தமாதிபதி செவ்வாய் தனக்கு பன்னிரெண்டில் மறைவதுடன், லக்னத்திற்கும் ஆறாம் வீட்டில் மறைவதால், திருமண வாழ்க்கை பிரச்னைகளோடுதான் இருக்கும். தாமதமாக திருமணமாகும். இவர்கள் சம்பாதிப்பதை வைத்துக்கொண்டு இவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அனுபவிப்பார்கள். மேலும், ஜாதகத்திலுள்ள நவாம்சத்திலும், பாவகத்திலும் செவ்வாய் வலுவிழந்து காணப்பட்டால், எத்தனை திருமணம் முடித்தாலும் இல்லற வாழ்க்கை தொடராது. பெண்களாக இருப்பின் மாதவிடாய் பிரச்னை, கருக் குழாயிலேயே குழந்தை வளருதல் முதலான பிரச்னைகள் இருக்கும். தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

எப்போதும் வாழ்க்கைத்துணையைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். கலப்புத் திருமணம், காதல் தோல்வி, திடீர் திருமணம் என்றிருப்பவர்கள் தப்பிக்கலாம். விருச்சிகம் என்பது செவ்வாயின் ஆட்சி வீடாகும். அதில் சுக்கிரனோடு சேர்ந்து அமரும்போது மிக எளிதாக காதல் வயப்படுவார்கள். சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கையில் பத்து பாகை இடைவெளி இருந்தால் நன்கு பொருத்தம் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும். களத்திரகாரகனாகிய சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதியாக செவ்வாயோடு ஒரே வீட்டில் இருப்பதால் அதற்குத் தகுந்தாற்போல் கிரகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவிவழிச் சொத்துக்களுக்கு வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு மாமனார் செய்யும் வியாபாரத்தைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பும் வரும்.

தனுசு ராசி என்பது செவ்வாய்க்கு நல்ல வீடுதான். ஆனால் லக்னாதிபதியான சுக்கிரன் எட்டாம் வீட்டில் சென்று மறைவதால், நிச்சயமான திருமணம் நின்று போய் மீண்டும் வேறு வரனோடு திருமணம் நடந்தேறும். சகோதரருக்கு சரியான வேலை கிடைக்காமல் அல்லாடுவார். சரியான வருமானம் இல்லாமல் நீங்கள்தான் ஏதேனும் பார்த்து உதவ வேண்டியிருக்கும். அடிக்கடி ஏதேனும் செலவுகள் வந்தபடியே இருக்கும். செவ்வாய் தசை வரும்போது சொத்து இழப்பு, உங்கள் சொத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுதல் என்றெல்லாம் ஏற்படும். அடிக்கடி வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். முறை தவறிய தொடர்புகள் இருந்தால், அவை பெரிய பிரச்னையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அடுத்ததாக லக்னாதிபதியான சுக்கிரனோடு சேர்ந்த செவ்வாய் இங்கு உச்சமாகிறார். மனைவியால் யோகமுண்டு. மனைவி ஒரு மந்திரி மாதிரி இருப்பார். தந்தையார் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே என்று வருத்தமுற்றபடியே இருப்பார். திருமணத்திற்குப்பின் வாழ்க்கை மிக நன்றாகச் செல்லும். கும்பத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்தால் காம உணர்வுகள் மேலோங்கியிருக்கும். ஒரு கேந்திரத்திற்குரிய கிரகம் இன்னொரு கேந்திரத்தில் உட்காருவதால் கணவன் - மனைவிக்குள் எப்போதும் ஈகோ பிரச்னை இருந்தபடியே இருக்கும். கேந்திராதிபதி தோஷம் ஏற்படும். எனவே, கணவனோ மனைவியோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை பெரும் பிரச்னையாக்கி எதிர்க்காமல் இன்னொருவர் ஏற்றுக்கொண்டு செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வியாபாரத்தில் கவரிங் நகைகள், கல்யாண மண்டபம் போன்றவை நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

மீனத்தில் சுக்கிரன் உச்சமடைகிறார். ஆனாலும், செவ்வாயின் இணைவிருப்பதால் வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து பெண் அமையும். ஆண்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு சைனஸ் தொந்தரவால் அவஸ்தை இருக்கும். ஆனால், மண வாழ்க்கை மிகுந்த சிறப்புற்றதாக அமையும். மேஷம் என்பது ரிஷப லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடமாகும். இங்கு ஏழுக்கும் பன்னிரெண்டுக்கும் உரியவர்கள் சேர்ந்திருப்பதால் அன்னியத்தில் வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலத்திலேயே இருக்கும்படியான வாழ்க்கைச் சூழ்நிலையும் அமையும். ஏனெனில், அங்கிருப்போர்தான் வாழ்க்கைத் துணைவராகவே அமையவும் வாய்ப்பிருக்கிறது. சுகபோகமான வாழ்க்கையை வாழ்வார்கள். மனைவி கேட்பதை உடனே வாங்கிக் கொடுப்பார்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு பழகுவது நல்லது. மனைவிக்கு தெரியாத நட்புகள் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு கிரகங்களும் பொதுவாகவே வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் அமைப்பையே குறிக்கிறது. அதைச் சுற்றித்தான் பலன்களும் நிகழ்ந்தேறும். அதில் ஏதாவது ஏற்படும் தீய பலன்களைக் குறைத்துக் கொள்வதற்கு, தெய்வானை முருகனை மணம் புரிய வேண்டி தவம் செய்த தலத்தை தரிசிக்கலாம். அப்படிப்பட்ட தலமே கந்தன்குடி ஆகும். இங்கு தெய்வானைக்கு தனிச் சந்நதி உண்டு. நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம் முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க அருள்கிறாள் தெய்வானை எனும் தேவசேனா. சிறிய திருச்சந்நதியாக இருந்தாலும் நின்று பார்க்கவைக்கும் ஒரு தெய்வீக வசீகரம் பொலியும் படியாக விளங்குகிறது. இவளை தரிசித்தாலே போதும், திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம்.
 
அர்த்த மண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். இது என்னுடைய இடம் என்று மிகுந்த உரிமையோடு கந்தன் குடி கொண்டிருக்கிறான். அழகன் முருகன் பேரழகுச் சிகரமேறியிருக்கும் அற்புதத் தலமெனில் மிகையில்லை. இந்த கந்தவேளை அருணகிரிநாதர் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார் என வரலாறு கூறுகிறது. இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தைக் கடந்தால் கந்தன்குடியைக் காணலாம்.

(கிரகங்கள் சுழலும்...)