நியூஸ் வே



சென்னை அடைமழை சமந்தாவை ரொம்பவே எமோஷனலாக்கிவிட்டது. தெலுங்குப்பட ஷூட்டிங்கில் இருந்த அவர், சென்னையில் உள்ள பெற்றோரை தொடர்பு கொள்ள முடியாமல் 3 நாட்களாகத் தவித்துவிட்டார். இங்கே களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ முடியவில்லையே எனவும் ஃபீலிங்!

ராணி முகர்ஜி - ஆதித்ய சோப்ரா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மகிழ்ச்சியில் திளைக்கிறார் முகர்ஜி. குழந்தைக்கு ஆதிரா எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். ராணி வீட்டில் இளவரசி!

இதுவரை இந்தியாவில் 3 கோடியே 21 லட்சம் பேர் ‘பாகுபலி’ படத்தைப் பார்த்திருக்கிறார்களாம். மொத்த மக்கள் தொகையில் 2% பேர் பார்த்த படம் என்ற சாதனையை இது படைத்திருக்கிறது.

‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா, விஷால் - திவ்யாவை வைத்து இயக்கி வரும் ‘மருது’ படத்தின் ஷூட் ராஜபாளையத்தில் பரபரக்கிறது. சென்னை அடைமழை காரணமாக, ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டார் விஷால்.

பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களின்போது தரப்படும் பரிசுப்பொருட்களில் 4500 ரூபாய் மதிப்புக்கு மிகாத பொருட்களை மட்டும் அவர்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் மதிப்புள்ளவற்றை அரசு கஜானாவில் செலுத்த வேண்டும்; அல்லது அதன் மதிப்புக்கு பணம் செலுத்தி விட்டு வைத்துக்கொள்ளலாம். பிஸியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடிக்கு இதுவரை 169 பரிசுகள் தரப்பட்டன. இதில் காஸ்ட்லியானது, 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை செட். எல்லாவற்றையும் கஜானாவுக்குக் கொடுத்துவிட்ட மோடி, ஒரு தரை விரிப்பு, போட்டோ பிரேம்கள் இரண்டு, ஒரு ஓவியம், ஒரு செஸ் போர்டு, பாரம்பரிய டிரஸ் ஒன்று, வில் - அம்பு ஆகியவற்றை மட்டும் தன்னிடம் வைத்திருக்கிறார்.



ராஜ்ய சபா எம்.பி. ஆன இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தனது முதல் கேள்வியைக் கேட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வாக இருக்கும் நாட்களில் என்ன செய்வார் தெரியுமா? குடும்பத்தில் எல்லோரையும்  உட்கார வைத்து சமைத்துப் போடுவாராம்!

‘அஞ்சல’, ‘உள்குத்து’ படங்களில் கிராமத்து மயிலாக நடித்து வரும் நந்திதா ஸ்வேதாவுக்கு, ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தில் செம மாடர்ன் கேரக்டர். “மாடர்ன் காஸ்ட்யூம்ஸ்தான் பாஸ்... நோ க்ளாமர்’’ என்கிறார் செல்ஃபி எடுத்தபடி!

சோனாவை நமக்கு கவர்ச்சி நடிகையாகவே தெரியும். 1000 மூட்டை அரிசியை சேகரித்துக் கொண்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றை ஆளாய் சைதை பகுதியில் சுற்றி விநியோகம் செய்கிறார் அவர்.

ஈசிஆர் ரோட்டில் நயன்தாரா ‘அவருக்கு’ வீடு வாங்கிக் கொடுத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இப்போது அங்கேயே பெற்றோருடன் வந்து தங்கிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டார் நயன். படங்கள் தொடர்ந்து கமிட் ஆகி வருவதால் இந்த ஏற்பாடு.

‘இது நம்ம ஆளு’ போஸ்டர்களில் எல்லாம் நயன்தாரா உருவத்தை சின்னதாக்கி, ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் தருகிறார் சிம்பு. ஒரு பாட்டுக்கு ஆட நயன் வரவில்லை என்பதால் சிம்புவுக்கு கோபம். அதை கனவுப்பாடலாக்கி வேறு ஒரு நடிகையை வைத்து ஷூட் செய்கிறார்கள்.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சந்தானத்திற்கு டஃப் கொடுத்தார் சூரி. இப்போது அவருக்கு அருகில் வந்து நிற்கிறார் ரோபோ சங்கர். சூரி சம்பளத்தில் கொஞ்சம் இறங்கி வர மறுத்தாலும், உடனே தயாரிப்பாளார்கள் ரோபோவுக்கு போன் போட்டு விடுகிறார்கள்.



தெலங்கானா தனி மாநிலம் உருவானதற்கு துர்க்கைக்கு நன்றி சொல்வதற்காக மகா சண்டி யாகம் செய்யப் போகிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த யாகத்தில் பங்கேற்க பிரதமர், ஜனாதிபதி என பலரை அழைத்திருக்கிறார் அவர். 10 டன் விறகு, 50 குவிண்டால் நெய் எரித்து, 4 ஆயிரம் வேத விற்பன்னர்கள் நடத்த இருக்கும் இந்த யாகத்துக்கு செலவு, 3 கோடி ரூபாய்.

டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா சவேரா ஓட்டல் காபி ஹவுசில் உட்கார்ந்துதான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார். நண்பர்கள், உதவி இயக்குநர்கள் அங்குதான் அவரை சந்திக்கிறார்கள்.

இந்தியில் தான் இசையமைத்துள்ள படம் ‘தமாஷா’ ஹிட் அடித்திருப்பதால், செம ஹேப்பியில் இருக்கிறார் ரஹ்மான். பொங்கல் ஸ்பெஷலாக அவர் சென்னை, கோவையில் ஒரு ‘தமிழ் இசைத் திருவிழா’ நடத்தவிருக்கிறார்.

டைரக்டர் பாலாவும், சூர்யாவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். அடுத்து பாலா செய்யும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யா நடிக்கப் போகிறார். அதில் விக்ரமும் ஒரு கேமியோ ரோல் செய்யப் போகிறார்.

ப்ரியாமணி டைரக்‌ஷனில் இறங்கிவிட்டார். இதற்காக தன் குரு பாரதிராஜாவிடம் ஸ்கிரிப்ட்டைக் காண்பித்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார்.

டி.ஆர் நடிக்கும் படத்தை விஜய் மில்டன் எடுக்கப்போவதாக செய்தி கசிந்திருக்கிறது. அப்படியொரு எண்ணமோ, பேச்சு வார்த்தையோ நடக்கவே இல்லையே என ஆச்சரியப்படுகிறார் விஜய் மில்டன்.

‘கபாலி’க்காக மலேசியா சென்ற ராதிகா ஆப்தே, முதல் நாள் ஷூட்டிங்கின்போதே, ரஜினியின் வேகத்தைப் பார்த்து பிரமித்திருக்கிறார். ஷெட்யூல் முடித்து ரஜினி சென்னை திரும்பும் முன் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

‘சிங்கம் 3’ ஷூட்டிங்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துவிட்டார் சூர்யா. வெள்ள நிவாரண வேலைகளில் சூர்யாவும், கார்த்தியும் படு தீவிரமாக வேலை செய்வதே காரணம்.

கொஞ்ச காலமாகப் புதுப் படங்களில் ஒப்பந்தமாவதை நிறுத்தியிருக்கிறார் ஆர்யா. இனிமேல் நட்பு பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட்டை மட்டும் நம்ப வெண்டும் என முடிவெடுத்திருக்கிறார்.

‘தெறிக்க விடலாமா’ என அஜித் கேட்டதற்கு ‘தெறி’ என்று பதில் வைப்பதற்காகவே தலைப்பு வைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதற்காகவே இணைய தளங்களில் வார்த்தை ரகளை நடக்கிறது.