TNPSC GroupIV பொதுத் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி?



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் உள்ளிட்ட 4,963 பணியிடங்களுக்கான   Group  IV   தேர்வுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ள இத்தேர்வை யாரெல்லாம் எழுதலாம்...? எந்த அடிப்படையில் தேர்வு நடக்கும்? தேர்வுக்கு தயாராவது எப்படி? தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்ற எஸ்.வடிவேல்.
Group  IV  தேர்வை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்களும் எழுதலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி என்ற கல்வித் தகுதியை மட்டும் கொண்டவர்களுக்கு வயது வரம்பு உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பி.சி/ எம்.பி.சி. பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32. பிற பிரிவினருக்கு 30. குறைந்தபட்ச வயது, 1.7.2014 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு தரத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.   http://tnpsc.gov.in  என்ற தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இத்தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொது அறிவு சார்ந்த கேள்விகள் 75. திறனறிதல் (மென்டல் எபிலிட்டி, ரீசனிங் அண்ட் அரித்மேட்டிக்) தொடர்பான கேள்விகள் 25. இந்த 100 கேள்விகளுக்கும் 100 மதிப்பெண்கள். அடுத்து ஆங்கிலம் அல்லது பொதுத்தமிழ். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஆக, மொத்தம் 200 கேள்விகள். 300 மதிப்பெண்கள்.

பொதுத்தமிழைப் பொறுத்தவரை பாடத்திட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 தலைப்புகள்.
1) பகுதி - அ: இலக்கண வகைகள்     =>     40 கேள்விகள் வரை கேட்கப்படும். (20 தலைப்புகள்)
2) பகுதி-ஆ: இலக்கியம்                 =>      30 கேள்விகள் வரை கேட்கப்படும். (10 பகுதிகள்)
3) பகுதி-இ: தமிழ் அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய  தொண்டுகள்    =>     30 கேள்விகள் வரை கேட்கப்படும். (20 தலைப்புகள்)
                         மொத்தம்    =       100

பெரும்பாலான மாணவர்கள் பொதுத்தமிழில் பழைய பாடத்திட்டத்தை மட்டுமே படிக்கிறார்கள். ஆனால் பழைய பாடத்திட்டத்தில் 40 கேள்விகளுக்கு மேல் கேட்கப்படுவதில்லை. புதிய பாடத்திட்டத்தின் படி, தற்போது உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி தமிழ் பாடப்புத்தகங்களிலிருந்து சுமார் 85 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. மீதம் 15 கேள்விகள் வெளியில் இருந்து கேட்கப்படுகின்றன.

பகுதி அ, இலக்கண வகைகளைப் பொறுத்தவரை 20 தலைப்புகள் முழுவதும் பழைய பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய GroupIV தேர்வுகளின் வினாத்தாள்களை நன்கு பயிற்சி செய்வதன் மூலம் இம்மதிப்பெண்களை முழுமையாகப் பெற முடியும்.  
உதாரணம்  பொருளறிந்து பொருத்துக - 2 மதிப்பெண்கள்  நூலும்- நூலாசிரியரும் - 2 மதிப்பெண்கள்  அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்/ சான்றோர்- 4 மதிப்பெண்கள்
பிரித்து எழுதுக, எதிர்ச்சொல்- 4 மதிப்பெண்கள் வேர்ச்சொல், எச்சம், முற்றாக மாற்றுதல்- 4  மதிப்பெண்கள்  பொருந்தாச்சொல், சொற்கள் வரிசைப்படுத்துதல், இலக்கணக் குறிப்பு- 5 மதிப்பெண்கள் தொடை (எதுகை, மோனை, இயைபு,  முரண்)- 2 மதிப்பெண்கள் வாக்கிய வகை, உவமையால் விளக்கப்படும்  பொருள்- 2 மதிப்பெண்கள்
மரபு பிழை, வழுவுச்சொல்- 3 மதிப்பெண்கள்  பிறமொழிச் சொல்- 4 மதிப்பெண்கள்.  பகுதி-ஆ, இலக்கியத்தில் திருக்குறளிலிருந்தே அதிக கேள்விகள் கேட்கப்படும்;
ஏனென்றால் திருக்குறளின் 19 அதிகாரங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

உதாரணம்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. - இதில் பயின்று வரும் அணி? (இல்பொருள் உவமையணி) ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே’ இதில் ‘என்பிலதனை’ என்பதைப் பிரித்து எழுதுக. (என்பு+இலதனை) ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ இதில் அகழ்வாரை - இலக்கணக் குறிப்பு காண்க: - (வினையாலணையும் பெயர்)

பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரைப் பற்றி 5 கேள்விகள் கேட்கப்படும்.

உதாரணம்

‘வாக்கீசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்? (திருநாவுக்கரசர்) ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்? (மாணிக்கவாசகர்)
சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறும் காப்பியம் போன்றவற்றில் 5 கேள்விகள் கேட்கப்படும்.

உதாரணம்

புலவராற்றுப்படை என்று அழைக்கப்படுவது எது?  (திருமுருகாற்றுப்படை) ‘நல்ல’ என்ற அடைமொழியால் குறிக்கும் நூல் எது?  (குறுந்தொகை)
‘சீர்திருத்த காப்பியம்’ எது? (மணிமேகலை) புரட்சிக் காப்பியம் என்பது யாது?  (சிலப்பதிகாரம்)
சைவத் திருமுறையில் இடம்பெற்ற பத்துப்பாட்டு நூல் எது? (திருமுருகாற்றுப்படை)

பகுதி - இ, ‘தமிழ் அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்’ பகுதியில் மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றில் இருந்து  - 5 கேள்விகள் (பாரதி, பாரதிதாசன், சுரதா, வாணிதாசன், ஆலந்தூர் மோகனரங்கன்...) தொன்மைத் தமிழகம் கடல் வணிகம் பற்றி-  3 கேள்விகள் அறிவியல் சிந்தனை- 3 கேள்விகள் சித்த மருத்துவம்- 3 கேள்விகள்
ஜி.யு.போப், வீரமாமுனிவர்- 3 கேள்விகள் கேட்கப்படும்.

இவற்றை சுலபமாகக் கையாள, http://tnpsc.gov.in இணையதளத்தில் உள்ள விடையுடன் கூடிய 10 தமிழ் வினாத்தாள்களை படிக்க வேண்டும்.  இவற்றைத் தவிர GroupIV  தேர்வில் வெற்றி பெற...  6-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் தமிழ்ப் பாட நூல்கள், 11-ம், 12-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்கள், மு.வ., தமிழண்ணல், பாக்கிய மேரி ஆகியோர் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாறு நூல்கள், முனைவர். தே.வி.ரா. எழுதிய தமிழ் இலக்கண இலக்கிய வரலாறு ஆகிய நூல்களைப் படிக்கலாம்.

தொகுப்பு : வெ. நீலகண்டன்
படம் : ஏ.டி. தமிழ்வாணன்