சீனியாரிட்டிப்படி இனி வேலை கிடைக்காதா?



“கால் காசுன்னாலும் அது கவர்மென்ட் காசா இருந்தா தனி கௌரவம்தான்’’ என அரசு வேலையைச் சிலாகித்துப் பேசுவார்கள் கிராமத்துப் பெரியவர்கள். அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அப்படி. அதற்காகவே கஷ்டப்பட்டு படித்து,  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டிவிட்டது. ஆனால், இவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது அந்த தீர்ப்பு.

“வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10(ஏ) செல்லாது’’ - இப்படியொரு அதிரடி தீர்ப்பை கடந்த மாதம் ஒரு வழக்கில் வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் கலக்கம் அடைந்துள்ளனர். இனி, அரசு வேலை கிடைக்காதோ என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, ஆசிரியர் பணிக்கு சீனியர்களால் போகமுடியாத நிலை இருந்து வருகிறது. இப்போது, மற்ற துறையினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

“சீனியாரிட்டிப்படி பணி நியமனம் இல்லைன்னா தமிழ்நாட்டுல குறைஞ்சது 10 லட்சம் பேராவது பாதிக்கப்படுவாங்க...’’ என வருத்தம் பொங்க பேசுகிறார் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட். “தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் பணி நியமனத்தில் வெவ்வேறு அணுகுமுறையை கையாள்கின்றன. ஒரு அரசு சீனியாரிட்டிப்படி ஆட்களை எடுக்கும். இன்னொரு அரசு, மெரிட்தான் முக்கியம் என்று சொல்லும். இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். ஆசிரியர் தகுதித் தேர்வு வருவதற்கு முன்பு சீனியாரிட்டிப்படி எடுத்தார்கள்.  இப்போது சீனியாரிட்டி பார்ப்பதில்லை. அதற்கு வெயிட்டேஜ் மார்க்கும் தருவதில்லை. 

சரி, ‘டெட்’ தேர்வில் பாஸாகி வெயிட்டிங்கில் இருப்பவர்களுக்கு வெயிட்டேஜ் கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால், அதற்குள் இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளது. இதனால், 3 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என வேதனையோடு தெரிவித்தவர், வேறு துறையில் பணிக்காக காத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.

“இப்போது மற்ற துறைகளில் பலரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அரசு வேலைகளில் 70 சதவீத வேலைவாய்ப்புகள் சீனியாரிட்டி முறையில்தான் நிரப்பப்படுகின்றன. பஸ் டிரைவர், கண்டக்டர், மருந்தாளுனர், மின்சார வாரியப் பணி, சத்துணவு அமைப்பாளர் என நிறைய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்பப்படுகின்றன.  இப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள். இப்படி பதிவு மூப்பில் காத்திருக்கின்ற பலரும் அடித்தட்டு மக்கள்தான். அதனால், அரசு இந்தப் பிரச்னைக்கு உடனே ஒரு தீர்வு காண வேண்டும். தேர்வு எழுதியவர்களுக்கு 50 சதவீதமும் சீனியாரிட்டி அடிப்படையில 50 சதவீதமும் என வேலைவாய்ப்பை கொண்டு வந்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருப்பவர்கள் கனவை கலைத்துவிடக்கூடாது’’ என்கிறார், வேதனையோடு!

- பேராச்சி கண்ணன்