மகள் மனைவி தாய் இவ்வுலகத்தின் சக்தி ஒரு பெண்!



டாக்டர் ஞானசவுந்தரி

மகத்தான சேவை என்பதைத் தாண்டி, மாபெரும் பிசினஸாக மாறிக் கொண்டிருக்கிறது மருத்துவத் துறை. மருத்துவர்களா? மரத்தவர்களா? இப்படி நினைக்க  வைக்கிறார்கள் பலரும். அனுபவத்தை சம்பாதிப்பதற்குப் பதில், அடுத்த சந்ததிக்கும் சேர்த்து சம்பாதிக்க நினைக்கிற மருத்துவர்களையே அதிகம் பார்க்கிறோம்.  விதிவிலக்கானவர்களில் வியக்க வைக்கிறார்  பிரபல மகப்பேறு மருத்துவர் ஞானசவுந்தரி. அள்ள அள்ளக் குறையாத அவரது அனுபவங்கள், மருத்துவத்தை மட்டுமின்றி, மனிதத்தை நேசிப்பவர்களும் அவசியம்  அறிந்து கொள்ள வேண்டியவை...

இளைய சமுதாயத்தினரிடையே நிலவி வருகின்ற புகையிலைப் பழக்கமும் போதை மருந்துகள் உட்கொள்கிற பழக்கமும் மது அருந்துகிற பழக்கமும் குழந்தையின்மைக்கு முக்கியமான காரணங்கள். ஆண்களைப்  பொறுத்த வரையில் விந்துவின் தரம் குறைந்து வருகிறது...

குழந்தையின்மைக்கு ஆண்களிடம் 40 சதவிகித குறைபாடு உள்ளது. பெண்களிடம் 40 சதவிகித குறைபாடு உள்ளது. இருவரிடமும் 10 சதவிகித குறைபாடுகள்  சேர்ந்தே உள்ளது. 10 சதவிகிதத்தினரில் இருபாலாரிடமும் எவ்வித குறைபாடும் இல்லாதிருந்தபோதும் கரு உருவாகவில்லை என்றும் இப்போது கண்டறியப்
பட்டுள்ளது...

‘நான் வீட்டிலிருந்து புறப்படுகின்ற போதுகூட வாசல்வரை வந்து என்னை வழியனுப்பினாள் என் மனைவி. இப்போது ‘ஆபத்து... அறுவை சிகிச்சை’ என்றெல்லாம்  கூறி பணம் புரட்டும் தந்திரமா?’ என்று காட்டுக்கூச்சல் இட்டார் அந்தக் கணவர். ஒருபுறம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனைவி, மறுபுறம் அதனை  ஒப்புக்கொள்ள மறுக்கும் கணவர் இடையே செய்வது அறியாது, தயங்கி நின்றேன்...

 அன்றைய மகப்பேறு மருத்துவத் துறைக்கும் இன்றைய மகப்பேறு மருத்துவத்துறைக்கும் என்ன வித்தியாசம்?

‘‘அன்றைய மகப்பேறு மருத்துவத்துறைக்கு கிடைக்காத பல வசதிகள் இன்றைக்கு கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, அன்றைய மகப்பேறு மருத்துவத்தில் ‘ஒரு  பெண் கருவுற்றிருக்கிறாளா? இல்லையா?’ என்பதை அறிய அதிகாலையில்  கர்ப்பிணியின் சிறுநீரை எடுத்து கிண்டியிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்புவோம்.  அங்கு அதை ஆண்தவளையின் உடலில் செலுத்தினால், 6 மணி நேரத்துக்குள்ளாக, அது விந்தணுக்களை வெளியேற்றி விடும். இவ்வாறு இயக்கு நீரின்  செயல்பாட்டு மாற்றத்தை வைத்து கர்ப்பத்தை கணிப்பதற்கு குறைந்தது 24 மணி நேரமாவது ஆகும். இப்போதோ Diagnostic kit மூலமாக  மாதவிலக்கு எதிர்பார்த்த நாளன்று வரவில்லை என்றால் துளி சிறுநீர் கொண்டு, ஒரே நிமிடத்தில் அப்பெண்ணே அவளது கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள  இயலும்.

ரத்தப் பரிசோதனையின்போது கர்ப்பத்தின் இயக்கு நீர்கள் உள்ளதை மாதவிலக்கு நிற்பதற்கு முன்னதாகவே கூட 2 மணிநேர சோதனையில் அறிந்து  கொள்ளலாம். இச்சோதனை கர்ப்பம் வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும் தொடர் கருச்சிதைவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் முன்னெச்சரிக்கையாக  முன்கூட்டியே கருவை வளர்ப்பதற்குரிய முயற்சியை எடுக்க முடிகிறது.

அன்று, முதல் 3 மாத காலத்தில், தரித்த கரு தொடர்ந்து வளருகின்றதா என்று உட்பரீட்சை செய்து அறிய ஒரு வாரம் அவகாச மாவது வேண்டியிருக்கும்.  இன்றைய மகப்பேறு மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக அமைந்துள்ள ஸ்கேன் மூலம் அன்றாட வளர்ச்சியையும் கண்காணிக்க முடிகிறது.  குழந்தை ஒன்றா, இரண்டா, புறக்கர்ப்பமா, கருப்பைக்குள் கர்ப்பமா, வளருகின்ற கர்ப்பமா அல்லது வளராமல் தப்பிய கருச்சிதைவா என்பதை எல்லாம்  மிகத்துல்லியமாக ஆரம்ப காலத்திலேயே அறிய முடிகிறது. அன்றைய மகப்பேறு மருத்துவத்தில் இவ்வாறு எளிதில் கணிக்க முடிந்ததில்லை...’’

குழந்தையின்மைப் பிரச்னை என்பது இன்று இந்த அளவுக்கு பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்?

‘‘குழந்தையின்மை என்ற பிரச்னை என்றென்றும் உலகெங்கும் காணப்பட்ட, காணப்படுகின்ற பிரச்னைதான். பெண்கள் பூப்பெய்திய காலத்திலே உணவு ஊட்டத்தில் குடும்பத்தார் கவனத்தை செலுத்தி  வந்தனர். அது ‘உருக்கி நோய்’ ஏற்படுத்துகின்ற கருப்பைக்குழாய் போன்ற அடைப்பிலிருந்து பெண் குழந்தைகளை மீட்டு
வந்தது. கூட்டுக்குடும்பத்தில் மாதவிலக்கில் ஏற்படுகின்ற மாற்றங்கள், கோளாறுகள் ஆகியவை எளிதில் பெரியவர்களால் உணரப்பட்டு சரி
செய்யப்பட்டன. இன்றைய சமுதாயத்திலோ, இளம்பெண்கள் தங்கள் உடல் கொழுமையால் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணியே உணவைச் சுருக்குவதுடன்  சத்துணவையும் குறைத்து விடுகின்றனர். மாதவிலக்கு ஆண்டுக்கு ஓரிரு முறையே வந்தாலும் அதனை வெளியிலே சொல்வதற்கு வெட்கப்பட்டு  மறைத்துவிட்டு, பிறகு குழந்தை
யின்மையால் கலங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே நிலவி வருகின்ற புகையிலைப் பழக்கமும் போதை மருந்துகள் உட்கொள்கிற பழக்கமும் மது அருந்துகிற
பழக்கமும் குழந்தையின்மைக்கு முக்கியமான காரணங்கள். ஆண்களைப் பொறுத்த வரையில்  விந்துவின் தரம் குறைந்து  வருகிறது. உடற்பயிற்சியின்மை, ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பதால் ஏற்படுகிற வெப்பச்சூடு, வேஷ்டி போன்ற உடைகளைத் தவிர்த்து  இறுக்கமான உடைகளை அணிவதும் இதற்குக் காரணம்.
வேதி மருந்துகளைப் பயன்படுத்தி விளையும் காய்கறிகளை  உட்கொள்வதால் விந்தணுக்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் குறைந்து குழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம்
எடுக்கிறது...’’

50 ஆண்டுகளுக்கு முன் குழந்தையின்மை பிரச்னை இந்த அளவுக்கு இருந்ததா? அதற்கான சிகிச்சை முறைகள் எப்படி இருந்தன?

‘‘50 ஆண்டுகளுக்கு முன் குழந்தையின்மை பிரச்னைக்கான சோதனையின்போது, ஆண்கள் எந்தவித சோதனைக்கும் உட்பட விரும்பியதில்லை. பெண்கள்  மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொண்டதால், குழந்தையின்மை  பிரச்னைக்கு எதிர்பார்த்த அளவு தீர்வு கிடைக்கவில்லை. கருப்பைக் குழாயடைப்பு உள்ளதா என்று கண்டறிய கருப்பை கருப்பைக்குழாய் ஊடுகதிர் படம்  எடுத்துக்கொண்டனர் பெண்கள். பல நீர்மக்கோள கருவணுகத்துக்கு (polycystic ovary disease), ஆப்பளவு வெட்டி எடுத்தல் முறை  (wedge resection of ovary) கையாளப்பட்டது. கருப்பைக் குழாயடைப்புக்கு நவீன நுண்ணறுவை சிகிச்சை முறை, லேப்ராஸ்கோப்பிக்  முறை போன்றவை வராத காரணத்தாலும் இயக்கு நீர்களின் அளவை கணிக்கும் முறைகள் துல்லியமாக தெரியாத காரணத்தாலும் பலன் அதிகமாக இருந்ததில்லை. கருப்பை பின் சாய்ந்த நிலையில் இருந்தபோது அதுவும் ஒரு காரணம் என்று கருதப்பட்டு முன் மடங்கச்  செய்யும் அறுவை செய்யப்பட்டது. அதிலும் பலன் பெற்றவர்கள் அநேகமாக இல்லை...’’

குழந்தையின்மைக்கான காரணங்கள் ஆண்கள் மற்றும் பெண்களில் யாரிடம் அதிகம் இருக்கிறது? ‘‘முந்தைய காலத்தில் ஆண்கள் பெரும்பாலும் பரிசோதனைக்கு வருவதில்லை என்பதால் இருவரில் எவரிடம் குறை இருந்தது, காரணம் என்ன என்பதை அறிய  முடிந்ததில்லை. அதனால் பெண்களிடமே குறை அதிகமாக உள்ளதாகக் கருதப்பட்டது. இப்போது கணவன், மனைவி இருவருமே சேர்ந்து வருவதால்  ‘ஆண்களிடம் 40 சதவிகித குறைபாடு உள்ளது. பெண்களிடம் 40 சதவிகித குறைபாடு உள்ளது. இருவரிடமும் 10 சதவிகித குறைபாடுகள் சேர்ந்தே உள்ளது. 10  சதவிகிதத்தினரில் இருபாலாரிடமும் எவ்வித குறைபாடும் இல்லாதிருந்தபோதும் கரு உருவாகவில்லை’
என்றும்

 குழந்தையின்மைக்கான இன்றைய நவீன சிகிச்சைகளில் எவை எல்லாம் அவசியமானவை? எவை அனாவசியமானவை?

‘‘குழந்தையின்மைக்காக ஆண்களுக்காக செய்யப்படுகின்ற நவீன அறுவை சிகிச்சையாகிய சிரைநாளப்புடைப்பு அகற்று அறுவை சிகிச்சை  (varicocelectomy), விந்து நாள அடைப்புக்குச் செய்யப்படுகிற தூம்பறுவை சிகிச்சை (recanalization), கணவனது விந்துவின்  தரத்தைக் கூட்டுகின்ற மருத்துவ சிகிச்சை, கணவனது விந்துவை பல முறை சேகரித்து தணுப்பில் உறையச் செய்து பயன்படுத்தப்படுகின்ற விந்து தானம், கணவனது விந்துவை கருப்பைக்குள் செலுத்துதல் ஆகியவை  எல்லாம் வரவேற்கத்தக்கவை. வீரியமற்றவர்களுக்கும் இனப்பெருக்கம் செய்ய அவர்களிடம் காணப்படுகின்ற விந்தணுக்களை மனைவியின் கருப்பைக்குள் செலுத்துதலும் எண்ணிக்கையில் ஒரு சில விந்தணுக்களே இருக்கின்றபோது, இன்றைய நவீன தொழில்நுட்ப  முறையாகிய இக்ஸி (ICSI) எனப்படும் முறையில் புறவிடக் கருத்தரித்தலும் வரவேற்கத்தக்கதே.

‘குடும்பப் பாரம்பரியத்தில் ஒரு பகுதியாவது குழந்தைப் பிறக்கட்டும்’ என்று ஒப்புதலோடு,  விந்துவைத் தானமாக பெற்று தன் மனைவியை மலடி என்ற பட்டத்திலிருந்து மீட்பது ஒருமுறை என்றாலும், அது ஒரே மாதிரியான மனநிலையை  பிற்காலத்தில் உருவாக்கும் என்று சொல்வதற்கில்லை. கணவன், மனைவி உறவு பாதிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

குழந்தையின்மைக்காக பெண்களுக்கு செய்யப்படுகின்ற சிகிச்சைகளுள் பல நீர்மக் கோளக கருவணுவகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவணு விடுவிப்பைத் தூண்டுவிக்கின்ற மருந்து வகைகள் இயக்கு நீர்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை நல்ல பலனையும் தருகின்றன. இது வரவேற்கத்தக்கதே. கருப்பைக்குழாய் அடைப்பு உள்ளவர்களுக்கும், அவ்வடைப்பு கணவன், மனைவி  உறவை துண்டித்து விடாமலிருக்க,  அவ்வடைப்பு உள்ள இடத்தை துண்டித்து தூம்பறுவை செய்கின்ற அறுவை சிகிச்சை வரவேற்கத்தக்கதே. துளை அறுவை (laparoscopy) மூலம்  இவற்றை செய்கின்ற போது பலன் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால், வாடகைத்தாயை நாடிச் செல்லுகின்றபோது உயிரியல் தாய்க்கும் வாடகைத்தாய்க்கும்  பிற்காலத்தில் உறவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. தத்து எடுக்கிறபோது, ‘உறவினர் குழந்தைகளின் தத்தா? தெரியாதவர்களின் தத்தா?’ என்ற  உட்பகை மற்றும் அக்குழந்தை வளர்ந்த பின் ஏற்படுகின்ற  பூசல்களும் உள்ளன...’’

மருத்துவத்தை சேவையாக நினைத்து செய்தது போய், இன்றோ அது மிகப்பெரிய பிசினஸ். அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

‘‘‘மருத்துவம் பிசினஸாக மாறி விட்டது, மருத்துவர்கள் மாறிவிட்டார்கள்’ என்று மக்கள் சொல்வதுபோல, ‘மக்களும் மாறிவிட்டார்கள்’ என்று மருத்துவர்களும்  எண்ணத் தொடங்கியுள்ளனர். அன்று மருத்துவருடைய அனுபவத்திலும் திறமையிலும் மக்கள் முழுநம்பிக்கை வைத்திருந்தனர். இன்றோ உட்பரீட்சை செய்து  கர்ப்பம், புறக்கர்ப்பம், கர்ப்பத்தோடு இணைந்து காணப்படும் கட்டிகள் என்று கண்டுபிடித்தாலும், ‘எங்களுக்கு சிஜி ஸ்கேன் அல்லது விஸிமி ஸ்கேன் வேண்டும்’ என்று மக்களே செலவுமிக்க
பரிசோதனைகளைக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

ஒரு பெண் ஒரு மகப்பேறு மருத்துவரை நடு இரவில் அணுகி, ‘2 மாதமாக மாதவிலக்கு வரவில்லை’ என்றும் ‘ஏற்கனவே தான் நிரந்தர கருத்தடை அறுவை  செய்து கொண்டவள்’ என்றும் ‘இப்போது அடி வயிற்று வலி உள்ளது’ என்றும் கூறி உள்ளார். சிறுநீர் சோதனையையும் ஸ்கேன் சோதனையையும் அப்போதே செய்து ‘புறக்கர்ப்பம் உள்ளது’ என்றும், ‘அது  ஆபத்தினை ஏற்படுத்தி விடாமல் இருக்க அறுவை செய்ய வேண்டும்’ என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து பணம் சம்பாதிக்க  விரும்புகின்ற
மருத்துவர் இவர் என்று எண்ணி, மற்றொரு மருத்துவரிடம் சென்று, ‘எப்போதும் தள்ளி வருகின்ற மாதவிலக்கின்போது ஏற்படுகின்ற வலியை போன்று
இப்போதும் வலி’ என்றும் மட்டுமே கூறி இருக்கிறார்.

முதலில் பார்த்த மருத்துவரின் குறிப்புகளையும் சோதனைகளையும் மறைத்துவிட்டு மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மூன்றாம் நாள்  புறக்கர்ப்பம் தெறித்துவிட உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு விட்டது. இது மருத்துவர்களை பற்றிய மக்களின் மனநிலை மாறி வருவதை காட்டுகிறது. சிகிச்சை முறைகளும் வெகு வேகமாக முன்னேறி வருகின்றன. அடிவயிற்றைக்  கீறி கருப்பைக் கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை செய்து மாதக்கணக்கில்
ஓய்வெடுக்கச் செய்த நிலை மாறி, தொப்புளின் கீழ் ஒரு துளைவிட்டு லேப்ராஸ்கோப் மூலமாக அறுவை சிகிச்சை செய்கின்ற முறை வந்துவிட்டது. ஓரிரு  நாட்கள் மட்டுமே ஓய்வு எடுக்கின்ற நிலையும், எந்தவித பின்விளைவுகளும் இல்லாமல் இருப்பதால், இந்த நவீன சிகிச்சையின் செலவும் அதிகமே.

இந்த மாற்றத்துக்கு மருத்துவர்களை குறை கூறுவதால் என்ன பயன்? எங்கோ ஆயிரத்தில் ஒருவர் செய்யும் தவறை எடுத்துக்காட்டி மருத்துவர்களின்  மனப்பான்மை மாறிவிட்டது என்பது தவறு. அன்னையாகவும் தந்தையாகவும் தெய்வமாகவும் போற்றப்படுகின்ற ஆசிரியர்களில் ஏதோ ஓர் ஆசிரியர் தனது  மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் என்று நாம் கேள்விப்படுவதில்லையா? அதற்காக ஆசிரியர் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக குறைகூற  முடியுமா? அதைப் போன்றுதான் எங்கோ ஒரு மருத்துவர் பிசினஸாக பண்ணினாலும் அனைத்து மருத்துவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது தவறு.  இன்றைய மருத்துவத்தில் நவீன முறை
சோதனைகளும் அறுவைசிகிச்சைகளும் அதிக செலவை தருவதால் அது மருத்துவர் செய்கின்ற பிசினஸ் என்ற மாறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது...’’

மருத்துவராக உங்களால் மறக்க முடியாத  சம்பவம்?

‘‘என்னுடைய மருத்துவமனையில் புறநோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை மயக்க நிலையில் தூக்கி வந்தனர். உடல் வெளுத்து, உடம்பு
சில்லிட்டு, நாடி தளர்ந்து, மூச்சு திணறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அவளை சோதனை செய்தபோது அவளுக்கு கருப்பையை விட்டு வெளியே  கருப்பைக் குழாயில் கர்ப்பம் தரித்து அது வெடித்து ரத்தம் வயிற்றுக்குள் கொட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வெடித்த கருப்பைக்  குழாயை துண்டித்து எடுத்துத் தையலிடாவிட்டால் அவள் உயிர் பிழைப்பது அரிது என்பதை உணர்ந்தேன்.

அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து கையொப்பமிட உடன் வந்த அனைவரும் மறுத்து விட்டனர். உடன் வந்த ஒருவர் அவள் கணவர் ராமன் மவுன்ட் ரோட்டில்  உள்ள பேட்டா கடையில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தொலைபேசி மூலமாக மவுன்ட் ரோட்டில் உள்ள ஒவ்வொரு பேட்டா கடைக்கும் பேசி, ராமனைக்  கண்டுபிடித்தோம். அவர் மனைவி உடல்நலம் பற்றி நான் கூறியதைக் கேட்டவுடன், ‘நான் வீட்டிலிருந்து புறப்படுகின்றபோதுகூட வாசல்வரை வந்து என்னை  வழியனுப்பினாள் என் மனைவி. இப்போது ‘ஆபத்து... அறுவை சிகிச்சை’ என்றெல்லாம் கூறி பணம் புரட்டும் தந்திரமா?’ என்று காட்டுக்கூச்சல் இட்டார். ஒருபுறம்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனைவி, மறுபுறம் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கும் கணவர் இடையே செய்வது அறியாது, தயங்கி நின்றபோது,  தெய்வாதீனமாக அங்கு காலணி வாங்க வந்திருந்த மருத்துவர் ஒருவர், தொலைபேசியில் ராமனின் கூச்சலை கேட்டு அவர் கையிலிருந்த தொலைபேசியை  வாங்கி என்னிடம் பேசி உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்.

‘மேடம்... நீங்கள் அறுவை சிகிச்சை செய்யுங்கள். இவரை என் காரிலேயே அழைத்துக்கொண்டு வருகிறேன். நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறேன். ஒரு நிமிடத்தையும்  வீணாக்காதீர்கள்’ என்று தைரியம் கூறினார். மேலும் சோதனையாக அவள் ரத்த இனம்  மிக அரிதான   கிஙிஸ்மீ எனக் கண்டறிந்தேன். நான் வைத்திருந்த ரத்த தானம் செய்ய விழைவோர் அட்டவணையிலிருந்து இருவரை அழைத்தபோது ஓடோடி  வந்து தானம் அளித்தனர். அப்பெண்ணும் பிழைத்தார்...’’

நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி சொல்லுங்களேன்?

‘‘‘பூப்பிலிருந்து மூப்பு வரை’  என்கிற புத்தகத்தை 25 ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். பெண்கள் எதிர்நோக்குகிற உடல், மனரீதியான மாறுதல்கள், அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய  வழிமுறைகள், அவள் நல்வாழ்வுக்கு சூழ்நிலை அமைந்து தரவேண்டிய சுற்றத்தார் பங்கு என்று ஒரு பெண் மகளாக, மனைவியாக தாயாக, இவ்வுலகத்தில்  சக்தியாக வாழ வேண்டிய வகையை விளக்கும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம். எல்லோரும் புரிந்துகொள்கிற வகையில் விளக்கங்களை தரும். கற்றறிந்த  அறிஞர்களாலும் வாசகர்களாலும் ‘ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம், இது மருத்துவக் கலைக்களஞ்சியம்’ என்னும் பாராட்டை இந்நூல்  பெற்றுள்ளது. பல தலைவர்களிடமிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆளுநர் அவர்களிடமிருந்தும் விருதுகள் பெற்றதுடன், தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து  சிறந்த அறிவியல் புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் அறிவியலை தனது தாய்மொழியில்  தந்துள்ள சிறந்த புத்தகம் என்று திராவிடப் பல்கலைக்கழகத்தின்  பரிசையும் பெற்றது. இப்புத்தகத்தின் அமோக வரவேற்பு இன்றும் குறையாமல் இருப்பதால்  மருத்துவத்துறையின் கடந்த 25 ஆண்டு
களாக வளர்ச்சியையும் கொண்டு வருவதற்காக முதியோர் நலம், தலைமுறை இடைவெளியைத் தவிர்க்கும் முறைகள், மரபியல் சிகிச்சை   (நிமீஸீமீ  tலீமீக்ஷீணீஜீஹ்)   ஆகியவை பற்றி எல்லாம் எடுத்துக்கூறி, புதுப்பித்து புதிய  வெளியீடாக இப்போது வெளிவந்துள்ளது...’’