செல்ஃபோன் பந்து விளையாடுது!



தவறான செல்ஃபோன் அழைப்பால் பிரச்னையில் சிக்கிக்கொள்கிறான் நாயகன்.  காவல்துறை எடுக்கும் தவறான நடவடிக்கையால் அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதை விறுவிறு திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயபாலகிருஷ்ணன்.

 இவர் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையாவிடம் சினிமா பயின்றவர். படத்தின் பெயர் ‘பந்து’.அறிமுக நாயகன் பிரதாப் ஜோடியாக ‘திருஷ்யம்’ மலையாளப் படத்தில் மோகன்லால் மகளாக நடித்த அன்ஷிபா நடித்துள்ளார்.

கணேஷ் ராகவேந்திராவுடன் பணியாற்றிய நந்தா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் அத்தனை பாடல்களையும் பத்மாவதி எழுதியிருக்கிறார். ‘தலை சாய்த்து....’, ‘விழிமாற்றி...’, ‘காத்தாடி போலவே....’, ‘என்றோ ஒரு....’, ‘பூவில் பனித்துளியும்....’ என்ற ஐந்து பாடல்களும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாராட்டைப் பெற்றன. இந்தப் படத்துக்கு பாடல்கள் தான் பலம் என்கிறது படக்குழு.

ஊதா கலருக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை வண்ணக் கோலங்கள் போட்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி.முத்துப்பாண்டியன்.

இவர் யு.கே.செந்தில்குமாரிடம் உதவியாளராக இருந்தவர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில் பட்டி என தென்மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர்கிங் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த பந்துவிளையாட்டை விரைவில் திரையில் காணலாம்.