காட்சிக்குக் காட்சி திடுக்!



கேபிள் சங்கர்! இந்தப் பெயர் ப்ளாக் யூசர்களிடம் பரிச்சயமானது. காரணம், இவர் எழுதும் சினிமா விமர்சனங்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என தயவு காட்டாமல் எல்லாப் படங்களையும் நடுநிலை வகித்து விமர்சனம் செய்வார்.

இப்போது அவருக்கு சத்திய சோதனை! சிங்கப்பூர் தமிழர் துவார் சந்திரசேகருக்காக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘தொட்டால் தொடரும்’. “விமர்சனம் செய்பவர்கள் படம் எடுக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

சான்ஸ் கிடைத்தது, டைரக்டராகிவிட்டேன் என்றில்லாமல் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டுதான் படம் இயக்க வந்துள்ளேன். அந்த வகையில் கதை விவாதம், உதவி இயக்குனர், சினிமா விநியோகம், தயாரிப்பு நிர்வாகி என சினிமாவில் பல தளங்களில் வேலை செய்துள் ளேன். ஏன்னா, விமர்சகர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு படம் இயக்க முடியாது” பலமாக சிரிக்கிறார் கேபிள் சங்கர். படத்தின் கதை என்ன?

இது லவ் வித் திரில்லர் கதை. யதார்த்தத்தை மீறாதளவுக்கு ஆக்ஷனும் இருக்கும். இது  வித்தியாசமான படம் என்று சொல்லமாட்டேன். ஆனால் க்ளைமாக்ஸ் புதுமாதிரியாக இருக்கும். யாரும் எதிர்பாராதபடி இருக்கும்.

காட்சிக்குக் காட்சி திடுக்கிடும்படி இருக்கும். தேவையில்லாத ஒரு விஷயத்தில் ஹீரோயின் தெரிந்தே தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அந்தப் பிரச்னையிலிருந்து ஹீரோயினை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியுள்ளேன்.

தமன், அருந்ததி காம்பினேஷன் காட்சிகள் செம ரகளையாக வந்துள்ளன. இந்த ஜோடி ஒரு சில படங்களில் தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரி அள்ளுது. அதுக்கு காரணம், இருவரும் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.

 இந்தப் படம் இருவருக்கும் பெரிய திருப்புமுனையாக இல்லையென்றாலும் சிறிய திருப்புமுனையாக இருக்கும். காமெடி வேடத்தில் நடித்திருக் கும் பாலாஜிக்கும் பெரிய பேர் கிடைக்கும். நான் ஏராளமான படங்களை விமர்சனம் செய்துள்ளேன். என்னுடைய படத்தைப் பற்றி வரும் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!”என்கிறார் கேபிள் சங்கர்.

-எஸ்