துணிச்சலின் மறுபெயர் பிரமிளா!



ஹீரோயினிஸம்

பிரமிளா என்றால் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவுக்கு உடனே வருவது ‘அரங்கேற்றம்’ லலிதாதான். கே.பாலச்சந்தரின் பெண் பாத்திரப் படைப்புகளிலேயே ஆகச் சிறந்த படைப்பு என்று அந்தப் பாத்திரத்தை விமர்சகர்கள் சொல்கிறார்கள். உயர்ஜாதி எனப்படும் குலத்தில் பிறந்தாலும் குடும்பத்திற்காக பாலியல் தொழிலாளியாக மாறி, பின்பு அந்த குடும்பத்தாலேயே விரட்டி அடிக்கப்பட்ட ஒரு அபலையின் கேரக்டர் அது.

பாலியல் தொழிலுக்கு ஜாதியில்லை, வறுமைக்கு உயர்குலம் தாழ்குலம் வித்தியாசமில்லை என்கிற சமூக சூழலை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொன்ன கேரக்டர். ஆனால், ‘அரங்கேற்றம்’ லலிதாவை இந்த அளவுக்கு ஆழமாக பார்ப்பவர்கள் மிகவும் குறைவு.

பிரமிளாவின் உருண்டு திரண்ட அழகு, விலைமாது கேரக்டர் தரும் கிறக்கம், ஜாக்கெட் இன்றி கவிழ்ந்து கிடக்கும்போது அவர் மீது தூவப்படும் ரூபாய் நோட்டுகள், “ஆண்கள்னாலே மரத்துப்போச்சி” என்கிற வசனம் போன்றவற்றோடு அந்த கதாபாத்திரத்தை கடந்து விடுகிறவர்கள்தான் அதிகம்.

பிரமிளா, தன் காலத்தைச் சேர்ந்த மலையாள நடிகைகளான வித்யா, பத்மினி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலரின் அழகிலும், திறமையிலும் எவ்வகையிலும் குறைவில்லாதவர். அவர்கள் பிடித்த இடத்தை இவரும் பிடித்திருக்க வேண்டும். ஆனால் ‘அரங்கேற்றம்’ அவருக்கு கொடுத்த இமேஜ், பெரும் தடைக்கல்லாக அமைந்து விட்டது.

இத்தனைக்கும் ‘அரங்கேற்றம்’ படத்தில் அவர் அறிமுக நடிகை அல்ல. அதற்குமுன்பே ‘கோமாதா எங்கள் குலமாதா’, ‘மல்லிகைப் பூ’ ேபான்ற தமிழ்ப் படங்களிலும், ஐந்து மலையாளப் படங்களிலும் நல்ல குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துவிட்டுத்தான் ‘அரங்கேற்றம்’ படத்தில் நடித்தார். கே.பாலச்சந்தர் என்கிற வித்தியாசமான படைப்பாளியின் படம். புரட்சிகரமான கருத்தைச் சொல்கிற கதை. எந்த நடிகையும் நடிக்கத் தயங்குகிற கேரக்டர்.

எல்லாவற்றையும் உணர்ந்தேதான் பிரமிளா நடித்தார். சினிமாவை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் இந்த கேரக்டர் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தேதான் நடிக்க ஒப்புக் கொண்டார். இதனை அவர் பல நேர்காணல்களிலும் தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகு அவர் ‘தங்கப் பதக்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து விலைமாது, அம்மாதிரி பெண் கேரக்டராகவே வந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று மலையாள சினிமாப் பக்கம் ஒதுங்கிவிட்டார். இங்கு கவர்ச்சி நடிகையாகப் பார்க்கப்பட்ட பிரமிளா கேரளாவில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பான்மையானவை அற்புதமான குணச்சித்திர வேடங்கள்.

சரி, பிரமிளா இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?
வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார். தான் முன்னாள் நட்சத்திரம் என்பதை மறந்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.


அவர் எப்போது சென்னை வந்தாலும் தனக்கு வாழ்நாள் புகழைப் பெற்றுக் கொடுத்த கே.பாலச்சந்தரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாலச்சந்தர் மறைந்தபோது, வெளிநாட்டிலிருந்து வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்.

துணிச்சலாக எடுத்த முடிவும், அதனால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொண்ட விதமும், இன்றும் எடுத்த முடிவு பற்றி பெருமைப்படும் குணமும்தான் அவரை நிஜ ஹீரோயினாக அடையாளப்படுத்துகின்றன.

- மீரான்