ஐயப்பனை பார்க்க பெண்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்! பேரரசு அதிரடி



புதுமுகங்கள் கவித்ரன், மதுமிதா நடிக்கும் படம் ‘ரூட்டு’. முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இசை விஜய் பிரபு. இயக்கம் ஏ.சி.மணிகண்டன். தயாரிப்பு ஆர்.தங்கப்பாண்டி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட... இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வை நிச்சயம் ஏற் படுத்தும். இந்தப் படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை  சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குநர் என  உறுதியாக சொல்வேன்” என்றார்.  

நடிகர் ஆரி பேசும்போது, தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குநரைப் பற்றி பேசும்போது, தயாரிப்பாளருக்கான இயக்குநர் என்று சொன்னாரே அதுதான் இந்தப் படத்தின் முதல் வெற்றி. பெரிய படங்களின் விழாக்களுக்கு செல்வதை விட, இதுபோன்ற சின்னப் படங்களை கைதூக்கி விடுவதற்கு நான் தயாராக உள்ளேன். அதனால் என்னை எப்போதும் தாராளமாக அழைக்கலாம். எப்போதுமே சமூக வேலைகள் என சுற்றி வருவதால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையோ  எனக் கேட்கும் அன்பான நண்பர்களுக்கு, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

‘ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொல்லலாம்.  நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால் தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன.

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். இப்போது  சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க  விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்.

சமீபத்தில் ஒரு நாளிதழில் வெப் சீரிஸ் தொடருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே தங்களது திரைப்படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் செலவழிக்க தயாராக இருந்தும் கூட, அப்படி விளம்பரம் கொடுக்க கூடாது என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் வெப்சீரிஸ் வெளியிடும் நிறுவனங்கள் சினிமாவிற்கு ஊடுருவ ஆரம்பித்து விடும். இதனால் சிறிய படங்கள் மேலும் தற்கொலைக்கு நிகரான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சின்னப் படங்கள் தியேட்டருக்கு வர முடியாத ஓர் அபாயகரமான சூழல் ஏற்படும்.

வரும் நாட்களில் படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய சங்கடங்களை சந்திக்க நேரிடும். நமது மொத்த சம்பாத்தியத்தையும் வெளியில் இருந்து வருபவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனால் தான் தயாரிப்பாளர். சங்கத்தில் நமக்கான ஒரு ஆப், நமக்கான ஒரு வலைதளத்தை உருவாக்கி அதன்மூலம் புதிய வியாபார உத்திகளை கொண்டு வாருங்கள் என நான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்” என்றார் ஆரி.

படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி என்னுடைய ‘திருத்தணி’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். அதற்கடுத்து ஒரு படத்திற்காக அவரை அணுகியபோது எத்தனை நாட்கள் கால்ஷீட் என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி போன்ற மிகப்பெரிய நடிகர்களுக்கு கூட கிடைக்காத தேசிய விருது அப்புக்குட்டிக்கு கிடைத்திருக்கிறது என்றால் இதைவிட அவருக்கு வேறு என்ன பேரும் புகழும் கிடைத்து விடமுடியும்.. இந்த படத்தின் இயக்குநர் பெயர் மணிகண்டன். அதாவது ஐயப்பன் பெயர். அதனால் பிரச்சனை வரத்தான் செய்யும். அந்த ஐயப்பன் இடத்திற்கு பெண்கள் போகிறார்களோ இல்லையோ, இந்த ஐயப்பன் படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்” என பேசினார்.

படத்தில் இயக்குநர் மணிகண்டன் பேசும்போது, “இந்தப்படத்தை முதலில் வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. இடையில் சில காரணத்தால் அவர் அதிலிருந்து விலகிவிட, அந்த நேரத்தில் என்னிடம் உதவி இயக்குநராக இருந்த தங்கப்பாண்டி தான், இது அருமையான படம் இதை கிடப்பில் போட்டு விடக்கூடாது என கூறி தன்னுடைய சக்திக்கு மீறி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்தார்.

அதேபோல இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் படத்தின் முதல் நாள் திடீரென வர முடியாது என கூறி விட, குறைந்த கால அவகாசத்தில் கதாநாயகியாக இந்த படத்திற்குள் வந்தவர் தான் இந்த மதுமிதா ஆனாலும் முதல் நாள் முதல் ஷாட்டிலேயே அவருடைய திறமையை நியாயமானது என்பதை நிரூபித்து விட்டார்” என கூறினார்.

- ரா