தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்!



மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் பெயரில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ துவங்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கத்தை உருவாக்கியதில்  அவருடைய ரசிகர்களான ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிச்சாமிக்கு முக்கிய பங்கு உண்டு.  அதற்கான தொடக்க விழாவில் சிவகுமார், நாசர், ராஜேஷ், ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், சரண் என்று ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

விழாவில் சிவகுமார் பேசியதாவது:  ‘‘இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினி நடிக்கும்போது ‘நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே. நீ கறுப்பு வைரம். தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய்’ என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் ரஜினிகாந்த்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். அவருடைய இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற ஐந்து படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது’’ என்றார்.

இயக்குநர் சரண் பேசும்போது, ‘‘இயக்குநர் பாலசந்தர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. பலர் வாழ்க்கையை ஜொலிக்க வைத்தவர். நாங்கள் அனைவரும் அவருடைய பக்தர்கள். பக்தர்கள் ஒன்றுகூடி ரசிகர்கள் சங்கம் துவங்கி இருக்கிறோம்’’ என்றார்.ராஜேஷ் பேசும்போது, ‘‘1974ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் எடுக்கும்போதுதான் கே.பி.சாரை சந்தித்தேன். நேரம் தவறாமையை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான மனிதர்.

தர், சேதுமாதவன் மற்றும் கே.பாலசந்தர் ஆகிய மூன்று இயக்குநர்களிடம்தான் தைரியமாகப் பேசுவேன். ‘நீ சினிமாவை நேசிப்பவன், சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று வந்திருக்கிறாய். நீ வெற்றி பெறுவாய்’ என்றார். குற்றாலத்தில் நானும், சரிதாவும் நடித்துக் கொண்டிருக்கும்போது குற்றாலத்தில் வெள்ளம் வந்துவிட்டது. உடனே, கிளைமாக்ஸை மாற்றி வெள்ளத்தைப் படமெடுத்தார். அவர் அனைவரின் நடிப்பையும் ரசித்து மனமுவந்து பாராட்டுவார். அவரைப் போன்ற ஒரு ஒப்பற்ற மனிதரைப் பார்க்க முடியாது.

மறந்துபோன சினிமாத் துறையில் ஒப்பற்ற இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரசிகர்கள் மன்றம் அமைத்ததில் மகிழ்ச்சி. நான் அதற்கு தலைவனாக இல்லாமல் தொண்டனாகப் பணியாற்றுவேன். அவருக்கு சிலை வைப்பதற்கு முயற்சி எடுப்பேன்’’ என்றார். நாசர் பேசும்போது, ‘‘எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம்தான். ஆனால், சில மனிதர்கள்தான் தாங்கள் வாழ்ந்துகாட்டிய விதத்தில் மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில்தான் உருவானது. அந்தப் படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒருநாள் கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்குச் சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்பு கூட தடைபட்டதுமில்லை. இதற்குக் காரணம் இயக்குநர் கே.பாலசந்தர்தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக்கூடியவர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர்.

கே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதுதான் இன்றைய காலகட்டத்திற்குத் தேவை. ஏனென்றால், அவர் சைலன்ஸ் என்று கூறிவிட்டால் யாரும் பேசமாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு பொருளாதாரத்தையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.

கே.பாலசந்தர் என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பது தான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும்.
இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதாலயா புரொடக்‌ஷன்ஸின் கட்டமைப்பு போல வேறு எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை’’என்றார்.

ரமேஷ் கண்ணா பேசும்போது, ‘‘சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பாரதிராஜா மற்றும் கே.பாலசந்தர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். அதற்காக நான் தினமும் அவர்கள் வீட்டிற்குச் செல்வேன். ஒருநாள் என்னை வீட்டிற்கு அழைத்தார். எனக்கு கதையைப் பற்றி கலந்துரையாடு வதற்கு நீதான் சரியான ஆள் என்றார். கார்த்தியை வைத்து ஒரு படம் எடுத்தோம். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. பிறகுதான் ‘முத்து’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த மகானுடன் இருந்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’' என்றார்.

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் பேசும்போது, ‘‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் படப்பிடிப்பில் கேசட்டை தண்ணீருக்குள் போட்டுவிட்டேன். அதற்காக அவர் என்னை அடிப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவர் என்னை அடிக்கவில்லை. அவருடன் வாழ்ந்த நாட்கள் புண்ணியமான நாட்கள்'’ என்றார்.

‘பூவிலங்கு’ மோகன் பேசும்போது, ‘‘கே.பாலசந்தரின் ரசிகன் நான். இன்றும் அவருடைய ரசிகனாகத்தான் இருக்கிறேன். அவருடைய திரைப்படங்களில் திருவள்ளுவர் இல்லாமல் இருக்க மாட்டார். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எங்களுடைய ஆசான் கே.பாலசந்தர்’’ என்றார்.

விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாபு பேசும்போது, ‘‘கே.பாலசந்தர் சாருக்கு சிலை வைக்க பலரும் பல மேடைகளிலும் பேசிவருவது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அதற்காக முறையாக அரசாங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதன்படி விரைவில் பாலசந்தர் சாரின் சிலை சென்னையில் நிறுவப்படும். ‘கராத்தே ஹுசைனி’ சார் கே.பி.சாரின் சிலையை வெண்கலத்தில் தன் சொந்த செலவில் தானே வடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். கே.பி.சாரின் புகழைப் பரப்புவதுதான் எங்கள் சங்கத்தின் நோக்கம்'’ என்றார்.

- ரா