கவிதைக்காரர்கள் வீதி



கைக்குடைக்குள்
எடுத்துச் செல்லலாம்
அவரவர் இயலாமையை
எங்கு அவிழ்க்கவேண்டுமென்று
தீர்மானித்தபடி நகர்கின்றன
பெருநதியைப் பொதிந்து செல்லும்
மேகங்கள்!
- கீர்த்தி, கொளத்தூர்.



அதே முத்தம்தான்
அத்தை பையனுக்கு
வயதுக்கு வந்தபின்பு
காமமாக
மாறிவிடுகிறது!
- தில்பாரதி, திருச்சி.

கண்ணைக் கட்டிக்கொண்டு
கண்ணாமூச்சி ஆட்டம்
ஆடின குழந்தைகள்
கடவுளும் மறைந்து கொண்டார்.
- நா.கோகிலன், ஜோலார்பேட்டை.

கண்களைக் கட்டிவிடுகின்றன
குழந்தைகள்
கண்ணாமூச்சி விளையாட்டில்
பொம்மைகளுக்கு!
- சங்கீதா, மோகனூர்.

நதி வரும்வரை
காத்திருக்கும் கடல்
இனி
என்ன செய்யப்போகிறதோ?
- கவி கண்மணி, கட்டுமாவடி.

தெப்பக்குளத்தின்
படித்துறையில் இன்னமும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன
பிரிந்த காதலர்களின்
நினைவுகள்!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.