சேலை



- கே.அசோகன்

பிரபல புடவைக் கடையின் மேனேஜர்தான் கேசவன். ஆனால், அவன் மனைவி சித்ராவே சேலை கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும் அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு, அப்படியே அதற்குப் பழகி விட்டாள். கேசவன் பலமுறை அவளைப் புடவை கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ‘‘போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது!’’ எனச் சொல்லி விடுவாள். 



அப்படிப்பட்டவள் ஒரு நாள் தானே முன்வந்து கேசவனிடம் கேட்டாள், ‘‘என்னங்க... ஜவுளிக்கடையில ஷோகேஸ் பொம்மைக்கெல்லாம் சேலை கட்டி விடுறீங்களே... எனக்கும் நீங்களே சேலை கட்டிவிடக் கூடாதா?’’ ‘அட, இதைக் கேட்கவா இத்தனை நாளாகத் தயக்கம்!’ கேசவன் உற்சாகமாகி அவளுக்கு சேலை கட்டிவிட்டான். அந்த டிசைனர் சேலையில் சித்ரா தேவதையாய்த் தெரிந்தாள்.

‘‘இப்படியே இவள் தினமும் இருந்தால்...’’ - பெருமூச்சுடன் அவன் கடைக்குக் கிளம்பியபோது சித்ரா, செல்போனில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தாள். ‘‘டைரக்டர் ஸார்! நீங்க சொன்னபடியே ஒரு மணி நேரத்துல ‘சேலை காஸ்ட்யூம்ல’ நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுறேன். அந்தக் கேரக்டரை வேற யாருக்கும் கொடுத்துடாதீங்க. ப்ளீஸ்!’’ - சொல்லிக்கொண்டே அவசரமாகக் காரில் ஏறினாள் சித்ரா.