புறாவிடு தூது !



ஒரு நிமிஷத்தில் பத்து மெசேஜ்களை வாட்ஸ்அப்பிலும், டஜன் செல்ஃபிகளை இன்ஸ்டாகிராமிலும் பறக்கவிடும்  காலத்தில் தபால் அனுப்புவதே இன்று விநோதம்தான். அப்படியிருக்க புறா மூலம் செய்தி அனுப்பினால்..?யெஸ். உலகிலேயே புறா வழியாக செய்தி அனுப்பும் வழக்கம் இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில்தான் இன்றும்  நடைமுறையில் உள்ளது. 1946ம் ஆண்டு இந்திய ராணுவம் ஒடிஷா காவல்துறையிடம் சோதனைகளைச் செய்து பார்க்க  200 புறாக்களைக் கொடுத்தது. தகவல் தொடர்பு அற்றுப்போகும் அபாயகரமான சூழலில் காவல்துறை செய்திகளைப்  பரிமாறிக் கொள்ள இப்புறாக்கள் உதவும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

அந்த வகையில் கோரபுத் மாவட்டத்தில் தொடங்கிய புறாக்களின் செய்திச் சேவை, பிற மாவட்டங்களிலும்  விரிவுபடுத்தப்பட்டது.1948ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று, பிரதமர் ஜவகர்லால் நேரு கட்டாக் அலுவலகத்திலிருந்து புறா செய்திச் சேவையைத் தொடங்கி வைத்து சம்பல்பூர் பகுதிக்கு செய்தி அனுப்பினார். ‘நடக்கவுள்ள  மாநாட்டில் பேச்சாளரையும் மக்களையும் பிரிக்குமாறு மேடை அமைப்பு இருக்கவேண்டாம்!’ என்பதே அச்செய்தி.   செய்திகளைப் பரிமாறுவதற்கெனவே பந்தயங்களில் பயன்படுத்தப்படும் 700 பெல்ஜியம் ஹோமர் புறாக்கள் வாங்கப்பட்டு  பராமரிக்கப்பட்டன.

இப்போது 50 புறாக்களைப் பராமரித்து வரும் ஒடிஷா காவல்துறை, அண்மையில் புவனேஸ்வர் - கட்டாக் வரை  செய்திகளைக் கொண்டு செல்ல புறாக்களைப் பயன்படுத்தினர். 25 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து செய்தியை  உரிய இடத்தில் சேர்த்து சாதித்திருக்கின்றன இப்புறாக்கள். இந்த நிகழ்ச்சியை இன்டாக் (INTACH) என்னும் கலை  மற்றும் கலாசார அறக்கட்டளை நிறுவனம் ஒருங்கிணைத்தது. ‘‘புறாக்களின் செய்திப் பரிமாற்றம் என்பது ஒடிஷா  மாநிலத்தின் தனிப்பெருமை. இதனை அரசு தொடர்ந்து நடத்துவதற்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்!’’ என  இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் டிஜிபி அமியாபூஷன் திரிபாதி நெகிழ்ந்து பேசினார். இப்போது அரசு  விழாக்களில் மட்டுமே புறாக்களைப் பயன்படுத்துகின்றனர்.

1982, 1999ம் ஆண்டுகளில் ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பில் ரேடியோ உள்ளிட்ட தகவல்தொடர்பு  சேவைகள் செயலிழந்தபோது கட்டாக்கில் அமைக்கப்பட்டிருந்த புறாக்கள் சேவை மையம் செய்திகளை பல்வேறு  தொலைதூர காவல்நிலையங்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரியபணியைச் செய்தன. ஆண்டுதோறும் மாநில அரசு  புறாக்களைப் பராமரிக்க ரூ.5 லட்சம் செலவு செய்துவரு கிறது. காவல்துறை கட்டாக் மற்றும் அங்குல் நகரங்களில் 150  புறாக்களைப் பராமரித்து வளர்த்து வருகிறது. எப்படி பயிற்சியளிக்கிறார்கள்? முதலில் புறாக்களுக்கு பயிற்சி என்பது 3 -  5 கி.மீ.தான். அந்த ஏரியா புறாக்களுக்கு நன்கு அறிமுகமானபின் செய்தி கொண்டு செல்லும் தூரத்தை மெல்ல  அதிகரிக்கிறார்கள்.

இதில் ஸ்டேடிக், பூமராங், மொபைல் என மூன்று முறைகள் உள்ளன. இப்போது பயன்படுத்தப்படுவது ஸ்டேடிக்  என்னும் ஒற்றை செய்திப் பரிமாற்ற முறைதான். 20 ஆண்டுகள் வாழும் புறா, 25 கி.மீ. தூரத்தை தோராயமாக 20  நிமிடங்களில் கடக்கும் திறன் கொண்டது. புறாக்கள் பிறந்த ஆறாவது வாரம் செய்தியைக் கொண்டு செல்வதற்கான  பயிற்சிகள் தொடங்குகின்றன. இதில் உச்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் 805 கி.மீ. தொலைவு சென்று வந்த  அட்வென்ச்சர் புறாக்களும் உண்டு.‘‘நாங்கள் வளர்க்கும் புறாக்களை ஒவ்வொன்றாக தனியாக அடையாளம்  காணுவதோடு, அவையும் நம்மை குரல் மூலம் புரிந்து கொள்கின்றன. எனவே அவற்றை சுதந்திரமாகப் பறக்க  விடும்போது வேலையைச் செய்துவிட்டு எங்களிடமே திரும்பி வந்துவிடுகின்றன!’’ என்கிறார் பதினாறு ஆண்டுகளாக  புறாக்களைப் பராமரித்து வரும் கான்ஸ்டபிள் பரசுராம் நந்தா.    
                                                             
- ச.அன்பரசு

தூதர் புறா!


கி.பி.1187 (மூன்றாம் ராம்ஸே) காலகட்டத்திலேயே புறாக்கள் அஞ்சல் சேவைக்காக கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டன. 1800களில் பிரான்சிலும் பின்னர் 1938ம் ஆண்டு இங்கிலாந்திலும் தேசிய புறாசேவையைத்  தொடங்கினர். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் புறா சேவைப்பிரிவு ராணுவத்திற்கு 2 லட்சம் புறாக்களை  தகவல் சேவைக்காக அளித்தது. செய்தி கொண்டு சேர்க்கும் பணியில் 32 ஆயிரத்து 187 கி.மீ. பறந்து சாதித்த  புறாக்களும் உண்டு. உலகப்போர் முடிவுக்கு வந்தபின், 32 டிக்கின் சாதனை விருதுகள் புறாக்களுக்கு வழங்கப்பட்டன.