பிளாஸ்டிக்கைத்தான் சாப்பிடுகிறோம்..! ஷாக் ரிப்போர்ட்



அதிர்ச்சியடைய எதுவுமில்லை. காரணம், அதற்கு மதிப்புமில்லை. ஏனெனில் எதார்த்தம் இதுதான்.ஆம். காலை முதல் இரவு வரை சைவமோ அசைவமோ நாம் சாப்பிடுவது பிளாஸ்டிக்கைத்தான்.
அண்டார்டிகாவில் உள்ள பனி அடுக்குகளின் கீழ்ப் பகுதிகள் தொடங்கி பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளில் மட்டுமே வாழும் உயிரினங்களின் வயிறு வரை, அவ்வளவு ஏன், குடிக்கும் தண்ணீரில் கூட நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டன.

மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படும் நுண் பிளாஸ்டிக்குகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அது மிகச் சிறியதாக இருப்பதால் நம்மால் அதைக் காண முடிவதில்லை.
உலக கடல் பரப்புகளின் மேற்பகுதிகளில் மட்டும் சுமார் 24.4 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. அதேபோல பல நிலப்பரப்புகளிலும், மண்ணிலும், நாம் சாப்பிடும் உணவில் கூட பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கின்றன.

எனவே நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவிலும் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் நிரம்பி வழிகின்றன.2022ம் ஆண்டு என்விரான்மென்டல் வொர்க்கிங் குரூப் என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த லாப நோக்கற்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், sewage sludge என்றழைக்கப்படும் கழிவுநீர் சேறு காரணமாக, சுமார் 20 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் அமெரிக்காவில் பி எஃப் ஏ எஸ் (per and polyfluoroalkyl substances) என்கிற ரசாயனத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ரசாயனம் சாதாரண சுற்றுச்சூழல்களில் கரைந்து போகாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒரு நகராட்சிக்கு வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படும்; தங்கும் சேறு போன்ற கழிவு நீரைத்தான் கழிவுநீர் சேறு (sewage sludge) என்கிறார்கள்.இந்த கழிவுநீர் சேற்றை அப்புறப்படுத்துவதற்கு அதிகம் செலவாகிறது; அதோடு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதால் இந்த கழிவு நீர் சேற்றை ஓர் ஆர்கானிக் உரமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன.

எனவே ஐரோப்பிய விவசாய நிலங்கள் உலக அளவில் மிகப்பெரிய நுண் பிளாஸ்டிக் துகள்களின் தோற்றுவாயாக இருக்கலாம் என்று கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கிறது.இதை எண்ணிக்கை அடிப்படையில் கூற வேண்டுமானால் 31 முதல் 42 ஆயிரம் டன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் அல்லது 86 முதல் 710 ட்ரில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் ஐரோப்பிய விவசாய நிலங்களை ஒவ்வொரு ஆண்டும் மாசுபடுத்துவதாகக் கூறலாம்.

ஒரு மிமீ முதல் 5 மில்லி மீட்டர் வரை உள்ள நுண் பிளாஸ்டிக் துகள்களை ஆங்கிலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த நுண் துகள் பிளாஸ்டிக், கழிவுநீர் சேற்றில் சென்று கலக்கின்றன. கழிவு நீர் சேற்றின் மொத்த எடையில், இந்த நுண் பிளாஸ்டிக்குகள் சுமார் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது.

அதாவது ஐரோப்பிய நாடுகளின் விவசாய நிலங்களில் உள்ள பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவு பெருங்கடல் பரப்புகளில் உள்ள பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவுகளுக்கு இணையாக இருப்பதாக, கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் ஜேம்ஸ் லாஃப்டி (James Lofty) அதிர்ச்சி கிளப்புகிறார்.

ஐரோப்பாவில் மட்டும் இந்த நிலை என தப்புக் கணக்குப் போட வேண்டாம். கனடா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், 99 சதவீத பிளாஸ்டிக் நுண் துகள்கள், கழிவுநீர் சேறு வைக்கப்பட்டிருந்த அல்லது கலக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து நீர்நிலைகளுக்கு வந்து சேர்வதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.பிரிட்டன் நாட்டில் விவசாய நிலங்களைச் சென்றடையும்
இந்தக் கழிவு நீர் சேற்றில், dioxins, polycyclic aromatic hydrocarbons போன்ற மனித உடலுக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள் இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் முகமையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2020ம் ஆண்டு கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் வேளாண் விஞ்ஞானி மேரி பெத் கிர்க்ஹம் (Mary Beth Kirkham) மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்டிக் கலந்த மண், கேட்மியம் (cadmium) போன்ற நச்சுத் தன்மை கொண்ட ரசாயனங்களை உட்கொள்ள, பிளாஸ்டிக் துகள்கள் வழிவகுப்பதாகக் கண்டுபிடித்தார்.அதே நேரத்தில் நுண் பிளாஸ்டிக்குகள், மண்புழுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும், அதன் உடல் எடையைக் குறைக்க காரணமாக அமைவதாகவும் சொல்கிறார்.

மண்புழுக்களின் உடல் எடைக் குறைவுக்கு முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நுண் பிளாஸ்டிக் துகள்களால் மண் புழுக்களின் செரிமான மண்டலம் முழுமையாகச்  செயல்பட முடியாமல் பாதிக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால் மண் புழுக்களால் முழுமையாக சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாமல், அதன் வளர்ச்சி தடைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மண்புழுக்கள்தான் ஒட்டுமொத்த மண்ணின் வளத்தை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது பிறந்த சிசுவுக்கும் தெரியும். மண்புழுக்கள் இருப்பதால்தான் மண்ணில் போதுமான காற்றோட்டம் உறுதி செய்யப்படுகிறது, மண் சரிவுகள் தவிர்க்கப்படுகின்றன, தண்ணீர் பெரிய அளவில் நிலத்தடியில் வடிகிறது, ஊட்டச்சத்துகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மண் புழுக்களின் வளர்ச்சி தடைப்பட்டால் என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள்.கடந்த 2020ம் ஆண்டு பழங்கள் & காய்கறிகளில் நுண் பிளாஸ்டிக் & நானோ பிளாஸ்டிக் துகள்கள் நிரம்பி வழிவதைக் கண்டறிந்தார்கள். இது பிரச்னையின் வீரியத்தை வெளிச்சமிட்டுக் காண்பித்தது.இத்தாலியில் உள்ள சிசிலி நகர சூப்பர் மார்க்கெட் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் விற்று வந்த விவசாய விளைச்சல்களில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டது ஒரு சோறு பதம். குறிப்பாக ஆப்பிள் பழங்கள்தான் அதிகம் மாசுபட்டதாகவும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்கறிகளில் கேரட்கள்தான் அதிக அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லி பெய்ஜ்னென்பர்க் (Willie Peijnenburg) மேற்கொண்ட ஆய்வு அடுத்த அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.
அதாவது, தங்களைச் சுற்றியுள்ள தண்ணீர் மற்றும் மண்ணிலிருந்து, தங்கள் வேரில் உள்ள சிறு வெடிப்புகள் வழியாக நானோ பிளாஸ்டிக் துகள்களை விவசாயப் பயிர்கள்  உட்கொள்வதாகக் கண்டுபிடித்தார்.

இப்படி தாவரங்களின் வேர் வழியாக நுழையும் நானோ பிளாஸ்டிக்குகள், அதன் மேற்பகுதிகளுக்கு வருவது மிகக் குறைவே... தாவரங்களின் இலைகளுக்கு 1%க்கும் குறைவான நானோ பிளாஸ்டிக்குகளே வந்து சேர்கின்றன என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.இலை தழைக் காய்கறிகளான முட்டைக் கோஸ், லெட்டியூஸ் போன்றவைகளில் குறைந்த அளவிலேயே நானோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாகவும், வேரில் உருவாகும் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, டர்னிப் போன்றவைகளில் அதிகளவு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

இதையெல்லாம் வைத்து தாவரங்கள் மிக நுண்ணிய நானோ பிளாஸ்டிக் துகள்களையே எடுத்துக் கொள்கின்றன; மைக்ரோ பிளாஸ்டிக் என்று வகைப்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை எடுத்துக் கொள்வதில்லை என சந்தோஷப்பட முடியாது. காரணம், இதே மைக்ரோ பிளாஸ்டிக்குகள்தான், உடைந்து சிதைந்து நாளை நானோ பிளாஸ்டிக்குகளாக உருவாகின்றன.இந்த பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களின் வளர்ச்சியை பாதிப்பதில்லை, மாறாக, நம் தட்டில் உணவாக வந்து அமர்கின்றன. அதன் விளைவாக பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இப்பிரச்னை, காலப் போக்கில் பெரிதாகுமே ஒழிய குறையாது என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.

நம் சுற்றுச் சூழலில் இருந்து பிளாஸ்டிக்கை முழுமையாக நீக்க பல தசாப்தங்கள் ஆகலாம். இப்போதைக்கு இந்த நுண் பிளாஸ்டிக்குகளால் நமக்கு பெரிய ஆபத்து இல்லை என்றாலும், தொடர்ந்து நம் விவசாய நிலங்களில் ரசாயனங்கள் இருப்பது நல்லதல்ல. அதுவே வருங்காலத்தில் அபாயமாக உருவெடுக்கலாம் என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.
பிளாஸ்டிக் உற்பத்தியின் போது கலக்கப்படும் ரசாயனங்களால், மனித உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பி மண்டலங்களும் மனித உடலின் வளர்ச்சிக்கான ஹார்மோன்களும் பாதிக்கப்
படுகின்றன.

அதோடு புற்றுநோய், இதய நோய் போன்ற பிரச்னைகளும் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலுக்குள் சென்றால், அது உடலில் உள்ள செல்களைப் பாதித்து, அழற்சி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு கழிவுநீரைச் சுத்திகரித்து, மீதமிருக்கும் கழிவு நீர் சேற்றை தங்கள் விவசாய நிலங்களில் கலப்பதை நெதர்லாந்து கடந்த 1995ம் ஆண்டே தடை செய்துவிட்டது.

தொடக்கத்தில் தன் கழிவுநீர் சேற்றை அழித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து, காலப் போக்கில், பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. பிரிட்டனில் அதே கழிவு நீர் சேறு, உரமாகப் பயன்படுத்தப்பட்டது.கழிவுநீர் சேற்றை உரங்களாகப் பயன்படுத்துவதை சுவிட்சர்லாந்து கடந்த 2003ம் ஆண்டே நிறுத்திவிட்டது. அதற்கு கழிவுநீர் சேற்றில் பல அபாயகரமான விஷயங்கள் இருப்பதாகக் காரணம் கூறியது.

அமெரிக்காவில் உள்ள மைன் (Maine) மாகாணத்தில், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் sewage sludge எனப்படும் கழிவுநீர் சேற்றை உரமாகப் பயன்படுத்துவதை தடை செய்தது. அம்மாகாணத்தில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் விவசாய நிலங்கள், பயிர்கள், தண்ணீரில் அதிக அளவில் பி எஃப் ஏ எஸ் என்றழைக்கப்படும் (per- and polyfluoroalkyl substances) ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதை எல்லாம் விடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ரத்தத்தில் கூட பி எஃப் ஏ எஸ் ரசாயனம் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந்ததுதான்.இதனால் பல விளைநிலங்களே மொத்தமாக மூடப்பட்டன.எனவே, சட்டத்தின் முன்பும், வரையறைக்குள்ளும் மைக்ரோ பிளாஸ்டிக் & நானோ பிளாஸ்டிக்குகள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையெனில் இன்று ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இது, நாளை மனித குலத்தையே விழுங்கும் அபாயமாக மாறக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஜான்சி