‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டம் வென்றிருக்கிறார் லைலா லோப்ஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் அழகியாகி இருப்பது ஸ்பெஷல். அதிலும் லைலாவின் சிரிப்பும் பேச்சும் சம்திங் ஸ்பெஷல்!
இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியின் இறுதிச் சுற்று, பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. 89 நாடுகளின் அழகிகள் பங்கேற்ற இதில், அங்கோலா நாட்டைச் சேர்ந்த 25 வயது மாணவி லைலா லோப்ஸ் கிரீடம் வென்றார். ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் மிகமோசமான உள்நாட்டுப் போர் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை பலிகொண்ட அந்தப் போர் பல குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கிறது. அதோடு எய்ட்ஸ் நோயின் தாண்டவமும் பயங்கரம்.
தற்போது இங்கிலாந்தில் நிர்வாகம் பயிலும் மாணவியான லைலா, அங்கோலா அழகியாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே குழந்தைகளுக்காகவும் எய்ட்ஸ் நோயாளி களுக்காகவும் தொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதையெல்லாம் சொல்லி, ‘‘அழகு என்பது மனசில் இருப்பதுதான்; அது வெளித் தோற்றத்தில் இல்லை’’ என்று விளக்கி அழகிப்போட்டி நடுவர்களை வசப்படுத்திவிட்டார். போதுமான தூக்கம், நிறைய தண்ணீர் குடிப்பது, அதிகம் வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது... இவைதான் சிறந்த அழகு டிப்ஸ் என லைலா சொன்னவை!
‘‘உங்கள் உடலில் ஏதோ ஒரு உறுப்பு சரியாக இல்லை என பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகாக்கிக் கொள்ளச் சொன்னால் எதை சரிசெய்து கொள்வீர்கள்?’’ என்பது இறுதிச் சுற்றில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி. ‘‘கடவுள் என்னைப் படைத்த விதம் குறித்து முழு திருப்தி எனக்கு! அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை’’ என புன்னகையோடு சொல்லி கிரீடத்தைக் கவர்ந்துவிட்டார் லைலா.
இந்திய அழகி வாசுகி சுங்க வல்லியால் இறுதி பத்து பேரில் ஒருவராகக்கூட இடம்பிடிக்க முடியவில்லை. தேசிய உடை அணிந்து பவனி வரும் சுற்றில் ஆடைகள் குறிப்பிட்ட நேரத்திற்குக் கிடைக்காததால் அவர் அந்த வாய்ப்பைத் தவற விட்டார். 11 ஆண்டுகளுக்குமுன் லாரா தத்தா ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டம் வென்றார். அன்றுமுதல் அழகிப்பஞ்சம் நீடிக்கிறது.
ஜெகதீஷ்