உற்சாகமான இசை, கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும். ஆனால் இசைக்கு சொந்தக்காரரே ஆடும் அனுபவம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திடம் மட்டும் காணக் கிடைக்கும் அற்புதம். மேடைகளில் தோன்றி தன் இசைக்குத் தானும் ஆடி, கேட்பவர்களையும் ஆடவைக்கும் டி.எஸ்.பியின் திறன் இப்போது வெள்ளித்திரைக்கும் ஏறி ரசிகர்களைப் பரவசப்படுத்தவிருக்கிறது. இந்த ஆச்சரிய ஆட்டம் அரங்கேறியிருப்பது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்தி ருக்கும் ‘வெடி’ படத்தில்.
இந்த நடன வெடிக்கான ‘ஸ்பார்க்’ எப்படிக் கிளம்பியது என்பதை தேவிஸ்ரீ பிரசாத்தே விளக்கினார்...
‘‘என்னை நடிக்கச் சொல்லி பெரிய தயாரிப்பாளர்கள் கேட்டும்கூட நான் இதுவரை மறுத்து வந்திருக்கேன். ஏன்னா, என்னோட வேலை இசையமைக்கிறது. ஆனா பேஸிக்கா அத்லெட்டான நான், என் ஃபிட்னஸ் மேல அதிக அக்கறை செலுத்தறதால ஜிம்முக்குப் போய் ஒர்க் அவுட் பண்றதை வழக்கமா வச்சிருக்கேன். வெளிநாட்டு இசைக்குழுக்கள் பாடிக்கிட்டே ஆடறதைப் போல, என் பாடல்களுக்கு மேடைகள்ல நானே ஆடி ரசிகர்களோட பரவசத்தை நேரடியா ரசிச்சுக்கிட்டிருக்கேன்.
இந்த சூழ்நிலைல திடீர்னு பிரபுதேவா என்னை வந்து பார்த்தார். அவரோட டைரக்ஷன்ல அமைஞ்ச முதல் படமான ‘நூ ஒஸ்தானன்டே நேனொடன்தானா...’ படத்துக்கு நான்தான் இசையமைச்சேன். அதிலேர்ந்தே அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனா அப்ப அவர் சொன்னதைக் கேட்டப்ப நானே ஆட ஆரம்பிச்சேன். சந்தோஷ ஆட்டம் இல்லை. தடுமாற்றமான ஆட்டம். அவர் கேட்டது, ‘‘என்னோட ‘வெடி’ படத்தில ஒரு பாடலுக்கு நீங்க ஆடணும்...’’ங்கிறதுதான். ‘‘வேண்டவே வேண்டாம்...’’னு மறுத்தேன். நான் தொழில்முறை டான்சரும் கிடையாது. ஆனா பிரபுதேவா விடலை.
‘‘நீங்க மேடையில பெர்ஃபார்ம் பண்றதையும், அதுக்கு ரசிகர்கள்கிட்ட எவ்வளவு வரவேற்பு இருக்குங்கிறதையும் பார்த்திருக்கேன். நான் இருக்கேன். வாங்க பண்ணலாம்...’’னு கேட்டார். இந்திய சினிமாவில முன்னணி டான்சர்... அவரோட ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலை ஸ்கூல் மேடைகள்ல ஆடி சந்தோஷப்பட்டவன் நான். அவரே நம்பிக்கை வச்சுக் கேட்கும்போது மறுக்க முடியாம ‘ஓகே’ சொல்லிட்டேன்.
இந்தப் பாடல்ல என்ன சிறப்புன்னா, இதுவரை நான் மேடைல ஆடிய பாடல்களெல்லாமே நானே இசையமைச்சுப் பாடியவை. இந்தப் படத்துக்கு நான் இசையமைக்கவும் இல்லை. பாடவும் இல்லை. விஜய் ஆன்டனியோட இசைல நரேஷ் அய்யரும், ஆன்டிரியாவும் பாடியிருந்த பாடலுக்கு நானும், சமீரா ரெட்டியும் ஆடினோம்.
சமீராவோட அறிமுகப் பாடல் இது. சமீரா நடந்துபோனா பின்னாடியே ஒரு இளவட்டம் நிழல் போலத் துரத்தும்ங்கிற மாதிரியான கான்செப்ட்ல அவங்களைத் துரத்தி நான் பாடற பாடல் அது. ‘காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே...’ங்கிற அந்தப் பாடலை வெஸ்டர்ன் பீட்ல அழகா இசையமைச்சிருந்தார் விஜய் ஆன்டனி. அதை பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃப் பண்ண, அங்கங்கே ‘கியூட் டச்’கள் கொடுத்து அழகாக்கினார் பிரபுதேவா. முக்கியமா குளோஸ் அப்கள்ல என்கிட்டேர்ந்து ஆச்சரியமான எக்ஸ்பிரஷன்களை வாங்கினார் அவர்.
ஸ்டேஜ் புரோ கிராம்கள்லயே பார்த்தவுடனேயே ஆடிடுவேன். அதனால பிருந்தா மாஸ்டர் சொல்லச்சொல்ல மடமடன்னு முடிக்கவே அவங்க ஆச்சரியப்பட்டுப் போனாங்க. சில வேளைகள்ல சில மூவ்மென்ட்களை மாத்திக்கொடுத்தப்பவும் அதைப் புரிஞ்சுக்கிட்டு நான் ஆடியப்ப, ‘‘நடனம் தெரிஞ்சவங்களே இது போல சேஞ்ச் பண்ணிக் கொடுக்கும்போது தடுமாறுவாங்க. நீங்க உடனே பிக் அப் பண்ணிக்கிறீங்களே..!’’ன்னு பிரபுதேவாவும், பிருந்தாவும் பாராட்டினாங்க. சைதன்ய ராவ் கொடுத்த அழகழகான காஸ்ட்யூம்கள்ல கொல்கத்தா பிரிட்ஜ்லயும் இங்கே சென்னைலயும் அதுக்கான காட்சிகளை எடுத்தார் பிரபுதேவா.
சமீராவும் என் ஆட்டத்தைப் பார்த்து, ‘‘உங்க டான்ஸ்ல ஸ்டைலும், அணுகுமுறையும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. நான் அதை ரசிக்கிறேன்...’’னு சொன்னாங்க. ஒரு ஆர்ட்டிஸ்ட் இப்படிச் சொன்னது சந்தோஷமா இருந்தது. இப்ப எடிட்டிங்லாம் முடிஞ்ச நிலைல, ‘பாடல் சூப்பரா வந்திருக்கு’ன்னு பிரபுதேவா எஸ்.எம்.எஸ் அனுப்பினார். நான் இன்னும் பாடலைப் பார்க்கலை.
ரசிகர்களோட த்ரில்லோடவே நானும் என்னைப் பெரிய திரையில பார்க்க ஆவலா இருக்கேன். ஆனா என்ன ஒண்ணு... என்னை நடிக்கக்கேட்டு நான் மறுத்தவர்களெல்லாம் ‘நாங்க கேட்டா நடிக்க மாட்டே... பிரபுதேவா கேட்டா நடிப்பியா..?’ங்கிற ரேஞ்சில உரிமையோட கேக்கறாங்க. அவங்களை அன்பால சரிக் கட்டணும்..!’’
வேணுஜி