எலும்பும் தோலுமாக அந்தப் பிஞ்சுகளின் தோற்றமே நிலைமையின் வீரியத்தை உணர்த்துகிறது. சோமாலிய மக்களின் சோகம் களைய உலகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஐ.நா. போன்ற அமைப்புகள் இருந்தென்ன லாபம்?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
தந்தையை இழந்த சோகம் மிச்சமிருந்தாலும் ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் குறித்த கேள்விக்குப் பக்குவத்துடன் பதில் சொல்லியிருந்தார்கள் எட்வர்டு ஜோசப்பின் மகள்கள்.
- மனோகரன், திருச்சி.
இன்னொரு சினிமாவைக் காப்பியடிக்கிற கலாசாரத்தை மீடியாதான் திருத்த வேண்டும் என்கிறார் செல்வராகவன். 'கற்பனை ஒரேமாதிரி இருக்காதா' என வியாக்கியானம் பேசுபவர்களை என்ன செய்ய முடியும்? இயக்குனர்களாகப் பார்த்துத் திருந்தாத வரை, காப்பியடித்தலையும் கட்டுப்படுத்த முடியாதென்றே தெரிகிறது.
- ப.லக்ஷ்மிகாந்தன், புதுக்கோட்டை.
அலைவரிசை ஒத்துப்போனால் பிரச்னைகள் ஓடிப்போகத்தானே செய்யும்? வெங்கட்பிரபு & சக்தி சரவணன் ஜோடியின் வெற்றி ரகசியம் இதுதான்.
- சரவணக்குமார், மயிலாடுதுறை.
எங்கள் அபிமான டிவி நடிகைகளின் பேட்டிகளை வாராவாரம் தந்து அசத்துகிறீர்கள். 'மிஸ் கண்ணழகி' ஸ்ரீலக்ஷ்மியின் பேட்டி ரசிக்கும்படி இருந்தது.
- புனிதவதி, தஞ்சாவூர்..
சுவடுகளில் கணபதி ஸ்தபதி பற்றிய சேதி படித்ததும், இருவாரங்களுக்கு முன் வெளியாகியிருந்த அவரது பேட்டிதான் கண்முன் வந்தது.
- ச.தியாகராஜன், பொள்ளாச்சி. .
'எவரது தொலைபேசி அழைப்பையும் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிப்பதில்லை' என்று தெரிந்துகொள்ள வைத்தது நியூஸ் வே.
- சண்முகசுந்தரி, ராமநாதபுரம்.
'பொக்கே'யில் பணம் சம்பாதிக்க வழிசொல்லித் தந்த 'வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்' பகுதி, எங்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும் என்று நம்புகிறோம்.
- மரகதச்செல்வி, பனையடிப்பட்டி.