மண்ணின் மைந்தன்!



Untitled Document



பசிக்காக ரொட்டித்துண்டைத் திருடுகிறவர்கள் பரிதாபமாக மாட்டிக்கொள்கிற நாட்டில், கள்ளத்தனமாக பொதுச்சொத்தைத் தின்ற ரெட்டி சகோதரர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். சட்டமும் ஆட்சியும் எப்படி அனுமதித்ததோ தெரியவில்லை!
- சத்தியநாராயணன், சென்னை-61.


விளை நிலங்களை விலைநிலங்களாக்கி வரும் கூட்டத்துக்கு மத்தியில் அபிநவம் கிராமத்து ஜெயராமன் ஒரு ஆச்சரிய மனிதர். 'மண்ணின் மைந்தன்' பட்டத்துக்குத் தகுதியானவர்!
- ஆர்.ஜெயஸ்ரீ, கோவை-6.


 
'ஓய்வென்பது மனசுக்கில்லை' என்று புரிய வைத்தது 'அறுபதில் தொடங்குது வாழ்க்கை' கட்டுரை. சீனியர் சிட்டிசன்களின் அனுபவங்கள் பலருக்கும் பயனுள்ளவை.
 
- பானு பெரியதம்பி, சேலம்-30.


எலும்பும் தோலுமாக அந்தப் பிஞ்சுகளின் தோற்றமே நிலைமையின் வீரியத்தை உணர்த்துகிறது. சோமாலிய மக்களின் சோகம் களைய உலகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஐ.நா. போன்ற அமைப்புகள் இருந்தென்ன லாபம்?
 
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.


தந்தையை இழந்த சோகம் மிச்சமிருந்தாலும் ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் குறித்த கேள்விக்குப் பக்குவத்துடன் பதில் சொல்லியிருந்தார்கள் எட்வர்டு ஜோசப்பின் மகள்கள்.
- மனோகரன், திருச்சி.


இன்னொரு சினிமாவைக் காப்பியடிக்கிற கலாசாரத்தை மீடியாதான் திருத்த வேண்டும் என்கிறார் செல்வராகவன். 'கற்பனை ஒரேமாதிரி இருக்காதா' என வியாக்கியானம் பேசுபவர்களை என்ன செய்ய முடியும்? இயக்குனர்களாகப் பார்த்துத் திருந்தாத வரை, காப்பியடித்தலையும் கட்டுப்படுத்த முடியாதென்றே தெரிகிறது.
- ப.லக்ஷ்மிகாந்தன், புதுக்கோட்டை.


அலைவரிசை ஒத்துப்போனால் பிரச்னைகள் ஓடிப்போகத்தானே செய்யும்? வெங்கட்பிரபு & சக்தி சரவணன் ஜோடியின் வெற்றி ரகசியம் இதுதான்.
- சரவணக்குமார், மயிலாடுதுறை.


எங்கள் அபிமான டிவி நடிகைகளின் பேட்டிகளை வாராவாரம் தந்து அசத்துகிறீர்கள். 'மிஸ் கண்ணழகி' ஸ்ரீலக்ஷ்மியின் பேட்டி ரசிக்கும்படி இருந்தது.
- புனிதவதி, தஞ்சாவூர்..


சுவடுகளில் கணபதி ஸ்தபதி பற்றிய சேதி படித்ததும், இருவாரங்களுக்கு முன் வெளியாகியிருந்த அவரது பேட்டிதான் கண்முன் வந்தது.
 
- ச.தியாகராஜன், பொள்ளாச்சி.    .


'எவரது தொலைபேசி அழைப்பையும் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிப்பதில்லை' என்று தெரிந்துகொள்ள வைத்தது நியூஸ் வே.
 
- சண்முகசுந்தரி, ராமநாதபுரம்.


'பொக்கே'யில் பணம் சம்பாதிக்க வழிசொல்லித் தந்த 'வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்' பகுதி, எங்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும் என்று நம்புகிறோம்.
- மரகதச்செல்வி, பனையடிப்பட்டி.