ஜென் Zதான் அதிகம் ஆபீஸ் பாலிடிக்ஸ் செய்கிறார்கள்!



ஆம். ஆபீஸ் பாலிடிக்ஸில் Gen Z தலைமுறையினர் கைதேர்ந்தவர்களாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.சிறு தொழிற்சாலை முதல் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரையில், அங்கு தொழில்புரிபவர்கள் இருவகைகளில் அடங்கி விடுவர். ஒன்று, பணியிட அரசியல் செய்பவர்கள் அல்லது அதில் சிக்கியவர்கள். பணியிட அரசியலில் சிக்காமல் பதவி உயர்வு பெறுபவர்களைவிட, அரசியல் பலவும் செய்து பதவி உயர்வு பெறுவோர்தான் அதிகம்.

அந்த வகையில், பணியிட அரசியலில் ஜென் இசட் மற்றும் மில்லினியல் என்றழைக்கப்படும் (1980 முதல் 2010 வரை) ஜெனரேஷன் ஆகியோர் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் ‘ரெஸ்யூம் நவ்’ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, 1945 முதல் 1980 வரையிலான பூமர் மற்றும் ஜென் எக்ஸ் தலைமுறையினரைவிட இரண்டு மடங்கு அதிகமாக பணியிட அரசியலில் இவர்கள் ஈடுபடுவதாக ஆய்வு கூறுகிறது.

பணியிடத்தில் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் தவறுகளின் பழியை, வேறொருவர் மீது சுமத்துவதில் ஜென் இசட் தலைமுறையினர் 17 சதவிகிதமும், மில்லினியல் தலைமுறையினரில் 18 சதவிகிதமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், ஜென் எக்ஸ் தலைமுறையில் 8 சதவிகிதமும், பூமர் தலைமுறையில் 9 சதவிகிதம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, நான்கு தொழிலாளர்களில் ஒருவர் வீதம் தங்கள் மேலாளர் வேண்டுமென்றே தங்களை தோல்வியடையச் செய்ததாகக் கூறுகின்றனர். ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர்ச்சி தகவல்களாக, தங்களின் சக ஊழியர்களின் வேலையை தாங்களே கெடுத்து விட்டதாக 40 சதவிகிதத்தினர் ஒப்புக்கொண்டனர். தங்களின் சக ஊழியர்களால் தாங்கள் பணியை இழந்துவிட்டதாக 61 சதவிகிதத்தினரும், அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்று 73 சதவிகிதத்தினரும் ஆய்வு நடத்தியவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பணியிடங்களில் 26 சதவிகிதத்தினர் தங்களின் தவறுகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், 21 சதவிகிதத்தினர் தங்கள் சக ஊழியரைப் பற்றி எதிர்மறையான தகவல்களைப் பகிர்ந்தும், ஊழியர் ஒருவரின் பதவி உயர்வுக்கு உதவும் முக்கிய தகவல்களை 10 சதவிகிதத்தினர் நிறுத்துவதும் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

என்.ஆனந்தி